வாரத்தின் முதல் வர்த்தக தினத்தில் சென்செக்ஸ் 52 புள்ளிகள் ஏற்றம்; நிப்டி 6 புள்ளிகள் முன்னேறியது


வாரத்தின் முதல் வர்த்தக தினத்தில் சென்செக்ஸ் 52 புள்ளிகள் ஏற்றம்; நிப்டி 6 புள்ளிகள் முன்னேறியது
x
தினத்தந்தி 20 Aug 2019 8:24 AM GMT (Updated: 20 Aug 2019 8:24 AM GMT)

வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை அன்று பங்கு வியாபாரம் தொடர்ந்து மூன்றாவது நாளாக நன்றாக இருந்தது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

மும்பை

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 52 புள்ளிகள் ஏற்றம் கண்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 6 புள்ளிகள் முன்னேறியது.

ஓரளவு முதலீடு

அன்னிய முதலீட்டாளர்களும், உள்நாட்டு நிதி நிறுவனங்களும் பங்குகளில் ஓரளவு முதலீடு செய்தனர். பல நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் திருப்திகரமாக இருந்ததும் பங்கு வர்த்தகம் சற்றே முன்னேற வகை செய்தது. எனினும் உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் பங்குச்சந்தைகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் எதுவும் இல்லாத நிலையில் அதிக ஏற்றம் இல்லை.

மும்பை சந்தையில் பல்வேறு குறியீட்டு எண்களும் முன்னேறின. அதில் நுகர்வோர் பொருள்கள் துறை குறியீட்டு எண் அதிகபட்சமாக 1.57 சதவீதம் அதிகரித்தது. அடுத்து பொறியியல் சாதனங்கள் துறை குறியீட்டு எண் 1.18 சதவீதம் உயர்ந்தது.

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 13 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தது. 17 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தது.

இந்தப் பட்டியலில் சன் பார்மா, டெக் மகிந்திரா, ஆக்சிஸ் வங்கி, எல் அண்டு டி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கி, என்.டி.பி.சி., எச்.டீ.எப்.சி., இன்போசிஸ் உள்ளிட்ட 13 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தது. அதே சமயம் யெஸ் வங்கி, பவர் கிரிட், ஓ.என்.ஜி.சி., பாரத ஸ்டேட் வங்கி, மகிந்திரா அண்டு மகிந்திரா, ஹீரோ மோட்டோகார்ப், டாட்டா ஸ்டீல், ஏஷியன் பெயிண்ட், எச்.டீ.எப்.சி. வங்கி உள்பட 17 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 52.16 புள்ளிகள் உயர்ந்து 37,402.49 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 37,718.88 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 37,358.49 புள்ளிகளுக்கும் சென்றது.

இந்தச் சந்தையில் 1,268 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 1,212 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தும் இருந்தது. 164 பங்குகளின் விலையில் மாற்றம் இல்லை. நேற்று மொத்த வர்த்தகம் ரூ.1,824 கோடியாக குறைந்தது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று அது ரூ.2,024 கோடியாக இருந்தது.

நிப்டி

தேசிய பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் நிப்டி 6.10 புள்ளிகள் முன்னேறி 11,053.90 புள்ளிகளில் முடிவுற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 11,146.90 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 11,037.85 புள்ளிகளுக்கும் சென்றது.

Next Story