ரூபாய் மதிப்பு அடிப்படையில் நறுமண பொருள்கள் ஏற்றுமதி 7 சதவீதம் அதிகரித்தது


ரூபாய் மதிப்பு அடிப்படையில் நறுமண பொருள்கள் ஏற்றுமதி 7 சதவீதம் அதிகரித்தது
x
தினத்தந்தி 18 March 2020 8:43 AM GMT (Updated: 18 March 2020 8:43 AM GMT)

நடப்பு 2019-20-ஆம் நிதி ஆண்டின் ஜனவரி வரையிலான 10 மாதங்களில் ரூ.21,707 கோடிக்கு நறுமணப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கிறது.

மும்பை

பிப்ரவரி மாதத்தில், ரூபாய் மதிப்பு அடிப்படையில் நாட்டின் நறுமண பொருள்கள் ஏற்றுமதி 7 சதவீதம் அதிகரித்துள்ளது.

70 சதவீத பங்கு

சர்வதேச அளவில் வெள்ளைப்பூண்டு உற்பத்தியில் 70 சதவீத பங்குடன் சீனா முதலிடத்தில் உள்ளது. எனவே வெள்ளைப்பூண்டு ஏற்றுமதியிலும் சீனாவே முதலிடத்தில் இருக்கிறது. காரம் குறைவாக உள்ளதால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அந்நாட்டு வெள்ளைப்பூண்டு அதிகம் விரும்பப்படுவதே இதற்கு காரணமாகும். வெள்ளைப்பூண்டு ஏற்றுமதியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. நம் நாட்டில் மத்தியபிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் அதிக அளவில் வெள்ளைப்பூண்டு விளைகிறது.

மஞ்சள் உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் பயன்பாட்டில் இந்தியா உலகிலேயே முதலிடத்தில் இருக்கிறது. தென் மாநிலங்களில் ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் மஞ்சள் அதிகம் விளைகிறது. இந்தியாவில் உற்பத்தியாகும் மொத்த மஞ்சளில் 10 சதவீதம் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது. 90 சதவீதம் உள்நாட்டிலேயே பயன்படுத்தப்படுகிறது.

8.43 லட்சம் டன்

2015-16-ஆம் நிதி ஆண்டில் 8.43 லட்சம் டன் நறுமணப் பொருள்கள் ஏற்றுமதி ஆகி இருந்தது. அதன் மதிப்பு ரூ.16,238 கோடியாகும். 2016-17-ஆம் நிதி ஆண்டில் ரூ.17,665 கோடிக்கு 9.48 லட்சம் டன் அளவிற்கு இந்தப் பொருள்களின் ஏற்றுமதி இருந்தது. அப்போது அளவின் அடிப்படையில் 12 சதவீதமும், மதிப்பு அடிப்படையில் 9 சதவீதமும் ஏற்றுமதி அதிகரித்தது. 2017-18-ஆம் நிதி ஆண்டில் 10.28 லட்சம் டன் நறுமணப் பொருள்கள் (மதிப்புக் கூட்டியவை உள்பட) ஏற்றுமதி செய்யப்பட்டது. சென்ற நிதி ஆண்டில் 11 லட்சம் டன் ஏற்றுமதி ஆகி இருக்கிறது என்றும் அதன் மதிப்பு ரூ.19,505 கோடியாகும் எனவும் இத்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

நடப்பு 2019-20-ஆம் நிதி ஆண்டின் ஜனவரி வரையிலான 10 மாதங்களில் ரூ.21,707 கோடிக்கு நறுமணப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் இதே காலத்தில் அது ரூ.18,547 கோடியாக இருந்தது. ஆக, ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி 17 சதவீதம் உயர்ந்துள்ளது. இதே காலத்தில் டாலர் மதிப்பில் நறுமணப் பொருள்கள் ஏற்றுமதி 16 சதவீதம் உயர்ந்து 308 கோடி டாலராக அதிகரித்து இருக்கிறது.

பிப்ரவரி மாதத்தில் அந்தப் பொருள்கள் ஏற்றுமதி ரூ.2,105 கோடியாக இருக்கிறது. சென்ற ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது இது 7 சதவீதம் உயர்வாகும். அப்போது அது ரூ.1,966 கோடியாக இருந்தது. இதே மாதத்தில் டாலர் மதிப்பில் நறுமணப் பொருள்கள் ஏற்றுமதி சுமார் 5 சதவீதம் அதிகரித்து 29 கோடி டாலராக உள்ளது. 2019 பிப்ரவரி மாதத்தில் அது 27.6 கோடி டாலராக இருந்தது.

சீரகம், வெந்தயம்

நம் நாட்டில் சீரகம், வெந்தயம், மஞ்சள், மிளகாய், புதினா, நறுமண எண்ணெய் மற்றும் ஓலியோரெசின் உள்ளிட்ட பல்வேறு நறுமணப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நறுமண பொருள்கள் ஏற்றுமதியில் மிளகாயின் பங்கு அதிகமாக உள்ளது. மிளகாய்க்கு அடுத்தபடியாக வெள்ளைப்பூண்டு அதிக பங்கினைக் கொண்டுள்ளது.

கறி மசாலா தூள் மற்றும் பேஸ்ட் வகைகள், நறுமண எண்ணெய் மற்றும் ஓலியோரெசின் ஆகியவற்றின் பங்கும் கணிசமாக இருக்கிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்திய நறுமணப் பொருள்களுக்கு பெரிய ஏற்றுமதி சந்தைகளாக இருந்து வருகின்றன. தென்கிழக்கு ஆசிய நாடுகளும் நம்மிடம் இருந்து இந்த பொருட்களை அதிகம் வாங்குகின்றன.

ஏற்றுமதி விறுவிறுப்பு

ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் நறுமண பொருள்கள் வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் இனி வரும் காலங்களில் ஏற்றுமதி விறுவிறுப்பாக இருக்கும் என அந்த வாரியத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

Next Story