நிதி சிக்கலில் மத்திய, மாநில அரசுகள்


நிதி சிக்கலில் மத்திய, மாநில அரசுகள்
x
தினத்தந்தி 25 Feb 2020 1:05 PM GMT (Updated: 25 Feb 2020 1:05 PM GMT)

நிதி பற்றாக்குறைகள் அதிகரித்து வரும் வேளையில், பொருளாதார வளர்ச்சி வேகக் குறைவினால், மாநில அரசுகள், தங்களின் செலவுகளை குறைப்பது கடினமாகியுள்ளது.

2019-20-ல் 0.7 சதவீத நிதிப்பற்றாக்குறையை கொண்ட டெல்லி மாநில அரசு,நிதி மேலாண்மையில் மிக சிக்கனமான மாநிலமாக திகழ்கிறது. அதை தொடர்ந்து புதுச்சேரி (1.3%),குஜராத் (1.8%) மற்றும் மராட்டியம் (2%) ஆகிய மாநிலங்களின் பட்ஜெட்டுகள் உள்ளன. 

2020-க்கான தமிழக பட்ஜெட்டின்படி,  2.56 சதவீத நிதிப்பற்றாக்குறையை கொண்ட தமிழகம் ஆறாவது இடத்தில் உள்ளது. மாநில உற்பத்தியின் மொத்த அளவில் 6.6 சதவீதம் மொத்த பற்றாக்குறையை கொண்ட மணிப்பூர் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் (6.5%) மற்றும் கோவா (5.2%) ஆகியவை உள்ளன.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் வருவாய் வசூல்கள் குறைந்து வருவதால், அவற்றின் பட்ஜெட்டுகளில் பற்றாக்குறை அளவுகள் அதிகரித்து வருகிறது. இது விலைவாசிஉயர்வுக்கு காரணமாகி, நாட்டின் வளர்ச்சித் திட்டங்களை பாதிக்கும்.

“பட்ஜெட் பற்றாக்குறை ஏற்படும் போது, அரசு தனது வரவுக்கு மேலே செலவு செய்து, விலைவாசி உயர்வை ஏற்படுத்துகிறது. சமீப வருடங்களில், அரசு தனது வருவாய்க்கு அதிகமாக செலவு செய்து வருகிறது“ என்று தக்‌ஷீலா நிறுவனத்தின் தலைமை ஆராய்ச்சியாளரான பிரனய் கோட்ஸ்தானே கூறுகிறார்.

நாட்டின் நிதியாதாரங்களை தவறான முறையில் நிர்வாகம் செய்ததாக பா.ஜ.க. அரசை குற்றம் சாட்டிய முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம், மாநிலங்களவையில் பேசும் போது,இந்திய பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியடையும் நிலைக்கு அருகில் அபாயகரமாக உள்ளது என்றும், திறமையில்லாத மருத்துவர்கள் அதற்கு சிகிச்சையளித்து வருகின்றனர் என்றும் கூறினார். 



வரி வசூல் போக்குகளில் இப்போது உள்ள போக்குகள் தொடருமானால், கார்ப்பரேட் வரி, வருமான வரி, சுங்க வரி, உற்பத்தி வரி மற்றும் ஜி.எஸ்.டி வரிகளின் வசூல் இந்த ஆண்டு வெகுவாக குறையும் என்று கருதப்படுகிறது. இதன் விளைவாக மத்திய அரசின் வருவாய், கணிக்கப்பட்ட அளவுகளை விட வெகுவாக குறைந்து விடும்.வளர்ச்சி மற்றும் சமூகத் துறைகளுக்கு செலவு அரசு ஒதுக்கும் நிதிகளின் அளவு குறைந்து, பொருளாதாரத்தை மீட்டெடுக்க மிகத் தேவையான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுதடைபடும். 
2020-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், மொத்த வருவாய் வரவுகள் ரூ.22.46 லட்சம் கோடியாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. செலவுகள் ரூ.30.42 லட்சம் கோடியாகவும், பற்றாக்குறை ரூ.7.96 கோடியாகவும் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. எப்.ஆர்.பி.எம் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள நிதிப்பற்றாக்குறை அளவை விட, 0.5 சதவீதம் அதிகமாக, 3.5 சதவீதமாக நிதிப்பற்றாக்குறை இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. இதில் பட்ஜெட்டுக்கு வெளியே வாங்கப்படும் கடன்கள் சேர்க்கப்படவில்லை. 

