இரண்டு வாரங்களில் வங்கிகள் வழங்கிய கடன் 14.5% வளர்ச்சி


இரண்டு வாரங்களில் வங்கிகள் வழங்கிய கடன் 14.5% வளர்ச்சி
x
தினத்தந்தி 15 Feb 2019 11:37 AM GMT (Updated: 15 Feb 2019 11:37 AM GMT)

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

மும்பை

பிப்ரவரி 1 வரையிலான இரண்டு வாரங்களில் வங்கிகள் வழங்கிய கடன் 14.5 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக பாரத ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

புள்ளிவிவரங்கள்

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் வருமாறு:-

பிப்ரவரி 1 நிலவரப்படி வங்கிகள் வழங்கிய கடன் ஏறக்குறைய ரூ.94.29 லட்சம் கோடியாக உள்ளது. இது 14.11 சதவீத வளர்ச்சியாகும். ஜனவரி 18 வரையிலான முந்தைய இரண்டு வாரங்களில் வங்கிகள் வழங்கிய கடன் 14.61 சதவீத வளர்ச்சி கண்டு ரூ.93.32 லட்சம் கோடியாக இருந்தது.

கணக்கீட்டுக் காலத்தில் வங்கிகள் திரட்டிய டெபாசிட் 9.63 சதவீதம் உயர்ந்து ரூ.121.22 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. முந்தைய இரண்டு வாரங்களில் திரட்டப்பட்ட டெபாசிட் 9.61 சதவீதம் அதிகரித்து ரூ.119.86 லட்சம் கோடியாக இருந்தது.

சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்தில் வங்கிகள் வழங்கிய உணவு அல்லா கடன் 12.8 சதவீதம் அதிகரித்துள்ளது. விவசாய கடன் 8.4 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. சேவைத் துறைக்கான கடன் 23.2 சதவீதம் உயர்ந்து இருக்கிறது. முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் வங்கிகள் வழங்கிய உணவு அல்லா கடன் 10 சதவீதம் உயர்ந்து இருந்தது. விவசாய கடன் 9.5 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தது. சேவைத் துறை கடன் 14.7 சதவீதம் உயர்ந்து இருந்தது. அதே சமயம் தனிநபர் கடன் 17 சதவீதம் குறைந்து இருக்கிறது. முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் அது 18.9 சதவீதம் வளர்ச்சி கண்டு இருந்தது

பாரத ரிசர்வ் வங்கியின் அறிக்கை ஒன்றில் இந்த புள்ளிவிவரங்கள் இடம் பெற்றுள்ளன.

உணவுக்கடன்

நிறுவனங்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட தனிநபர்களுக்கு வங்கிகள் வழங்கும் கடன் உணவு அல்லா கடனாகும். நெல், கோதுமை கொள்முதலுக்காக இந்திய உணவுக் கழகத்திற்கு வங்கிகள் வழங்குவது உணவுக்கடன் என்று அழைக்கப்படுகிறது. 

Next Story