நீங்களும் ஆகலாம் இயற்கை விவசாயி : சில்லறை வியாபாரத்தில் சிறகடிக்கும் தஞ்சை விவசாயி


நீங்களும் ஆகலாம் இயற்கை விவசாயி : சில்லறை வியாபாரத்தில் சிறகடிக்கும் தஞ்சை விவசாயி
x
தினத்தந்தி 11 Nov 2018 11:18 AM GMT (Updated: 11 Nov 2018 12:17 PM GMT)

கடிதங்களையும், பார்சல்களையும் கொரியரில் அனுப்புவதை பார்த்திருப்போம். இயற்கை விவசாயி சச்சிதானந்தமோ அரிசி, பருப்பு, நாட்டு சர்க்கரை, செக்கு எண்ணெய் போன்றவற்றை கொரியரில் அனுப்பி சில்லறை விற்பனையில் சிறப்பான லாபம் ஈட்டி வருகிறார்.

வாடிக்கையாளர்களுக்கு விலைப் பட்டியலை எஸ்.எம்.எஸ்.சில் அனுப்புவது, ஆன்-லைன் பரிவர்த்தனை மூலம் பணத்தை பெற்றுக்கொள்வது என அவர் கையாளும் ஒவ்வொரு வழிமுறையும் வித்தியாசமானதாக இருக்கிறது.

அவரை சந்திப்பதற்காக தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூருக்கு சென்று இருந்தோம். அய்யம்பேட்டை பேருந்து நிலையத்தில் இறங்கியதும் அங்கு வந்த சச்சிதானந்தம் மாத்தூரில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து சென்றார். வரவேற்பறை போன்று இருந்த அந்த அறையின் ஓரத்தில் அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அருகில் இருந்த மர அலமாரியில் நாட்டு சர்க்கரை, சோள மாவு, உளுந்து, எண்ணெய் பாட்டில்கள் அடுக்கப்பட்டிருந்தன.

சச்சிதானந்தத்துடன் பேசிக் கொண்டிருந்தபோது, அவர் இதற்கு முன்பு லண்டனில் 10 ஆண்டுகள் புத்தக விற்பனையாளராக பணிபுரிந்ததை தெரிவித்தார்.

‘‘டிகிரி முடிச்சுட்டு 15 வருஷம் விவசாயம் பண்ணிக்கிட்டு இருந்தேன். அடுத்து பிசினஸ் பண்றதுக்காக 2006-ல் லண்டன் போனேன். 10 வருஷம் அங்கே இருந்தேன். குடும்ப சூழ்நிலை காரணமாக 2015-ல் லண்டனில் இருந்து சொந்த ஊரான தஞ்சைக்கே திரும்ப வந்துட்டேன். குத்தகைக்கு விட்டிருந்த பாரம்பரிய நிலத்தை திருப்பி, நானே இயற்கை விவசாயம் பண்ணலாம்னு முடிவு எடுத்தேன். அதுக்காக சுபாஷ் பாலேக்கர் ஐயா நடத்துன ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாய பயிற்சி வகுப்பில் கலந்துக்கிட்டேன். பின்பு ஈஷா விவசாய இயக்கம் நடத்திய சில பயிற்சிகளிலும் இடம்பிடித்தேன். அதில் கிடைத்த அனுபவங்கள் மூலம் 3 வருஷங்களாக இயற்கை விவசாயம் பண்ணிக்கிட்டு இருக்கேன்.

மார்க்கெட்டிங் துறையில் எனக்கு இருந்த அனுபவங்கள் இயற்கை விவசாயத்துக்கும் கைகொடுத்தது. நான் விளைவிக்கிற பொருட்களை நானே நேரடியாக சில்லரையாக விற்பனை செய்ய ஆரம்பிச்சேன். அதுக்கு சில யுக்திகளையும் அன்றாட பழக்கமாக மாத்திக்கிட்டேன்.