2019-20 பட்ஜெட்டில், நிதிப்பற்றாக்குறையின் அளவு 3.3 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் தற்போது உள்ள கணக்குகளின் படி இது 3.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது 5 சதவீதம் அளவுக்கு உயரும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். கார்ப்பரேட் வரி வசூல் ரூ.1.56 லட்சம் கோடி அளவுக்கும், வருமான வரி வசூல் ரூ.10,000 கோடி அளவுக்கும், இறக்குமதி வரி வசூல் ரூ.30,000 கோடி அளவுக்கும், உற்பத்தி வரிவசூல் ரூ.52,000 கோடி அளவுக்கும், ஜி.எஸ்.டி வரி வசூல் ரூ.51,000 கோடி அளவுக்கும் குறைந்துள்ளதை முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் சுட்டிக்காட்டியுள்ளார். 

பொருளாதார சுணக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், மிஞ்சியுள்ள இரண்டு மாதங்களில் வரி வசூல் எந்த அளவு இருக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியவில்லை. 

பதினைந்தாவது நிதிக் குழு நிர்ணயித்துள்ள அளவான, மொத்த வரி வசூலில் 41 சதவீதத்தை, மாநில அரசுகளுக்கு பகிர்ந்தளிப்பதை மத்திய அரசு தாமதப்படுத்தி வருகிறது. 

தமிழகம் மற்றும் கேரளா தங்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பங்கை கேட்டு, மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. இவற்றை பெறுவதன் மூலமே மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சியை தக்க வைக்க முடியும். 

மத்திய அரசு கூடுதல் வரிகளை செஸ் மற்றும் சர்சார்ஜ் முறைகளின் மூலம் விதிப்பது கடந்த சில வருடங்களில் அதிகரித்துள்ள நிலையில், இவற்றில் இருந்து மாநில அரசுகளுக்குஎதுவும் பங்களிக்கப்படாது என்பதால், மாநில அரசுகளின் பங்கு குறைந்துள்ளது. இதனால் மாநில அரசுகள், மத்திய அரசிடம் இருந்து வரி வசூலில் அதிக பங்கு கேட்டு வருகின்றன. 



மொத்த வரி வருவாயில், மாநில அரசுகளுக்கு அளிக்கப்பட்ட பங்கின் விகிதம் 30 சதவீதமாக நடப்பாண்டில் உள்ளது என்றும், கடந்த மூன்று ஆண்டுகளில் இது 30 சதவீத அளவில் தான் இருந்தது என்றும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜெயராம் ரமேஷ் கூறுகிறார். மத்திய அரசுக்கு தற்போது உள்ள நிதி நெருக்கடியினால்,மாநில அரசுகளுக்கு அது அளிக்க வேண்டிய பங்களிப்பை முழுமையாக செய்வது சந்தேகம் தான் என்கிறார். “பற்றாக்குறை மூலம் நிதி திரட்டும் முறையின் முக்கிய விளைவாக, சந்தையில் இருந்து பெரும் அளவி லான நிதிகளை அரசு உறிஞ்சி எடுத்து பற்றாக்குறையை சரி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு, கார்ப்பரேட்டுகளுக்கு குறைவான அளவு நிதிகிடைக்கும் ‘நெரிசலால் வெளியேற்றப்படும்’ நிலை உருவாகிறது. சந்தையில் இருந்து அரசு அதிகமாக கடன் வாங்குவதால், கார்ப்பரேட்டுகள் தங்களை விரிவுபடுத்தவும், புதியதிட்டங்களை தொடங்கவும் குறைவான நிதியே கிடைக்கும். இதனால் பொருளாதார வளர்ச்சி தடைபடும்” என்கிறார் கோட்ஸ்தானே.

