சென்செக்ஸ் 279 புள்ளிகள் ஏற்றம் நிப்டி 100 புள்ளிகள் முன்னேறியது


சென்செக்ஸ் 279 புள்ளிகள் ஏற்றம் நிப்டி 100 புள்ளிகள் முன்னேறியது
x
தினத்தந்தி 17 May 2019 1:30 AM GMT (Updated: 17 May 2019 1:30 AM GMT)

வியாழக்கிழமை பங்கு வர்த்தகத்தில் சென்செக்ஸ் 279 புள்ளிகள் ஏற்றம் நிப்டி 100 புள்ளிகள் முன்னேறியது

மும்பை

வியாழக்கிழமை அன்று பங்கு வர்த்தகம் மீண்டும் காளையின் ஆதிக்கத்திற்குள் வந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 279 புள்ளிகள் ஏற்றம் கண்டது. தேசிய பங்குச்சந்தை குறி யீட்டு எண் நிப்டி 100 புள்ளிகள் முன்னேறியது.

ரூபாய் மதிப்பு

அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தக போரால் இந்தியாவிற்கு ஆதாயம் கிடைக்கும் என்ற தகவலால் ஐ.டி. உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பங்குகள் ஏற்றம் கண்டன. அன்னிய செலாவணி சந்தையில் ஒரு கட்டத்தில் ரூபாய் மதிப்பு நன்கு உயர்ந்தது மற்றும் இதர நாடுகளில் பங்கு வியாபாரம் நன்றாக இருந்தது போன்ற காரணங்களால் பங்கு வர்த்தகம் விறுவிறுப்பாக இருந்தது.

அந்த நிலையில், மும்பை சந்தையில் பல்வேறு துறைகளுக்கான குறியீட்டு எண்களும் உயர்ந்தன. அதில் எண்ணெய்-எரிவாயுத் துறை மற்றும் மின்சாரத் துறை குறியீட்டு எண்கள் அதிகபட்சமாக 1.53 சதவீதம் ஏற்றம் கண்டன. அடுத்து அடிப்படைப் பொருள்கள் துறை குறியீட்டு எண் 1.52 சதவீதம் முன்னேறியது. அதே சமயம் தொலைத் தொடர்புத் துறை குறியீட்டு எண் அதிகபட்ச சரிவை சந்தித்தது (1.15 சதவீதம்).

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 21 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தது. 9 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தது. இந்தப் பட்டியலில் பஜாஜ் பைனான்ஸ், டாட்டா மோட்டார்ஸ், இன்போசிஸ், வேதாந்தா, ஓ.என்.ஜி.சி., பவர் கிரிட், என்.டி.பி.சி., ஆக்சிஸ் பேங்க், டாட்டா ஸ்டீல் உள்ளிட்ட 21 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தது. அதே சமயம் யெஸ் பேங்க், பார்தி ஏர்டெல், இண்டஸ் இந்த் பேங்க், கோல் இந்தியா, ஐடிசி, மகிந்திரா அண்டு மகிந்திரா, எச்.டீ.எப்.சி. உள்பட 9 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ்

மும்பை பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 278.60 புள்ளிகள் அதிகரித்து 37,393.48 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 37,518.94 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 37,052.30 புள்ளிகளுக்கும் சென்றது.

இந்தச் சந்தையில் 1,164 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 1,315 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தும் இருந்தது. 146 பங்குகளின் விலையில் மாற்றம் இல்லை. நேற்று மொத்த வர்த்தகம் ரூ.2,216 கோடியாக குறைந்தது. கடந்த புதன் கிழமை அன்று அது ரூ.2,578 கோடியாக இருந்தது.

தேசிய பங்குச்சந்தை

தேசிய பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் நிப்டி 100.10 புள்ளிகள் உயர்ந்து 11,257.10 புள்ளிகளில் முடிவுற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 11,281.55 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 11,143.35 புள்ளிகளுக்கும் சென்றது.


Next Story