ரூபாய் மதிப்பு அடிப்படையில் பருப்பு வகைகள் இறக்குமதி 46 சதவீதம் அதிகரித்தது


ரூபாய் மதிப்பு அடிப்படையில் பருப்பு வகைகள் இறக்குமதி 46 சதவீதம் அதிகரித்தது
x
தினத்தந்தி 30 Jan 2020 8:41 AM GMT (Updated: 30 Jan 2020 8:41 AM GMT)

நடப்பு நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களில் (2019 ஏப்ரல்-டிசம்பர்), ரூபாய் மதிப்பு அடிப்படையில் பருப்பு வகைகள் இறக்குமதி 46 சதவீதம் அதிகரித்துள்ளது.

புதுடெல்லி

நடப்பு நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களில் (2019 ஏப்ரல்-டிசம்பர்), ரூபாய் மதிப்பு அடிப்படையில் பருப்பு வகைகள் இறக்குமதி 46 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்தியா முதலிடம்

பருப்பு வகைகள் உற்பத்தி, இறக்குமதி மற்றும் நுகர்வில் உலகிலேயே இந்தியா முதலிடத்தில் உள்ளது. மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் பருப்பு உற்பத்தியில் முன்னணியில் இருக்கின்றன. மழையை நம்பி இருக்கும் பகுதிகளில்தான் பெரும்பாலும் பருப்பு அதிகம் சாகுபடி செய்ப்படுகிறது.

பருப்பு மகசூல்

பருப்பு மகசூலை அதிகரிக்கவும், புரதம் நிறைந்த பருப்பு வகைகளின் நுகர்வை அதிகரிக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 2020-21-க்குள் பருப்பு உற்பத்தியை 2.40 கோடி டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் 2017-18-ஆம் நிதி ஆண்டிலேயே பருப்பு விளைச்சல் 2.52 கோடி டன்னை தாண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

நடப்பு நிதி ஆண்டில் டிசம்பர் வரையிலான 9 மாதங்களில் ரூ.8,210 கோடிக்கு பருப்பு வகைகள் இறக்குமதி செய்யப்பட்டு இருக்கிறது. சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் அது ரூ.5,629 கோடியாக இருந்தது. ஆக, ரூபாய் மதிப்பில் இறக்குமதி 46 சதவீதம் உயர்ந்துள்ளது. இதே காலத்தில், டாலர் மதிப்பில் பருப்பு இறக்குமதி 45 சதவீதம் உயர்ந்து 116 கோடி டாலராக அதிகரித்து இருக் கிறது. கடந்த நிதி ஆண்டின் இதே காலத்தில் அது 80 கோடி டாலராக இருந்தது.

கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் பருப்பு வகைகள் இறக்குமதி ரூ.607 கோடியாக இருக்கிறது. முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் அது ரூ.976 கோடியாக இருந்தது. ஆக, இறக்குமதி 37 சதவீதம் குறைந்துள்ளது. இதே மாதத்தில், டாலர் மதிப்பில் இறக்குமதி 38 சதவீதம் குறைந்து 8.5 கோடி டாலராக இருக்கிறது.

மதிப்பீடு

நடப்பு 2019-20-ஆம் நிதி ஆண்டில் பருப்பு உற்பத்தி 2.8 சதவீதம் அதிகரித்து 2.35 கோடி டன்னாக இருக்கும் என இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் மதிப்பீடு செய்துள்ளது. இது சென்ற நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது 2 சதவீதம் குறைவாகும். எனினும் பருப்பு இறக்குமதி 68 சதவீதம் குறையும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

நம் நாட்டில் பருப்பு நுகர்வு ஆண்டுக்கு சுமார் 2.50 கோடி டன் என்ற அளவில் இருக்கிறது. உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய பருப்பு இறக்குமதி செய்ய வேண்டி இருக்கிறது. பருப்பு உற்பத்தியில் நாடு தன்னிறைவு அடைந்து வந்தாலும் குறுகிய கால அடிப்படையில் இறக்குமதியை சார்ந்து இருக்க வேண்டி இருக்கும் என்று கூறப்படுகிறது.

கடந்த நிதி ஆண்டில் (2018-19) 25 லட்சம் டன் பருப்பு இறக்குமதி ஆகி இருந்தது. 2016-17-ஆம் ஆண்டில் அது வரலாறு காணாத அளவிற்கு 66 லட்சம் டன்னாக இருந்தது. நடப்பு நிதி ஆண்டில் இறக்குமதி ஏறக்குறைய 10 லட்சம் டன்னாக இருக்கும் என வர்த்தக வட்டாரங்கள் கூறுகின்றன.

2018-19-ஆம் நிதி ஆண்டில் நம் நாடு ஒட்டுமொத்த அளவில் 2.70 லட்சம் டன் பருப்பு ஏற்றுமதி செய்திருக்கிறது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 50 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அது 1.80 லட்சம் டன்னாக இருந்தது.

சாகுபடி பரப்பளவு

நடப்பு ரபி பருவத்தில், கடந்த 17-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நிலவரப்படி, மொத்தம் 6.41 கோடி ஹெக்டேர் நிலப்பரப்பில் பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளன. இது, கடந்த 2018-19 ரபி பருவத்தின் (அக்டோபர்-மார்ச்) இதே நாளை விட 8.5 சதவீதம் அதிகமாகும். அப்போது சாகுபடி பரப்பளவு 5.91 கோடி ஹெக்டேராக இருந்தது.

இதே காலத்தில் பருப்பு வகைகள் சாகுபடி பரப்பளவு 5 சதவீதம் அதிகரித்து 1.57 கோடி ஹெக்டேராக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டின் இதே நாளில் அது 1.49 கோடி ஹெக்டேராக இருந்தது. கோதுமை பயிரான பரப்பளவு 11 சதவீதம் உயர்ந்து 3.30 கோடி ஹெக்டேராக அதிகரித்து இருக்கிறது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

Next Story