நடப்பு ஆண்டின் முதல் 9 மாதங்களில் தேயிலை உற்பத்தி 2.8% உயர்வு - தேயிலை வாரியம் தகவல்


நடப்பு ஆண்டின் முதல் 9 மாதங்களில் தேயிலை உற்பத்தி 2.8% உயர்வு - தேயிலை வாரியம் தகவல்
x
தினத்தந்தி 13 Nov 2019 12:26 PM GMT (Updated: 13 Nov 2019 12:26 PM GMT)

நம் நாட்டில், நடப்பு ஆண்டின் முதல் 9 மாதங்களில் (2019 ஜனவரி-செப்டம்பர்) தேயிலை உற்பத்தி 2.8 சதவீதம் உயர்ந்துள்ளதாக தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.

இரண்டாவது இடம்
சர்வதேச அளவில், தேயிலை உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. உள்நாட்டில் தேயிலை உற்பத்தியில் அசாம் மாநிலம் 50 சதவீத பங்குடன் முதலிடத்தில் இருந்து வருகிறது. உயர்தர தேயிலையான ஆர்தோடக்ஸ் ஈராக், ஈரான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது. சி.டி.சி. தேயிலை பெரும்பாலும் எகிப்து, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

நம் நாட்டில், செப்டம்பர் வரையிலான 9 மாதங்களில் மொத்தம் 100.64 கோடி கிலோ தேயிலை உற்பத்தி ஆகி உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்தை விட இது 2.8 சதவீதம் அதிகமாகும். செப்டம்பர் மாதத்தில் மட்டும் 18.47 கோடி கிலோ தேயிலை உற்பத்தி ஆகி இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது இது 5.7 சதவீத வளர்ச்சி என தேயிலை வாரியம் கூறி உள்ளது. இதில் அசாம் மாநிலம் மட்டும் 10.85 கோடி கிலோ தேயிலை உற்பத்தி செய்து இருக்கிறது. 2018 செப்டம்பரில் அங்கு உற்பத்தி 10.06 கோடி கிலோவாக இருந்தது.

நம் நாட்டில் காபி நுகர்வு குறைவாக உள்ளதால் உற்பத்தியாகும் காபியில் 80 சதவீதம் ஏற்றுமதி செய்யப்பட்டு விடுகிறது. ஆனால் உள்நாட்டில் பயன்பாடு மிக அதிகமாக உள்ளதால் நம்மால் அதிக அளவு தேயிலையை ஏற்றுமதி செய்ய முடிவதில்லை. தேயிலை உற்பத்தியில் முன்னணி நாடுகளுள் ஒன்றான கென்யா அதன் மொத்த உற்பத்தியில் 95 சதவீதத்தை ஏற்றுமதி செய்கிறது.

தேயிலை ஏற்றுமதி
மத்திய வர்த்தக அமைச்சகத்தின் தற்காலிகப் புள்ளிவிவரம் ஒன்றின்படி, கடந்த செப்டம்பர் மாதத்தில் ரூ.547 கோடிக்கு தேயிலை ஏற்றுமதி ஆகி இருக்கிறது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது ரூ.527 கோடியாக இருந்தது. ஆக, ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி 3.7 சதவீதம் உயர்ந்துள்ளது. இதே காலத்தில், டாலர் மதிப்பில் தேயிலை ஏற்றுமதி 4.98 சதவீதம் அதிகரித்து 7.67 கோடி டாலராக இருக்கிறது.

Next Story