மூத்த குடிமகன்களுக்கு கொரோனா மருந்துகளை கொடுக்கலாம்; ஆனால்... டாக்டர் எச்சரிக்கை
பருவ வயதினருக்கு மோல்னுபிரவிர் என்ற கொரோனா மருந்துகளை கொடுக்க கூடாது என கொரோனா பணிக்குழு தலைவர் பேட்டியில் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, அமெரிக்காவின் மெர்க் நிறுவனம் கேப்சூல் வடிவிலான மோல்னுபிரவிர் என்ற மாத்திரையை உருவாக்கி உள்ளது.
இந்த மாத்திரையை இந்தியாவில் டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் தயாரித்து வழங்க, அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இந்த மாத்திரையை குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் உற்பத்தி செய்து, வினியோகம் செய்யும்.
இதேபோன்று, இந்தியாவில் மொத்தம் 13 நிறுவனங்கள் இந்த மாத்திரையை உற்பத்தி செய்யும். இந்த மாத்திரை ஒன்றின் விலை ரூ.35 ஆகும். கொரோனா நோயாளிக்கு 5 நாட்கள் சிகிச்சைக்காக 40 கேப்சூல்களின் மொத்த விலை ரூ.1,400 ஆக இருக்கும்.
இந்த வாரம் இந்தியா முழுவதுமுள்ள மருந்து கடைகளில் இந்த மாத்திரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், நோய் எதிர்ப்பு ஆற்றலுக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் பணிக்குழு தலைவரான மருத்துவர் என்.கே. அரோரா கூறும்போது, மோல்னுபிரவிர் மருந்துகள் மூத்த குடிமகன்களுக்கு குறிப்பிடும்படியாக இணை நோய்கள் கொண்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இந்த மருந்துகளை பருவ வயதினருக்கு கொடுக்க கூடாது என்று கூறியுள்ளார்.
வரும் நாட்களில் கொரோனா எண்ணிக்கை விரைவாக அதிகரிக்கும் என ஐ.ஐ.டி. மாதிரிகள் தெரிவிக்கின்றன. உண்மையில் அது நடந்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த முறையான அணுகுமுறை மற்றும் தடுப்பூசி செலுத்துதல் ஆகிய இரண்டும் முக்கிய காரணிகளாக உள்ளன என அவர் கூறியுள்ளார். ஊரடங்கு போன்ற நிர்வாக நடவடிக்கைகளும் இதற்கு உதவும் என்று அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story