அதிகரிக்கிறது தாம்பத்ய ஆசை.. சொல்கிறது ‘புதிய சர்வே’


அதிகரிக்கிறது தாம்பத்ய ஆசை.. சொல்கிறது ‘புதிய சர்வே’
x
தினத்தந்தி 23 Feb 2020 9:52 AM GMT (Updated: 23 Feb 2020 9:52 AM GMT)

‘மனைவிக்கு தாம்பத்ய சுகத்தை கொடுப்பது கணவரின் கடமைகளில் மிக முக்கியமானது’ என்ற கருத்தை இந்திய ஆண்கள் பின்பற்றத் தொடங்கியிருக்கிறார்கள்.

திருமணமான பெண்களின் தாம்பத்ய ஆசையில் ஏற்பட்டிருக்கும் நவீன கால மாற்றங்கள் ருசிகரமானதாக இருப்பதாக புதிய சர்வே தகவல் ஒன்று வெளிப்படுத்துகிறது. கூடவே அதில் சில சிந்திக்கவைக்கும் தகவல்களும் இருப்பதாக கூறுகிறது. தனியார் பாலியல் நல அமைப்பு ஒன்று எடுத்திருக்கும் அந்த சர்வேயில் இருக்கும் முக்கிய விஷயங்கள்:

‘மனைவிக்கு தாம்பத்ய சுகத்தை கொடுப்பது கணவரின் கடமைகளில் மிக முக்கியமானது’ என்ற கருத்தை இந்திய ஆண்கள் பின்பற்றத் தொடங்கியிருக்கிறார்கள். பெரும்பாலான ஏழை தம்பதியினருக்கு பொழுதுபோக்கு வாய்ப்புகள் மிக குறைவாக இருப்பதால், 30-35 வயதுகளில் அவர்கள் சராசரியாக வாரத்தில் மூன்று முறை தாம்பத்ய உறவு கொள்கிறார்கள் என்கிறது சர்வே. அதே நேரத்தில் டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் உள்ள அதே வயதுகொண்ட தம்பதிகளிடையே பாலுறவு இணக்கம் குறைவாக இருக்கிறது. அவர்கள் இதர வெளி பொழுதுபோக்குகளிலும் ஆர்வம் காட்டுவதால் அவர்கள் தாம்பத்ய தொடர்புக்கு இரண்டாம் இடம்தான் கொடுக்கிறார்கள்.

58 சதவீத பெண்கள் மாதத்தில் ஐந்து நாட்கள் முதல் 12 நாட்கள் வரை உறவு வைத்துக்கொள்வதாக சொல்கிறார்கள். மாதத்தில் 20 முதல் 25 நாட்கள் தொடர்பு கொள்வதாக 17 சதவீத பெண்கள் கருத்துகளை பதிவு செய்திருக்கிறார்கள். மீதமுள்ளவர்கள் மாதத்திற்கு 2 நாள் என்ற கணக்கை பின்பற்றுகிறார்கள். பெருநகரங்களில் 72 சதவீதம் பெண்கள் மாதத்தில் 5 முதல் 8 நாட்கள் என்று கூறியிருக்கிறார்கள். மீதமுள்ள 28 சதவீதத்தில் பெரும் பகுதியினர் மாதத்தில் ஒரு தடவை என்று சோர்வாக பதிலளித்துள்ளார்கள்.

தாம்பத்ய தொடர்பில் உள்ள அதிருப்திகளை பற்றி கணவரிடம் பெண்கள் பேசுவதில்லை என்ற கருத்து முன்பு வலுவாக இருந்தது. இப்போது அந்த நிலைமாறிக்கொண்டிருக்கிறது. பாலியல் உறவில் தனக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது என்று பெண்கள், கணவரிடம் எடுத்துச்சொல்ல தொடங்கியிருப்பதாக சர்வே குறிப்பிடுகிறது. ‘அதுபற்றி பேசி கணவருக்கு பக்குவமாக புரியவைப்போம்’ என்று 39 சதவீத பெண்கள் கூறியிருக்கிறார்கள். குறிப்பால் அதை உணர்த்துவதாக 32 சதவீத பெண்களும், ‘இதை சொல்வதற்கு தயங்கவேண்டியதில்லை’ என்று 14 சதவீத பெண்களும் கூறியிருக்கிறார்கள். 15 சதவீத பெண்கள் ‘அவரால் அவ்வளவுதான் முடியும். அதற்குமேல் பேச என்ன இருக்கிறது’ என்று பட்டவர்த்தனமாக கருத்து தெரிவித்திருக்கிறார்கள். மும்பை, டெல்லி பெண்களில் 71 சதவீதம்பேர் ‘தாம்பத்யம் நடந்து முடிந்த பின்பு அதன் நிறைகுறைகள் பற்றி கணவரிடம் மனம்விட்டுப் பேசுவதாக’ கூறியிருக்கிறார்கள். இதற்கு பெண்களிடம் ஏற்பட்டிருக்கும் பாலியல் விழிப்புணர்ச்சியே காரணம் என்று கருதப்படுகிறது.

பாலியல் உறவு திருப்திக்கு ‘முன்விளையாட்டுகள்’ மிக முக்கியம் என்பதை பெரும்பாலான தம்பதிகள் உணர்ந் திருக்கிறார்கள். பெண்கள் அதற்கு அதிக முன்னுரிமை கொடுப்பதாகவும் சர்வே தெரிவிக்கிறது. 92 சதவீதம் பெண்கள் அதை விரும்புவதாகவும், அதில் 64 சதவீதம் பேர் தங்கள் விருப்பம் நிறைவேற்றப்படுவதாகவும் கூறியிருக்கிறார்கள். டெல்லி பெண்கள் இதில் முதல் இடத்தையும், மும்பை பெண்கள் இரண்டாம் இடத்தையும் பிடிக்கிறார்கள்.

