வீட்டை மேலே தூக்கும் தொழில்நுட்பம்


வீட்டை மேலே தூக்கும் தொழில்நுட்பம்
x
தினத்தந்தி 8 Dec 2018 5:29 AM GMT (Updated: 8 Dec 2018 5:29 AM GMT)

வீடு குழிக்குள் சென்றது போன்ற தோற்றம் ஏற்படுகிறதா? பல வீடுகளிலும் இதை பார்த்திருப்போம்.

வாசல்படி அப்படியே தெருவோடு தெருவாக சமமாக இருக்கும். மழை பெய்தால், மழைநீர் அப்படியே வீட்டுக்குள் வந்துவிடும்.

இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டுமென்றால், ஒன்று வீட்டை இடித்துவிட்டு புதிதாக கட்ட வேண்டும். இல்லையென்றால் வீட்டை மேலே உயர்த்த வேண்டும். கட்டுமான பொருட்களின் விலை விண்ணை முட்டும் இந்த காலத்தில், வீட்டை இடித்துவிட்டு புதிதாக இன்னொரு வீட்டை கட்ட அவ்வளவு சுலபத்தில் யாரும் விரும்ப மாட்டார்கள். அப்படியானால், வீட்டை மேலே உயர்த்த முடியுமா? என கேட்கலாம்.

நிச்சயம் முடியும். அதற்கும் புதிய தொழில்நுட்பம் வந்துவிட்டது. வீட்டை இடிக்காமல் ஜாக்கிகள் மூலம் அப்படியே பக்கவாட்டில் நகர்த்தி, வீட்டை மேலே உயர்த்தி கொள்ள முடியும்.

இந்த தொழில்நுட்பத்தில் 60 டன் எடை கொண்ட அடுக்குமாடி வீட்டைக்கூட பெயர்த்து நகர்த்திவிட முடியும். அதற்கு தகுந்தாற்போல் இதில் ஜாக்கிகளை பயன்படுத்துவார்கள், அவ்வளவுதான். ஜாக்கி என்பதும், விஷேசமான ஜாக்கி என்று நினைக்க வேண்டாம். நான்கு சக்கர வண்டிகளில் டயர் மாற்ற பயன்படுத்துவார்களே அதே ஜாக்கி தான் இதிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் வட இந்திய மாநிலங்களில் மிகவும் பிரபலம். இப்போது தமிழகத்திலும் இந்த தொழில்நுட்பம் மூலம் வீட்டை நகர்த்தி, 3 முதல் 5 அடி அளவுக்கு மேலே உயர்த்திக் கொள்வதை பார்க்க முடிகிறது.முதலில் வீட்டின் சுவர்களை சுற்றிப் பள்ளம் தோண்டிக் கொள்கிறார்கள். அதன் கீழ் ஒவ்வொரு பக்கமாக ‘ஜாக்கி’களை வைக்கிறார்கள். இதனால் கட்டிடத்தின் முழு பளுவையும் ஜாக்கிகள் தாங்கிக் கொள்ளும். இதில் இடத்தைப் பொறுத்து ஜாக்கிகளின் எண்ணிக்கை மாறும். இந்தப் பணி முடிந்த பிறகு, பணியாளர்கள் ஒன்று சேர்ந்து ஒரே நேரத்தில் ‘ஜாக்கி’களை இயக்கி மேலே உயர்த்துகிறார்கள்.

பின்னர் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட சிமெண்ட் செங்கற்களை வைத்துத் தேவையான அளவு கட்டுகிறார்கள். செங்கற்களை வைத்து கட்டிய பிறகு பக்கவாட்டில் நகர்த்தப்பட்ட கட்டிடத்தை அதன் மேலே வைத்து இணைத்து மீண்டும் பூசிவிடுகிறார்கள். இந்த முறையில் வீட்டின் தரைத்தளம் மட்டுமே சேதமடையும். ஒயரிங், பிளம்பிங், சுவர்கள், கதவுகள், ஜன்னல்கள் என எதையும் தொடுவதில்லை. சுவர்களில் விரிசலும் ஏற்படுவதில்லை. தொடர்ச்சியாக பணி மேற்கொண்டால் 45 நாட்களுக்குள் பணியை முடித்துவிடலாம்.

ஒருவேளை வீட்டை நகர்த்தும்போது வீடு இடிந்தால் என்ன செய்வது? என கேட்கத்தோன்றும்.

பெரும்பாலும் வீட்டை பக்கவாட்டில் நகர்த்தும் முன்பே கட்டிடத்தின் உறுதித்தன்மையை உறுதி செய்து கொள்வார்கள். அதன்பிறகுதான் பணியை தொடங்குவார்கள். கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக, வீடு இடிந்தால் சில நிறுவனங்கள் கட்டுமானத்துக்கான இழப்பீட்டைக் கொடுக்கவும் செய்கின்றன. ஆனால், இதையெல்லாம் குறிப்பிட்ட நிறுவனத்துடன் முன்கூட்டியே பேசி ஒப்பந்தம் செய்து கொள்வது நல்லது.

Next Story