ஜனவரி 15-ந் தேதி நிலவரப்படி சர்க்கரை உற்பத்தி 8.23% உயர்ந்து 146.86 லட்சம் டன்னாக அதிகரிப்பு ஆலைகள் சங்கம் தகவல்


ஜனவரி 15-ந் தேதி நிலவரப்படி சர்க்கரை உற்பத்தி 8.23% உயர்ந்து 146.86 லட்சம் டன்னாக அதிகரிப்பு ஆலைகள் சங்கம் தகவல்
x
தினத்தந்தி 23 Jan 2019 6:43 AM GMT (Updated: 23 Jan 2019 6:43 AM GMT)

நடப்பு சந்தை பருவத்தில் சர்க்கரை உற்பத்தி 3.07 கோடி டன்னாக இருக்கும் என இஸ்மா தெரிவித்து இருக்கிறது. இது இச்சங்கத்தின் முந்தைய மதிப்பீட்டுடன் (3.15 கோடி டன்) ஒப்பிடும்போது 2.5 சதவீதம் குறைவாகும்...

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

புதுடெல்லி

நடப்பு ஆண்டு ஜனவரி 15-ந் தேதி நிலவரப்படி சர்க்கரை உற்பத்தி 8.23 சதவீதம் உயர்ந்து 146.86 லட்சம் டன்னாக அதிகரித்து இருக்கிறது என இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சர்க்கரை நுகர்வு

சர்வதேச அளவில் சர்க்கரை உற்பத்தியில் பிரேசில் முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன. ஆனால் சர்க்கரை நுகர்வில் இந்தியாவே முதலிடத்தில் உள்ளது. உள்நாட்டில் சர்க்கரை உற்பத்தியில் மகாராஷ்டிராவும், உத்தரபிரதேசமும் முன்னிலையில் உள்ளன. இதில் தமிழகம் நான்காவது இடத்தில் இருக்கிறது. நாட்டின் மொத்த சர்க்கரை உற்பத்தியில், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களின் பங்கு 70 சதவீதமாக உள்ளது.

நம் நாட்டில் சர்க்கரை பயன்பாடு ஏறக்குறைய 2.50 கோடி டன் என்ற அளவில் இருந்து வருகிறது. நம் நாட்டில் குளிர்பான நிறுவனங்கள், பேக்கரிகள், பிஸ்கெட் மற்றும் சாக்லெட் தயாரிக்கும் நிறுவனங்கள், ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரென்ட்டுகள் அதிக அளவில் சர்க்கரையை பயன்படுத்தி வருகின்றன.

கடந்த பருவங்களில்...

2013-14 பருவத்தில் (அக்டோபர்-செப்டம்பர்) சர்க்கரை உற்பத்தி, அதுவரை இல்லாத அளவிற்கு 2.83 கோடி டன்னை எட்டி இருந்தது. 2015-16 பருவத்தில் அது 2.51 கோடி டன்னாக குறைந்தது. 2016-17 பருவத்தில் 2.03 கோடி டன்னாக சரிவடைந்தது. எனினும் 2017-18 பருவத்தில் 3.25 கோடி டன்னாக அதிகரித்தது.

நடப்பு 2018-19 பருவத்தில் உற்பத்தி 2.90-3 கோடி டன் வரை இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டு இருந்தது. சென்ற பருவத்தின் உற்பத்தியுடன் ஒப்பிடும்போது இது சுமார் 8 சதவீதம் குறைவாகும். தற்போது மதிப்பீடுகள் மாறி வருவதால் சர்க்கரை உற்பத்தி மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு சந்தை பருவத்தில் சர்க்கரை உற்பத்தி 3.07 கோடி டன்னாக இருக்கும் என இஸ்மா தெரிவித்து இருக்கிறது. இது இச்சங்கத்தின் முந்தைய மதிப்பீட்டுடன் (3.15 கோடி டன்) ஒப்பிடும்போது 2.5 சதவீதம் குறைவாகும். இதில் மகாராஷ்டிராவில் உற்பத்தி 1.07 கோடி டன்னாகவும், கர்நாடகாவில் 42 லட்சம் டன்னாகவும் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இம்மாதம் 15-ந் தேதி நிலவரப்படி மொத்தம் 146.86 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி ஆகி உள்ளது. சென்ற ஆண்டின் இதே நாளில் அது 135.57 லட்சம் டன்னாக இருந்தது. ஆக, உற்பத்தி 8.23 சதவீதம் அதிகரித்து இருக்கிறது என சர்க்கரை ஆலைகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா

கணக்கீட்டுக் காலத்தில் மகாராஷ்டிராவில் சர்க்கரை உற்பத்தி அதிகபட்சமாக 57.25 லட்சம் டன்னாக உள்ளது. சென்ற ஆண்டின் இதே நாளில் அது 50 லட்சம் டன்னாக இருந்தது. அடுத்து உத்தரபிரதேசத்தில் 42 லட்சம் டன் அளவிற்கு சர்க்கரையை உற்பத்தி செய்துள்ளது. கர்நாடகாவில் சர்க்கரை உற்பத்தி (21.35 லட்சம் டன்னில் இருந்து) 26.76 லட்சம் டன்னாக உயர்ந்து இருக்கிறது. குஜராத்தில் 5.30 லட்சம் டன் உற்பத்தி ஆகி உள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் இணைந்து 3.10 லட்சம் டன் உற்பத்தி செய்து இருக்கின்றன. பஞ்சாப் 2 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்துள்ளது. தமிழகத்தில் சர்க்கரை உற்பத்தி 2 லட்சம் டன்னாக அதிகரித்து இருக்கிறது.

அடுத்த பருவத்தில் (2019 அக்டோபர்-2020 செப்டம்பர்) சர்க்கரை உற்பத்தி 2.80 கோடி டன் முதல் 2.90 கோடி டன் வரை இருக்கும் என தற்போதைய மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

இறக்குமதி வரி

கடந்த பருவத்தின் அதிக உற்பத்தி காரணமாக ஏற்றுமதியை அதிகரிக்கவும், உள்நாட்டில் கையிருப்பை குறைக்கவும் சர்க்கரை ஏற்றுமதி மீதான வரியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. ஏற்றுமதி சர்க்கரைக்கு முன்பு 20 சதவீத வரி விதிக்கப்பட்டது. இறக்குமதியாகும் சர்க்கரைக்கு வரி 100 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு முன் இறக்குமதி வரி 50 சதவீதமாக இருந்தது.

Next Story