புண்ணாக்கு ஏற்றுமதி 31% அதிகரிப்பு


புண்ணாக்கு ஏற்றுமதி 31% அதிகரிப்பு
x
தினத்தந்தி 16 April 2019 5:24 AM GMT (Updated: 16 April 2019 5:24 AM GMT)

2018-19-ஆம் நிதி ஆண்டில், புண்ணாக்கு ஏற்றுமதி 31% அதிகரிப்பு

மும்பை

2018-19-ஆம் நிதி ஆண்டில், ரூபாய் மதிப்பு அடிப்படையில் புண்ணாக்கு ஏற்றுமதி 31 சதவீதம் அதிகரித்து உள்ளது.

பருத்தி விதை

எள், கடுகு, பருத்தி விதை, சோயாபீன் உள்ளிட்ட பல்வேறு எண்ணெய் வித்துக்களில் இருந்து எண்ணெய் எடுத்த பிறகு கிடைக்கும் புண்ணாக்கு கால்நடை தீவனமாகவும், விளைநிலங்களில் உரமாகவும் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக வியட்நாம், தென் கொரியா, தாய்லாந்து, இந்தோனேஷியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகள் இந்தியாவிடம் புண்ணாக்கை அதிகம் வாங்குகின்றன.

கடந்த நிதி ஆண்டில் ரூ.6,222 கோடிக்கு புண்ணாக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கிறது. முந்தைய நிதி ஆண்டில் (2017-18) அது ரூ.4,762 கோடியாக இருந்தது. ஆக, ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி 31 சதவீதம் உயர்ந்துள்ளது.

இதே காலத்தில் அளவு அடிப்படையில் புண்ணாக்கு ஏற்றுமதி 6 சதவீதம் உயர்ந்து (30 லட்சம் டன்னில் இருந்து) 32 லட்சம் டன்னாக இருக்கிறது. இதில் கடுகு புண்ணாக்கு ஏற்றுமதி 58 சதவீதம் அதிகரித்து (6.63 லட்சம் டன்னில் இருந்து) 10 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.

தென் கொரியா, வியட்நாம், தாய்லாந்து ஆகிய நாடுகள் அதிக அளவில் இறக்குமதி செய்ததே இதற்கு காரணமாகும். மார்ச் மாதத்தில் மட்டும் 2.64 லட்சம் டன் புண்ணாக்கு ஏற்றுமதி ஆகி இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 2.61 லட்சம் டன்னாக இருந்தது.

உலக அளவில், சோயாபீன் உற்பத்தியில் இந்தியா ஐந்தாவது இடத்தில் இருந்து வருகிறது. சோயா புண்ணாக்கு ஏற்றுமதியில் மத்தியபிரதேசம் முன்னணியில் உள்ளது. சென்ற நிதி ஆண்டில் சோயா புண்ணாக்கு ஏற்றுமதி மொத்தம் 13 லட்சம் டன்னாக இருக்கிறது. 2017-18-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 12.5 சதவீத வளர்ச்சியாகும்.

5 லட்சம் டன்

ஈரானிற்கான சோயா புண்ணாக்கு ஏற்றுமதி பன்மடங்கு அதிகரித்து 5 லட்சம் டன்னாக உயர்ந்து இருக்கிறது. முந்தைய நிதி ஆண்டில் அது 23,000 டன்னாக இருந்தது. அந்நாட்டில் சோயா புண்ணாக்கிற்கான தேவைப்பாடு அதிகரித்து இருப்பதாக எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் கூறி இருக்கிறது.


Next Story