‘எரித்ரியா’ என்னும் தேசம்


‘எரித்ரியா’ என்னும் தேசம்
x
தினத்தந்தி 2 Nov 2019 11:41 AM GMT (Updated: 2 Nov 2019 11:41 AM GMT)

அண்டை நாடான எரித்ரியாவுடன் சமாதான நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமர் அபி அகமதுவுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பின்னணியில், எரித்ரியாவின் வரலாற்றை அறிந்துகொள்ளலாமா?

இத்தாலி, இங்கிலாந்து காலனி ஆதிக்கத்தில் இருந்த எரித்ரியா, ஐ.நா. முடிவின்படி 1952-ம் ஆண்டு தன்னாட்சி அதிகாரம் பெற்றது. இருந்தபோதும், பத்து ஆண்டுகளுக்கு எரித்ரியாவின் வெளியுறவு, பாதுகாப்பு விவகாரங்களை அண்டை நாடான எத்தியோப்பியா நிர்வகிக்கும் என ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஆனால் 1962-ம் ஆண்டு எரித்ரியாவின் நாடாளுமன்றத்தைக் கலைத்த எத்தியோப்பியா, அதை தங்கள் நாட்டுடன் இணைத்தது. இதனால் எரித்ரியாவில் விடுதலைப் போர் வெடித்தது.

பல ஆண்டுகாலம் நீடித்த விடுதலைப் போரின் விளைவாக 1993-ம் ஆண்டு எரித்ரியா எத்தியோப்பியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்றது.

ஆனால் முடிவுறாத எல்லைப்பிரச்சினையால் இரு நாடுகளுக்கும் இடையே 1998 முதல் 2000 வரை கடும் போர் நடந்தது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் இரு நாடுகளுக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டது. இரு நாட்டு எல்லையில் அமைதி திரும்பியது.

இந்த சமாதான ஒப்பந்த நடவடிக்கையில் பிரதான பங்கு வகித்தவர், அபி அகமது என்பது குறிப்பிடத்தக்கது.

-கோட்டாறு ஆ. கோலப்பன்.

Next Story