அனல்மின் நிலையங்களுக்கு கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி சப்ளை 21% குறைந்தது


அனல்மின் நிலையங்களுக்கு கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி சப்ளை 21% குறைந்தது
x
தினத்தந்தி 23 Oct 2019 10:35 AM GMT (Updated: 23 Oct 2019 10:35 AM GMT)

கடந்த செப்டம்பர் மாதத்தில் அனல்மின் நிலையங்களுக்கு கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி சப்ளை 21 சதவீதம் குறைந்துள்ளது.

முக்கிய எரிபொருள்

அனல்மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி முக்கிய எரிபொருளாக இருந்து வருகிறது. நம் நாட்டில் நிலக்கரி உற்பத்தி அதிகமாக இருந்தாலும் தேவையை ஈடு செய்யும் வகையில் உற்பத்தி இல்லாததால் அதிக அளவு நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டி உள்ளது.

சர்வதேச அளவில் நிலக்கரி உற்பத்தியில் பொதுத்துறையைச் சேர்ந்த கோல் இந்தியா முதலிடத்தில் இருந்து வருகிறது. நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தியில் கோல் இந்தியாவும், அதன் துணை நிறுவனங்களும் 80 சதவீத பங்கினைக் கொண்டுள்ளன.

கடந்த செப்டம்பர் மாதத்தில் கோல் இந்தியா நிறுவனம் அனல்மின் நிலையங்களுக்கு 2.83 கோடி டன் நிலக்கரியை சப்ளை செய்துள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 3.59 கோடி டன்னாக இருந்தது. ஆக, சப்ளை 21 சதவீதம் குறைந்துள்ளது.

நடப்பு நிதி ஆண்டில், செப்டம்பர் வரையிலான முதல் 6 மாதங்களில் அனல்மின் நிலையங்களுக்கு கோல் இந்தியா நிறுவனத்தின் சப்ளை 7 சதவீதம் சரிவடைந்து 21.8 கோடி டன்னாக உள்ளது. சென்ற ஆண்டின் இதே காலத்தில் அது 23.5 கோடி டன்னாக இருந்தது.

நடப்பு 2019-20-ஆம் நிதி ஆண்டில் 66 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்ய கோல் இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் அதன் மொத்த சப்ளை இலக்குடன் ஒப்பிடும்போது இது 16.8 கோடி டன் குறைவாகும். கடந்த நிதி ஆண்டில் (2018-19) இந்நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி இலக்கு 61 கோடி டன்னாக இருந்தது. எனினும் 60.7 கோடி டன் நிலக்கரி மட்டுமே உற்பத்தி செய்தது.

இக்ரா மதிப்பீடு

கடன் தகுதி தர நிர்ணய நிறுவனமான இக்ரா, நடப்பு நிதி ஆண்டில் கோல் இந்தியாவின் உற்பத்தி, நிர்ணயித்த இலக்கில் 5.50 கோடி டன் முதல் 7.50 கோடி டன் வரை குறையும் என தெரிவித்து இருக்கிறது. 

Next Story