ஏப்ரல் மாதத்தில் 4 சதவீத முன்னேற்றம்


ஏப்ரல் மாதத்தில் 4 சதவீத முன்னேற்றம்
x
தினத்தந்தி 11 May 2019 5:17 AM GMT (Updated: 11 May 2019 5:17 AM GMT)

பரஸ்பர நிதி துறையின் சொத்து மதிப்பு ரூ.24.78 லட்சம் கோடியாக உயர்வு

புதுடெல்லி

ஏப்ரல் மாதத்தில் இத்துறையின் சொத்து மதிப்பில் சில்லரை முதலீட்டாளர்களின் பங்கு 2 சதவீதம் உயர்ந்து ரூ.10.90 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மார்ச் மாதத்தில் அது ரூ.10.72 லட்சம் கோடியாக இருந்தது...

ஏப்ரல் மாதத்தில் பரஸ்பர நிதி துறையின் சொத்து மதிப்பு ரூ.24.78 லட்சம் கோடியாக உயர்ந்து இருக்கிறது. முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது இது 4 சதவீத முன்னேற்றமாகும்.

சொத்து மதிப்பு

பரஸ்பர நிதி நிறுவனங்கள் பல்வேறு முதலீட்டுத் திட்டங்கள் வாயிலாக முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டுகின்றன. இந்த நிதி, நிறுவனப் பங்குகள், நிதிச்சந்தைகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கடன்பத்திரங்கள் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இதுவே பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து என்று அழைக்கப்படுகிறது.

இத்துறையில் ஒவ்வொரு திட்டமும் தனித்தனி சொத்து மதிப்பினை கொண்டுள்ளது. பங்கு வர்த்தகத்தில் சரிவு ஏற்படும்போதும், முதலீட்டாளர்கள் பெருமளவில் முதலீடுகளை விலக்கிக் கொள்ளும்போதும் பரஸ்பர நிதி துறையின் சொத்து மதிப்பு சரிவடைகிறது.

முதலீடு குறைந்தது

கடந்த 2018-19-ஆம் நிதி ஆண்டில், பரஸ்பர நிதி துறையின் பல்வேறு திட்டங்களில் நிகர அடிப்படையில் ரூ.1.10 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டில் (2017-18) அது ரூ.2.72 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, முதலீடு சுமார் 60 சதவீதம் குறைந்து இருக்கிறது. கடன் சந்தை திட்டங்களில் அதிக முதலீடு வெளியேறியதே இதற்குக் காரணமாகும்.

எனினும் சென்ற நிதி ஆண்டில் பரஸ்பர நிதி துறையில் முதலீட்டாளர் கணக்குகளின் எண்ணிக்கை 1.11 லட்சம் உயர்ந்துள்ளது. இதனையடுத்து முதலீட்டாளர் கணக்குகளின் மொத்த எண்ணிக்கை 8.24 கோடியாக அதிகரித்துள்ளது. இது ஒரு புதிய சாதனை அளவாகும்.

அந்த நிலையில், கடந்த மார்ச் மாதத்தில் பரஸ்பர நிதி நிறுவனங்களின் சொத்து மதிப்பு ரூ.23.79 லட்சம் கோடியாக இருந்தது. ஏப்ரல் மாதத்தில் இது ரூ.24.78 லட்சம் கோடியாக அதிகரித்து இருக்கிறது. ஆக, இத்துறையின் சொத்து மதிப்பு 4 சதவீதம் உயர்ந்துள்ளது.

2025-ஆம் ஆண்டுக்குள் பரஸ்பர நிதித்துறை நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.100 லட்சம் கோடியை எட்டும் என மகிந்திரா ஏ.எம்.சி. நிறுவனம் கூறி இருக்கிறது. அப்போது இத்துறையின் சொத்து மதிப்பு ரூ.94 லட்சம் கோடியாக இருக்கும் என இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்கள் சங்கம் (ஏ.எம்.எப்.ஐ) மதிப்பீடு செய்துள்ளது.

15 பெரிய நகரங்கள்

புதுடெல்லி (என்.சி.ஆர். உள்பட), மும்பை (தானே, நவி மும்பை உள்பட), கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, அகமதாபாத், பரோடா, சண்டிகர், ஐதராபாத், ஜெய்ப்பூர், கான்பூர், லக்னோ, பன்ஜிம், பூனா, சூரத் உள்ளிட்ட 15 நகரங்கள் இந்தியாவின் பெரிய நகரங்களாக இருக்கின்றன.

இந்த பெருநகரங்கள் நீங்கலாக மற்ற சிறிய மற்றும் நடுத்தர நகரங்களில் பரஸ்பர நிதி திட்டங்கள் குறித்தும், அவற்றில் முதலீடு செய்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி, பரஸ்பர நிதி நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறது. இதன் பலனாக பரஸ்பர நிதி துறையில் சிறிய மற்றும் நடுத்தர நகரங்களைச் சேர்ந்த முதலீட்டாளர்களின் பங்கு அதிகரித்து வருகிறது.

பரஸ்பர நிதி திட்டங்களில் சில்லரை முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே இத்துறையின் சொத்து மதிப்பில் அவர்களுடைய பங்களிப்பு உயர்ந்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இத்துறையின் சொத்து மதிப்பில் சில்லரை முதலீட்டாளர்களின் பங்கு 2 சதவீதம் உயர்ந்து ரூ.10.90 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மார்ச் மாதத்தில் அது ரூ.10.72 லட்சம் கோடியாக இருந்தது.

ஓரளவு பாதுகாப்பானது

பரஸ்பர நிதி நிறுவனங்கள் தேர்ச்சி மற்றும் அனுபவம் வாய்ந்த வல்லுனர்களின் துணையுடன் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்கின்றன. புதிய பங்கு வெளியீடுகளிலும் பங்கேற்கின்றன. புதிய முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் நேரடியாக இறங்குவதைக் காட்டிலும் பரஸ்பர நிதி நிறுவனங்கள் மூலம் முதலீடு செய்வது ஓரளவு பாதுகாப்பானது என கருதப்படுகிறது.


Next Story