மொத்த விலை பணவீக்கம் 3.18 சதவீதமாக உயர்ந்தது


மொத்த விலை பணவீக்கம் 3.18 சதவீதமாக உயர்ந்தது
x
தினத்தந்தி 16 April 2019 5:45 AM GMT (Updated: 16 April 2019 5:45 AM GMT)

மார்ச் மாதத்தில் பின்னடைவு மொத்த விலை பணவீக்கம் 3.18 சதவீதமாக உயர்ந்தது

புதுடெல்லி

பாரத ரிசர்வ் வங்கி நடப்பு நிதி ஆண்டில் (2019-20) முதல் முறையாக இம்மாதம் 4-ந் தேதி (வியாழக்கிழமை) தனது நிதிக்கொள்கை ஆய்வறிக்கையை வெளியிட்டது. அப்போது வங்கிகளுக்கான வட்டி விகிதங்களை இவ்வங்கி 0.25 சதவீதம் குறைத்தது...

மார்ச் மாதத்தில், மொத்த விலை பணவீக்கம் 3.18 சதவீதமாக உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் இந்தப் பணவீக்கம் 2.74 சதவீதமாக இருந்தது. பிப்ரவரி மாதத்தில் அது 2.93 சதவீதமாக இருந்தது.

கொள்கை முடிவுகள்

பாரத ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவுகளை பணவீக்கம்தான் நிர்ணயிக்கிறது. இவ்வங்கி முன்பு மொத்த விலை பணவீக்கம் அடிப்படையில் தனது கொள்கை முடிவுகளை எடுத்து வந்தது. ஆனால் இப்போது சில்லரை விற்பனை விலை பணவீக்கத்தையே கணக்கில் எடுத்துக் கொள்கிறது. இதனால் பணவீக்கத்தை துல்லியமாக அளவிட முடியும் என பொருளியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

நல்ல முன்னேற்றம்

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மொத்த விற்பனை விலை பணவீக்கம் 5.13 சதவீதமாக உயர்ந்து இருந்தது. அக்டோபர் மாதத்தில் அது 5.28 சதவீதமாக உயர்ந்தது. ஆனால் நவம்பரில் 4.64 சதவீதமாக குறைந்தது. டிசம்பர் மாதத்தில் 3.80 சதவீதமாக மேலும் குறைந்தது. ஜனவரியில் நல்ல முன்னேற்றமாக 2.76 சதவீதமாக குறைந்தது. அதே சமயம் பிப்ரவரி மாதத்தில் அது 2.93 சதவீதமாக உயர்ந்தது.

இந்நிலையில், மார்ச் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 3.18 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 2.74 சதவீதமாக இருந்தது. காய்கறி, எரிபொருள்கள், மின்சார பிரிவில் பணவீக்கம் அதிகரித்ததே இதற்கு காரணமாகும். மார்ச் மாதத்தில் காய்கறி பிரிவில் மொத்த விலை பணவீக்கம் 28.13 சதவீதம் இருக்கிறது. முந்தைய மாதத்தில் அது 6.82 சதவீதமாக இருந்தது.

உணவுப்பொருட்களைப் பொறுத்தவரை மொத்த விலை பணவீக்கம் 5.68 சதவீதமாக உள்ளது. சென்ற ஆண்டு மார்ச் மாதத்தில் அது 0.22 சதவீதமாக இருந்தது. முந்தைய மாதத்தில் அது 4.28 சதவீதமாக இருந்தது. எரிபொருள் மற்றும் மின்சார பிரிவில் மொத்த விலை பணவீக்கம் 5.41 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது. பிப்ரவரி மாதத்தில் அது 2.23 சதவீதமாக இருந்தது.

சில்லரை விலை பணவீக்கம்

2012 ஜனவரி மாதத்தில் இருந்து நுகர்வோர் விலை பணவீக்கம் (சி.பி.ஐ) எனப்படும் சில்லரை விற்பனை விலை பணவீக்க புள்ளிவிவரத்தை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. இந்த பணவீக்கம் கிராமம், நகரம் மற்றும் நாடு (நகரங்களும், கிராமங்களும்) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வெளியிடப்படுகிறது.

மார்ச் மாதத்தில், சில்லரை விலை பணவீக்கம் 2.86 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது 3 மாதங்களில் இல்லாத உயர்வாகும். முந்தைய பிப்ரவரி மாதத்தில் இப்பணவீக்கம் 2.57 சதவீதமாக இருந்தது.

ரிசர்வ் வங்கி மதிப்பீடு

பாரத ரிசர்வ் வங்கி நடப்பு நிதி ஆண்டில் (2019-20) முதல் முறையாக இம்மாதம் 4-ந் தேதி (வியாழக்கிழமை) தனது நிதிக்கொள்கை ஆய்வறிக்கையை வெளியிட்டது.

அப்போது வங்கிகளுக்கான வட்டி விகிதங்களை இவ்வங்கி 0.25 சதவீதம் குறைத்தது. எனவே ரெப்போ ரேட் 6 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ ரேட் 5.75 சதவீதமாகவும் குறைந்துள்ளது.

சில்லரை விலை பணவீக்கம் 2019 ஜனவரி-மார்ச் காலாண்டில் 2.4 சதவீதமாக குறைந்து இருக்கும் என ரிசர்வ் வங்கி மதிப்பீடு செய்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் (2019 ஏப்ரல்-செப்டம்பர்) இந்தப் பணவீக்கம் 2.9-3 சதவீதமாக இருக்கும்; அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் 3.9 சதவீதமாக உயரும் என ரிசர்வ் வங்கி கணித்து இருக்கிறது.

அடுத்த ஆய்வுக்கூட்டம்

பாரத ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை ஆய்வறிக்கை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வெளியாகிறது. இவ்வங்கியின் அடுத்த ஆய்வுக்கூட்டம் ஜூன் 3-ந் தேதி தொடங்கி தொடர்ந்து நான்கு தினங்கள் நடைபெறும். வட்டி விகிதங்கள் பற்றிய அறிவிப்பு அம்மாதம் 6-ந் தேதி (வியாழக்கிழமை) வெளிவரும்.


Next Story