நான் எங்கே போனாலும் நான் விளைவித்த அரிசியையோ, பருப்பையோ பையில் கொஞ்சம் எடுத்துட்டு போயிருவேன். என்கூட பேசுறவங்க அவர்களாகவே, என்ன அரிசியெல்லாம் கையில் வச்சுக்கிட்டு திரியுறீங்கன்னு கேட்பாங்க. அப்போது நான் அதன் பெருமையை விளக்கமாக எடுத்து சொல்வேன்.

‘இது இயற்கை முறையில எந்த ரசாயனமும் போடாமல் விளைவித்தது. வீட்டுக்கு எடுத்துட்டு போயி சமைச்சு சாப்பிட்டு பாருங்க. பிடிச்சிருந்தா கால் பண்ணுங்க வீட்டுக்கே அரிசியை பார்சல் செய்து அனுப்புறேன்’னு சொல்லி என்னோட போன் நம்பரை அவர்களிடம் கொடுத்திடுவேன். கூடவே கொஞ்சம் சாம்பிளும் கொடுத்துருவேன். இந்த முறையில் தான் என்னோட கஸ்டமர்ஸ் படிப்படியா அதிகரிக்க ஆரம்பிச்சாங்க” என்று தன் விற்பனை யுக்தியை பகிர்ந்துகொண்டார் சச்சிதானந்தம்.

நெல் தான் அவருடைய பிரதான விளைபொருள். அறுவடை செய்யும் நெல்லை அவர் நெல்லாக விற்பது கிடையாது. அதை 3 நாட்கள் வெயிலில் நன்கு காய வைத்து, அதை சாக்கு மூட்டையில் கட்டி 6 மாதங்கள் குடோனில் சேமித்து வைக்கிறார். அவ்வாறு சேமித்து வைப்பதால் அரிசியின் சுவையும் தரமும் அதிகரிப்பதாக கூறுகிறார். 6 மாதங்களுக்கு பிறகு மில்லில் கொடுத்து அதை அரிசியாக மாற்றி 10 கிலோ மற்றும் 25 கிலோ சிப்பங்களாக மாற்றிவிடுகிறார்.

இதுகுறித்து, அவர் சற்று விளக்கமாக சில விஷயங்களை பகிர்ந்துகொண்டார். “நான் பெரும்பாலும் பாரம்பரிய நெல் ரகங்களைதான் அதிகம் விளைவிக்கிறேன். எங்கள் பகுதியில் பாசன வசதி நல்லா இருக்கு. அதனால் முப்போகமும் நெல் அறுவடை பண்ணிக்கிட்டு இருக்கேன். இப்போ அறுபதாம் குறுவை அறுவடை பண்ணப்போறேன். இதுக்கு முன்னாடி வெள்ளை பொன்னி, குள்ள பொன்னி, சீரக சம்பா, சாவித்ரி போன்ற ரகங்களை அறுவடை பண்ணி வித்திருக்கேன். ஒரு கிலோ அரிசி 70 ரூபாய்க்கு விக்கிறேன்.

முழுக்க முழுக்க சில்லறை வியாபாரம் தான் பண்றேன். உள்ளூர்ல இருக்குறவங்க நேர்ல வந்து வாங்கிட்டு போயிருவாங்க. வெளியூர்காரங்களுக்கு கொரியரில் அனுப்புறேன். ஐந்து கிலோ முதல் அனுப்பிவைப்பேன்.

அன்றாடம் பயன்படுத்துற 3 முக்கிய பொருட்களை நான் விற்பனை பண்றேன். ஒன்று- சாப்பாட்டு அரிசி; இட்லி, தோசை பண்றதுக்கான இட்லி அரிசி, உளுந்து. இரண்டு- எண்ணெய் வகைகள். மூன்று- நாட்டு சர்க்கரை. இவைகளுக்கு எல்லா நேரமும் தேவை இருந்துக்கிட்டே இருக்கும்.

