மனதை அடக்குங்கள்.. வெற்றிகளை தொடருங்கள்..-ஸ்ரீமத் பரத்வாஜ் சுவாமிகள்


ஸ்ரீமத் பரத்வாஜ் சுவாமிகள்
x
ஸ்ரீமத் பரத்வாஜ் சுவாமிகள்
தினத்தந்தி 14 April 2019 7:02 AM GMT (Updated: 14 April 2019 7:02 AM GMT)

தமிழ்ப் புத்தாண்டு மலர்ந்திருக்கின்றது. தமிழ் இனமும், தமிழ் மொழியும் காலத்தால் மிகவும் தொன்மை வாய்ந்தது என்று வரலாறுகள் தெரிவிக்கின்றன. மேலும் எல்லா நாகரிகங்களுக்கும் முன்னோடியாக தமிழ் இனம் திகழ்ந்து கொண்டிருக்கிறது என்றும் நம் வரலாறு அறிவிக்கின்றது. இதற்காக நாம் பெருமிதம் கொள்கிறோம்.

நல்ல தொடக்கம் பாதி வெற்றி என்று சொல்வார்கள். அதே போல் சித்திரை திங்களாம் முதல் நாளில் நல்ல சிந்தனைகள் எழுந்தால் வருடம் முழுவதும் எல்லோருக்கும் வெற்றிகளே தொடரும்.

நம் முன்னோர்கள் சிறந்தவர்கள் என்ற சிந்த னையை நாம் மனதில் பதிந்தால்தான் நாமும் சிறந்தவர்களாக விளங்க முடியும். ஆகவே இப்புத்தாண்டுத் திருநாளில் நல்ல சிந்தனைகள் உருவாகட்டும்.

ஒரு சிறந்த மனிதனுக்கும், மிகவும் சாதாரண மனிதனுக்கும் இடையே வேறுபாட்டை ஏற்படுத்துவது எது? மனதுதான். அந்த மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும்.

மனித மனதின் ஆற்றலுக்கு எல்லையே இல்லை. எவ்வளவுக்கு மனதை ஒருநிலைப்படுத்துவீர்களோ அந்த அளவிற்கு ஆற்றலை ஒரு மையத்தில் உங்களால் குவிக்க முடியும். அதுவே வெற்றிக்கான முழு ரகசியம். இதை அறியாமல் மனதை சிதற விடலாமா? வைரச் சுரங்கம் உங்கள் அருகில் இருக்கும்போது வெறும் கண்ணாடித் துண்டுகளைத் தேடி அலையலாமா...? நவரத்தினங்கள் உங்கள் அருகில் இருக்கும்போது, பித்தளையை நாடலாமா?

எந்த சக்தியையும் நம்மால் புதிதாக உண்டாக்க முடியாது. அதை மேம்படுத்த மட்டுமே இயலும். எனவே நம்மிடம் ஏற்கனவே உள்ள பேராற்றல்களை மேம்படுத்தவும், நமது சங்கற்ப சக்தியால் வெறும் மிருக சக்தியாக இருப்பதை ஆன்மிக சக்தியாக மாற்றவும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

இதற்கான முதல் பாடம் மனதை ஓரிடத்தில் குவிப்பதே. பல இடங் களில் அலைந்து திரிகின்ற மனதை அடக்கி ஓரிடத்தில் நிறுத்த வேண்டும். தியானப் பயிற்சியால் மனம் அடங்குகிறது. அப்போது உங்களிடம் சிதறுண்டு கிடக்கும் சக்தி களெல்லாம் படிப்படியாக தூய சக்தியாக, ஆன்மிக சக்தியாக மாறுகிறது. அந்த நிலையில் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்குகிறது. எல்லா முயற்சிகளும் வெற்றிகளைத் தரு கிறது.

நீங்கள் எந்த மொழியில் பேசுகிறீர்கள் என்பதுகூட முக்கியமில்லை. பேசும் வார்த்தைகள் அலங்காரமாக இருக்க வேண்டும் என்பதும் அவசியமில்லை. இந்த மனித சமுதாயத்திற்கு கொடுப்பதற்கு ஏதேனும் உங்களிடம் இருக்கின்றதா? அதுவே முக்கியம். இருக்குமானால் மனமகிழ்ச்சியுடன் அதனைக் கொடுங்கள். எல்லா தானங்களிலும் மிக சிறந்த தானம் அறியாமையை அகற்றுகின்ற ஆன்மிக தானம் தான்.

காலங்காலமாக இந்த ஆன்மிக வெள்ளம் அலை அலையாக வெளிநாடுகளுக்கு பாய்ந்து சென்றிருக் கிறது. நிகழ்காலத்தில் மட்டுமல்ல, எதிர்காலத்திலும் உலக நாடுகளுக்கு நாம்தான் ஆன்மிகத்தை வழங்கப்போகிறோம். காடுகளில், பழங்களையும், காய்களையும் அருந்தி தவம் புரிந்த மகரிஷிகளின் வாரிசுகளாக நாம் இருக்கிறோம். அந்த பாரம்பரியமே நம் பாரம்பரியம். தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் இந்த அருமையான சிந்தனைகள் உங்கள் மூளையில் பதியட்டும். மன ஒருமைப்பாட்டின் மூலம் எல்லா வெற்றிகளும் தொடரட்டும்.

எல்லா ஐஸ்வர்யங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ அனைவரையும் ஆசீர்வதிக்கின்றோம்.

Next Story