உருக்கு பொருள்கள் பயன்பாடு 10 கோடி டன்னாக அதிகரிக்கும்


உருக்கு பொருள்கள் பயன்பாடு 10 கோடி டன்னாக அதிகரிக்கும்
x
தினத்தந்தி 12 April 2019 5:39 AM GMT (Updated: 12 April 2019 5:39 AM GMT)

நடப்பு 2019-ஆம் ஆண்டில் உருக்கு பொருள்கள் பயன்பாடு 10 கோடி டன்னாக அதிகரிக்கும இந்திய உருக்கு சங்கம் முன்னறிவிப்பு

இந்தியாவில், நடப்பு 2019-ஆம் ஆண்டில் உருக்கு பொருள்கள் பயன்பாடு 10 கோடி டன்னாக அதிகரிக்கும் என இந்திய உருக்கு சங்கம் முன்னறிவிப்பு செய்துள்ளது.

இந்தியா 3-வது இடம்

சர்வதேச கச்சா உருக்கு உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. சீனா முதலிடத்தில் இருந்து வருகிறது. ஜப்பான் இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கின்றன. நம் நாட்டின் மொத்த உற்பத்தியில் உருக்கு துறையின் பங்கு சுமார் 2 சதவீதமாக இருக்கிறது. மேலும் இந்தியாவின் 8 முக்கிய துறைகளில் ஒன்றாகவும் இது உள்ளது.

நம் நாட்டில் செயில், ஆர்.ஐ.என்.எல்., டாட்டா ஸ்டீல், எஸ்ஸார் ஸ்டீல், ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல், ஜிந்தால் ஸ்டீல் அண்டு பவர் (ஜே.எஸ்.பி.எல்) ஆகிய 6 நிறுவனங்கள் உருக்கு உற்பத்தியில் முன்னிலையில் இருந்து வருகின்றன. நாட்டின் மொத்த உருக்கு உற்பத்தியில் இந்த நிறுவனங்களின் பங்கு அதிகமாக உள்ளது.

2030-31-ஆம் நிதி ஆண்டுக்குள் கச்சா உருக்கு உற்பத்தி திறனை ஆண்டுக்கு 30 கோடி டன்னாகவும், உற்பத்தியை 25.50 கோடி டன்னாகவும் உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது கச்சா உருக்கு உற்பத்தி திறன் 10 கோடி டன்னாக இருக்கிறது.

நடப்பு 2019-ஆம் ஆண்டில், உள்நாட்டில் உருக்கு பொருள்கள் பயன்பாடு 10 கோடி டன்னாக உயரும் என இந்திய உருக்கு சங்கம் மதிப்பீடு செய்துள்ளது. இதன்படி 7.1 சதவீத வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இல்லாத புதிய சாதனை அளவாக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

2020 காலண்டர் ஆண்டில் உள்நாட்டு உருக்குப் பொருள்கள் பயன்பாடு 7.2 சதவீதம் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ள உருக்குச் சங்கம் நடப்பு 2019-20 மற்றும் வரும் 2020-21-ஆம் நிதி ஆண்டுகளிலும் பயன்பாடு இதே அளவிற்குத்தான் அதிகரிக்கும் என கணிப்பு வெளியிட்டு இருக்கிறது.

தனிநபர் பயன்பாடு

உள்கட்டமைப்பு துறைகளில் பெரும் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதும், வருங்காலத்தில் தனிநபர் உருக்கு பயன்பாடு நன்கு அதிகரிக்க உள்ளதும் இந்திய உருக்குத் தொழில் வளர்ச்சிக்கு வலுச்சேர்க்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story