வாரத்தின் முதல் வர்த்தக தினத்தில் சென்செக்ஸ் 2,713 புள்ளிகள் வீழ்ச்சி நிப்டி 758 புள்ளிகள் சரிவடைந்தது


வாரத்தின் முதல் வர்த்தக தினத்தில் சென்செக்ஸ் 2,713 புள்ளிகள் வீழ்ச்சி நிப்டி 758 புள்ளிகள் சரிவடைந்தது
x
தினத்தந்தி 17 March 2020 8:43 AM GMT (Updated: 17 March 2020 8:43 AM GMT)

கொரோனா வைரஸ் பீதி உலகையே ஆட்டிப் படைத்து வரும் நிலையில் உலக பொருளாதாரம் கடுமையாக சரிவடைய இருப்பதாக மதிப்பீடு வெளியானது.

மும்பை

கொரோனா வைரஸ் உலக பங்கு வர்த்தகத்தை உலுக்கிய நிலையில் வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை அன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,713 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 758 புள்ளிகள் சரிவடைந்தது. எனவே, நேற்று அனைத்து நிறுவனப் பங்கு களின் ஒட்டுமொத்த மதிப்பு ஒரே நாளில் சுமார் ரூ.7 லட்சம் கோடி குறைந்தது.

பலி எண்ணிக்கை

கொரோனா தாக்குதலால் உலக நாடுகளில் பலி எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில், சென்ற வார பங்கு வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நிகர அடிப்படையில்3,473.14 புள்ளிகள் சரிவடைந்து 34,103.48 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 1,034.25 புள்ளிகள் இறங்கி 9,955.20 புள்ளிகளாக இருந்தது.

நடப்பு வாரத்தில் கொரோனா பாதிப்புகள், எண்ணெய் விலை மற்றும் ரூபாய் மதிப்பு போன்ற வெளிநிலவரங்கள் இந்திய பங்கு வர்த்தகத்தின் போக்கை தீர்மானிக்கும் என நிபுணர்கள் தெரிவித்து இருந்தனர். அதற்கேற்ப சர்வதேச நிலவரங்களால் நேற்று இந்திய பங்கு வர்த்தகம் சுருண்டது.

வட்டி விகிதங்கள்

கொரோனா வைரஸ் பீதி உலகையே ஆட்டிப் படைத்து வரும் நிலையில் உலக பொருளாதாரம் கடுமையாக சரிவடைய இருப்பதாக மதிப்பீடு வெளியானது. அதே சமயம் வங்கிகளுக்கான வட்டி விகிதங்களை அமெரிக்க ரிசர்வ் வங்கி ஒரு சதவீதம் குறைத்தது. இதனால் அந்நாட்டில் தற்போது வட்டி விகிதம் பூஜ்யமாகி இருக்கிறது. மிகப்பெரிய பொருளாதார மந்தநிலையின் அறிகுறியாக இது கருதப்பட்டதால் உலக நிதிச்சந்தைகளில் அதிர்வலைகள் பரவியது. அது உலக பங்கு வர்த்தகத்தை சீர்குலைத்தது.

மொத்த விலை பணவீக்கம்

உலக அளவில் ஏற்பட்ட கடும் சரிவை இந்திய பங்குச்சந்தைகளும் பிரதிபலித்தன. அத்துடன் கச்சா எண்ணெய் விலை சரிவு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்றவையும் வர்த்தகத்தை பாதித்தன. பிப்ரவரி மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் குறைந்து இருப்பது எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

அந்த நிலையில், மும்பை பங்குச்சந்தையில் அனைத்து துறை குறியீட்டு எண்களும் சரிந்தன. அதில் உலோக துறை குறியீட்டு எண் அதிகபட்சமாக 9.30 சதவீதம் குறைந்தது. அடுத்து வங்கி துறை குறியீட்டு எண் 8.36 சதவீதம் சரிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் இண்டஸ் இந்த் வங்கி, டாட்டா ஸ்டீல், எச்.டீ.எப்.சி., ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஐ.டி.சி., இன்போசிஸ், ஓ.என்.ஜி.சி. உள்ளிட்ட 30 நிறுவனப் பங்குகளின் விலையும் குறைந்தது.

மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 2,713.41 புள்ளிகள் சரிவடைந்து 31,390.07 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 33,103.24 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 31,276.30 புள்ளிகளுக்கும் சென்றது.

இந்தச் சந்தையில் 411 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 2,047 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தும் இருந்தது. 160 நிறுவனப் பங்குகளின் விலையில் மாற்றம் இல்லை. நேற்று மொத்த வர்த்தகம் ரூ.2,667.39 கோடியாக குறைந்தது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று அது ரூ.4,099 கோடியாக இருந்தது.

நிப்டி

தேசிய பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் நிப்டி 757.80 புள்ளிகள் இறங்கி 9,197.40 புள்ளிகளில் முடிவுற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 9,602.20 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 9,165.10 புள்ளிகளுக்கும் சென்றது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

Next Story