என்னோட வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை கைவசம் இருக்கும் பொருட்களின் விவரத்தையும், அதோட விலையையும் எஸ்.எம்.எஸ். பண்ணிடுவேன். அதை பார்த்துவிட்டு அவர்கள் ஆர்டர் பண்ணுவாங்க. சென்னை, கோவையில் இருந்து அதிக ஆர்டர் வருது. இதுதவிர, தமிழ்நாடு முழுக்க இருந்தும் ஆர்டர் வரும்.

கொரியரில் அவங்களோட வீட்டுக்கே நேரடியாக பொருட்கள் போய் சேர்ந்திடும். டெலிவரி ஆனதும் என்னுடைய பேங்க் அக்கவுண்ட்டுக்கு பணம் அனுப்பி வச்சிடுவாங்க. இப்படி சில்லறை முறையில் நேரடி விற்பனை பண்றது மூலமாக 20 சதவீதம் வரை கூடுதல் லாபம் கிடைக்குது” என்றார் சச்சிதானந்தம்.

காலை உணவை முடித்துக்கொண்டு அருகில் இருந்த அவரது வயலுக்கு சென்றோம். தற்போது 14 ஏக்கரில் நெல் பயிரிட்டுள்ளார். நாற்றுப் பருவம், களை எடுக்கும் பருவம், கதிர் முதிர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருக்கும் பருவம் என 3 பருவங்களையும் அவரது வயலில் பார்க்க முடிந்தது. அறுவடைக்கு மட்டுமின்றி நாற்று நடுவதற்கும் இயந்திரத்தை தான் அவர் பயன்படுத்துகிறார். நன்கு தூர்பிடித்து அறுவடைக்கு தயாராக இருந்தது, அறுபதாம் குறுவை ரக நெல்.

“ஒரு இயற்கை விவசாயி தன்னுடைய விளைபொருட்களை நேரடியாக மக்களிடம் விற்கும்போது விவசாயிக்கு நல்ல லாபம் கிடைக்குது. மக்களுக்கும் விஷமில்லாத உணவு கிடைக்குது. அதனால், முடிஞ்ச அளவுக்கு எல்லா இயற்கை விவசாயிகளும் நேரடி விற்பனையில ஈடுபடணும். நேரடி விற்பனை மூலம்தான் விவசாயிகளால் இயற்கை விவசாயத்தை மீட்டெடுக்க முடியும்” என்றார் சச்சிதானந்தம்.

இயற்கை விவசாயம் தொடர்பான ஆலோசனைகள் பெறவும், ஈஷா விவசாய இயக்கம் நடத்தும் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ளவும் agro@ishaoutreach.org என்ற ஈமெயில் முகவரியில் தொடர்புகொள்ளலாம்.

இயந்திர நாற்று நடவு

இயந்திர நாற்று நடவால் ஏற்படும் பயன்கள் குறித்து இயற்கை விவசாயி சச்சிதானந்தம் கூறிய சில தகவல்கள்:

* எளிய முறையில் நாம் விரும்பும் நேரத்தில் விரைவாக நாற்று நட முடியும். கூலி ஆட்களை எதிர்பார்த்து நேரத்தை வீணடிக்க வேண்டிய தேவை இருக்காது.

* நாம் விரும்பும் எண்ணிக்கையிலும் இடைவெளியிலும் மிக துல்லியமாக நாற்றுக்களை நட முடியும். இதனால், விதை நெல் மிச்சமாகும். போதிய சூரிய ஒளியும் காற்றோட்டமும் கிடைத்து பயிர் நன்கு தூர் பிடிக்கும்.

* ஆட்களை கொண்டு நடும் போது சிலர் மண்ணில் ஆழமாக நட்டுவிடுவார்கள். இதனால் அந்த பயிர் முளைப்பதில் சற்று தாமதம் ஆகும். இயந்திர நடவில் இந்த பிரச்சினை ஏற்படாது.

* ஆட்களை கொண்டு நாற்று நடுவதை காட்டிலும் இயந்திர நடவில் செலவு குறைவு.

Next Story