பாதுகாப்பாக வாகனம் ஓட்டினால் பரிசு


வாகன ஓட்டுனருக்கு பரிசு வழங்கப்படும் காட்சி
x
வாகன ஓட்டுனருக்கு பரிசு வழங்கப்படும் காட்சி
தினத்தந்தி 12 May 2019 9:39 AM GMT (Updated: 12 May 2019 9:39 AM GMT)

போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் 100 ரூபாய் முதல் அபராதம் விதிப்பது வழக்கம்.

இது நாடு முழுவதும் நடைமுறையில் இருக்கும் நிலையில் ஒடிசா மாநிலத்தில் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றுபவர் களுக்கு போலீசாரே ஊக்கத்தொகையும், பாராட்டு சான்றிதழும் வழங்குகிறார்கள். அங்குள்ள கியோஞ்சார் மாவட்டத்தில் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்திருக்கிறது.

அனைத்து போக்குவரத்து விதிகளையும் முறையாக பின்பற்றும் வாகன ஓட்டி களுக்கு 100 ரூபாய் வழங்குகிறார்கள். இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெய் நாராயண் பங்கஜ் கூறுகையில், ‘‘முதல்கட்டமாக சிறந்த முறையில் வாகனம் ஓட்டும் 50 டிரைவர்களை கண்டறிந்து பரிசு தொகையும், பாராட்டு சான்றிதழும் வழங்கி இருக்கிறோம். சாலை பாதுகாப்பு நிதியில் இருந்து போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிப்பவர் களுக்கு இந்த தொகை வழங்கப்படுகிறது. சாலை விதிகளை மதிக்காமல் அத்துமீறி செல்லும் வாகன ஓட்டிகளை பிடித்து அபராதம் விதிக்கும் நடைமுறைதான் நாடு முழுவதும் நடைமுறையில் இருக்கிறது. அதற்கு மாற்றாக சிறந்த வாகன ஓட்டிகளுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்க எண்ணினோம். சிறந்த டிரைவர்களுக்கு போலீசாரே ஊக்கத்தொகை வழங்குவது நாட்டிலேயே இதுதான் முதன் முறை’’ என்றார்.

வாகனம் ஓட்டும்போது ஓட்டுனர் உரிமம், இன்சூரன்ஸ் ஆவணங்களை எடுத்து செல்வது, ஹெல்மெட் அணிந்து செல்வது, வேக கட்டுப்பாட்டை கடைப்பிடித்து மிதமான வேகத்தில் செல்வது, மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதது, செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டிச் செல்லாதது, சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டுவது போன்ற நடவடிக்கைகளை கண்காணித்து இந்த பரிசு தொகையை போலீசார் வழங்குகிறார்கள்.

Next Story