மத்திய அரசு, தனது உண்மையான நிதிப்பற்றாக்குறையின் அளவை மறைப்பதற்காக, பட்ஜெட்டுக்கு வெளியே கடன் வாங்கும் நடைமுறை உள்ளது. ஆனால் உண்மையான பற்றாக்குறை ஜி.டி.பி.யில் ஐந்து சதவீதத்தை தாண்ட உள்ளது. நடப்பாண்டில் இது, அரசின் கணிப்பான 3.8 சதவீதத்தை ஒப்பிடும் போது, சுமார் 5 சதவீதத்தை எட்டும் என்பதால் இது கவலையளிக்கும் விஷயமாகும் என்கிறார் கோட்ஸ்தானே.

மாநில அரசுகள், 2017-18-ல், எப்.ஆர்.பி.எம் சட்டம் நிர்ணயித்துள்ள, ஜி.டி.பி.யில் 3 சதவீத பற்றாக்குறை என்ற வரம்பிற்குள் தங்களின் பற்றாக்குறையை நிலை நிறுத்தின.

இந்த செலவுகளை, முக்கியமாக மூலதன செலவுகளை பெருமளவில் குறைத்ததன் மூலம் நிறைவேற்றின என்று மாநிலங்களின் நிதி நிலைமை பற்றி, மாநில அரசுகளின் பட்ஜெட்கள்2019-20 என்ற தலைப்பில் ரிசர்வ் வங்கி நடத்திய ஆய்வு கூறுகிறது.வளர்ச்சியை தியாகம் செய்து பற்றாக்குறை மேலாண்மை செய்யப்படுவதை இது தெளிவாக காட்டுகிறது.

மேலும் இந்த ஆய்வறிக்கையில், மாநில அரசு களின் நிகர கடன்களின் அளவு கடந்த ஐந்து வருடங்களில் ஜி.டி.பி.யில் 25 சதவீதமாக உயர்ந்துள்ளதால், இடைக்கால அளவில் அவற்றின் நிலைத்தன்மைக்கு பெரும் சவால்களை ஏற்படுத்தியுள்ளது என்று கூறுகிறது.
மாநில அரசுகள் தங்களின் சமூக மற்றும் மூலதன செலவுகளை குறைக்கக் கூடாது என்று இந்த ஆய்வறிக்கை எச்சரிக்கிறது. இதன் விளைவாக பொருளாதார மற்றும் சமூகவிஷயங்களில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதை இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சுணக்கம் நிரரூபிக்கிறது. இது, மாநில அரசுகள் தம் செலவுகளை குறைத்துள்ள காலகட்டத்துடன் பொருந்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

2018-19-ல் மத்திய மற்றும் மாநில அரசுகளின் மொத்த வரி வருவாயின் அளவு, ஜிடிபியில் 17.5 சதவீதமாக உள்ளதாக பதினைந்தாவது நிதிக் குழு கூறுகிறது. 1990களின் துவக்கத்தில் இருந்து இன்று வரை இந்தியாவின் வரி வசூல் விகிதம் மாற்றங்கள் எதுவும் இல்லாமல் தொடர்வதை இது சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால் இதர வளரும் நாடுகளில் வரி வசூல் அதிகரித்து வருகிறது. வரி வசூல் செய்யப்படும் தளத்தை விரிவுபடுத்தவும், வரி விகிதங்களை ஒழுங்குபடுத்தவும்,வரி நிர்வாகத்தை மேம்படுத்தவும் இந்த குழு பரிந்துரைக்கிறது. 

விமர்சனங்களை மின்னஞ்சலில் அனுப்ப:NRD.thanthi@dt.co.in

Next Story