பெண்கள் அதிகம் விரும்பும் கருத்தடை சாதனம் எது என்ற கேள்விக்கு, மும்பை, டெல்லி பெண்கள், ‘கணவரை ஆணுறை பயன்படுத்தக்கூறுவோம்’ என்கிறார்கள். தென்னிந்திய பெண்கள் தாங்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தி கணவரை சுதந்திரமாக விட்டுவிடுவோம்’ என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் கடந்த காலங்களில் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்திய பெண்களில் 68 சதவீதம் பேர் வரை, ‘அதிக அளவில் கருத்தடை மாத்திரைகள் சாப்பிடுவது பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். அதனால் அதை முடிந்த அளவு குறைக்கிறோம்’ என்கிறார்கள். முதல் குழந்தை பெற்ற பெண்களில் 59 சதவீதம் பேர் பாதுகாப்பான கருத்தடை முறையாக ‘காப்பர்- டி’ பொருத்துவதை குறிப்பிட்டிருக்கிறார்கள். கடந்த காலங்களைவிட இப்போது பெண்களிடம் கருத்தடை சாதனங்களின் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு மிக அதிகம் இருப்பதாக சர்வே தெரிவிக்கிறது.

இந்த சர்வேயை ஆதாரமாகவைத்து செக்ஸாலஜிஸ்ட்டுகள் மிக முக்கியமான விஷயங்களை சுட்டிக்காட்டுகிறார்கள். அதன் விவரம்:

“பெண்களிடம் பாலியல் விழிப்புணர்வு அதிகமாக ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அவர்களது பாலியல் செயல்பாட்டிற்கு தற்போதைய இயந்திரமய வாழ்க்கைமுறை எதிராக அமைந் திருக்கிறது. அதனால் பெண்கள் முழுமனதோடு உறவில் ஈடுபடுவது குறைந்து வருகிறது. குழந்தைகள் பற்றியோ, பண நெருக்கடி பற்றியோ, வேலைபார்க்கும் இடங்களில் உள்ள சிக்கல் பற்றியோ, கணவரால் ஏற்படும் பொதுவான குறைபாடுகள் பற்றிய சிந்தனையிலோ பெண்கள் சிக்கிக்கொள்வதால் அவர்கள் முழுமனதோடு உறவில் ஈடுபடுவதில்லை. அதனால் தம்பதிகள் இருவருக்குமே அதில் திருப்தி ஏற்படாமல் போய் விடுகிறது. திருப்தியின்மையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். திருப்தியடையாத பெண்கள் கணவரிடம் எரிச்சல்படுகிறார்கள். அது கோபமாகவும், சில நேரங்களில் பகையாகவும் மாறுகிறது. இந்த நிலையை மாற்ற பெண்கள் முன்வரவேண்டும். அதற்கு கணவரின் பங்களிப்பு மிக முக்கியம்.

பெண்கள் பாலுறவில் திருப்தியடைய அவர்கள் அந்த நேரத்தில் தங்கள் சிந்தனையை ஒருமுகப்படுத்தவேண்டும். அப்போது வேறு எதையும் பற்றி சிந்திக்கக்கூடாது. பொதுவாக இரவு நேர உறவின்போது, ‘நாளை என்ன சமையல் செய்வது?’ என்ற யோசனையில் பெரும்பாலான பெண்கள் ஆழ்ந்துபோகிறார்கள். ‘இந்த நேரம் பார்த்து குழந்தை விழித்துவிட்டால் என்ன செய்வது?’ என்ற கவலையும் அவர்களை வாட்டுகிறது. இதை எல்லாம் புரிந்துகொண்டு கணவனும்- மனைவியும் திட்டமிட்டு மனஅமைதியோடு தாம்பத்யத்தில் ஈடுபடவேண்டும். மனைவியின் அன்றாட வேலைகளை கணவரும் பங்கிட்டு, மனைவி சுமைதாங்கியாக ஆகாமலும் பார்த்துக்கொள்ளவேண்டும்.

தாம்பத்ய உறவு மனதுக்கு மகிழ்ச்சியையும், உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும். திருப்தியான உறவுக்கு பின்பு தம்பதி களிடையே அதுவரை இருந்த மனக் கசப்புகள் அனைத்தும் அடியோடு நீங்கி, புதிதாய் இணைந்த ஜோடிபோல் குதூகல மாய் வாழ்க்கையை நகர்த்துவார்கள். அடுத்த முறை இணை வதையும் ஆவலோடு எதிர்பார்ப்பார்கள். தாம்பத்யத்திற்கு பின்பு உடல்வலியும், தலைவலியும் நீங்கும். உடல் நெகிழ்ச்சி யாகி அதில் சுறுசுறுப்புடன் தங்கள் பணிகளை செய்வார்கள். தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டவர்கள், நன்றாக தூங்கவும் செய்வார்கள். திருப்தியான உறவு தம்பதிகளுக்குள் புதிய நம்பிக்கையை உருவாக்கி, அவர்களை வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச்செல்லும்'' என்றும் சொல்கிறார்கள்.

Next Story