ரகசியம் சொல்லட்டுமா?


ரகசியம் சொல்லட்டுமா?
x
தினத்தந்தி 23 Aug 2019 3:00 AM GMT (Updated: 21 Aug 2019 12:19 PM GMT)

தோட்டத்துக்கு சென்றிருக்கிறீர்களா? அங்கே செடிகளில் ஊர்ந்து செல்லும் பூச்சிகளை கண்டிருக்கிறீர்களா? அந்த பூச்சிகளைப் பார்த்ததும் உங்களுக்கு என்ன தோன்றும்? இவை நமது செடிகளை கடித்து, அரித்து தின்கின்றன? என்று தானே நினைப்பீர்கள். நிஜம் அதுவல்ல.

தாவரங்களில் எல்லா பூச்சிகளும் செடிகளை தின்பதில்லை. பூச்சிகளில் இரு வகை உள்ளது. அவை நன்மை செய்யும் பூச்சிகள், தீமை செய்யும் பூச்சிகள் எனப்படுகிறது. அவை சாப்பிடும் முறையைக் கொண்டு சொல்வதானால் சைவ பூச்சிகள், அசைவப் பூச்சிகள் என்று சொல்லலாம்.

உடனே சைவம் சாப்பிடும் பூச்சிகள்தான் நன்மை செய்யும் பூச்சிகள், அசைவம் சாப்பிடுபவை மூர்க்க குணம் கொண்டவை என்று எண்ணிவிடாதீர்கள். தாவர உலகைப் பொருத்தவரை அசைவ பூச்சிகளே நன்மை செய்யும் பூச்சிகளாகும். அவையே தாவரங்களின் இலைகள், காய்கள், கனிகளை தின்று, சார்ந்து வாழும் சைவ பூச்சிகளை பிடித்துச் சாப்பிட்டு தாவர வளர்ச்சிக்கு உதவுகின்றன. இதனால் நாம் நன்மை அடைகிறோம்.

அசைவ பூச்சிகள் அதாவது நன்மை செய்யும் பூச்சிகளை எளிதில் அடையாளம் காண ஒரு வழி உள்ளது. இந்த வகை பூச்சிகள் பெரும்பாலும் நமது கண்ணில்படும், தாவரங்களின் மீது ஊர்ந்து, தங்கள் இரையான தீமை செய்யும் பூச்சிகளை தேடிக் கொண்டிருக்கும். பல நேரங்களில் இவற்றையே நாம் தாவரங்களை கெடுக்கும் பூச்சிகள் என்று எண்ணிக் கொண்டிருப்போம். 

தீமை செய்யும் பூச்சிகள் பெரும்பாலும் இலைகளின் அடியிலும், காய்கள், பழங்களின் உள்ளும், வேரின் அடியிலும் மறைந்து கொண்டிருக்கும். நாம் பூச்சிகளை அழிப்பதற்காக தெளிக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகள் கூட தாவரங்களில் தெளித்ததும் மேல்புறத்தில் வாழும் நன்மை செய்யும் பூச்சிகளையே முதலில் அழிக்கின்றன என்ற ரகசியம் தெரியுமா?

நன்மை செய்யும் பூச்சிகளை அழித்துவிட்டு, பூச்சிகள் ஒழியவில்லை, விளைச்சல் பெருகவில்லை என்று பொருமுவதால் பயன் உண்டா? ரசாயன மருந்துகளால் விளையும் தீமைகளில் இது முக்கியமானது. தாவரங்கள், காய்கறிகள், மண், மனிதர் மற்றும் அதை சார்ந்து வாழும் அத்தனை உயிரினங்களையும் ரசாயனங்கள் பாதிக்கிறது என்பதை அறிவீர்களா?

Next Story