நோயாளி குணம் அடைந்தாலும் கொரோனா வைரசை பரப்பும் காலம் தொடரலாம்-புதிய புத்தகத்தில் பரபரப்பு தகவல்


நோயாளி குணம் அடைந்தாலும் கொரோனா வைரசை பரப்பும் காலம் தொடரலாம்-புதிய புத்தகத்தில் பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 7 April 2020 2:11 AM GMT (Updated: 7 April 2020 2:11 AM GMT)

நோயாளி குணம் அடைந்த பின்னரும் கூட கொரோனா வைரசை பரப்பும் காலம் தொடரக்கூடும் என்று புதிய புத்தகம் ஒன்று கூறுகிறது.

புதுடெல்லி, 

நோயாளி குணம் அடைந்த பின்னரும் கூட கொரோனா வைரசை பரப்பும் காலம் தொடரக்கூடும் என்று புதிய புத்தகம் ஒன்று கூறுகிறது.

கொரோனா வைரஸ் ஒரு பக்கம் பரவி வந்தாலும், அது தொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
அந்தவகையில் பிரபல மருத்துவ நிபுணர்களான ஸ்வப்னீல் பரிக், மகேரா தேசாய், ராஜேஷ் எம்.பரிக் ஆகியோர் இணைந்து கூட்டாக ஒரு புத்தகம் எழுதி உள்ளனர்.

‘கொரோனா வைரஸ்: உலகளாவிய தொற்று நோயைப்பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?’ என்ற தலைப்பிலான இந்த புத்தகத்தை பெங்குயின் ரேண்டம் ஹவுசின் எபரிபிரஸ் வெளியிட்டுள்ளது.

இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-

* கொரோனா வைரசின் அடைகாக்கும் காலம் 1- 14 நாட்கள் ஆகும். ஆனாலும், பெரும்பாலான கேஸ்களில் கொரோனா வைரஸ் 5 அல்லது 6 நாட்களாக இருக்கின்றன. ஆகையால் அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

* விமான பயணத்தின்போது ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதித்தாலும், அவர்கள் உடனடியாக படுக்கையில் விழுந்து விடுவதில்லை. அவர்கள் அடைகாக்கும் காலத்தில் (14 நாட்கள்) இருக்கிறபோது, அவர்கள் பல நாடுகளுக்கு போகக்கூடும். அவர்கள் தாங்கள் செல்கிற இடங்களில் பலருக்கு இந்த வைரசை பரப்பி விடுவார்கள்.

* விமானத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பரவுகிறபோது, தொடர்பு தடம் அறிதலும், சிகிச்சை அளிப்பதும் மிக கடினமாக அமைந்து விடும். ஏனெனில் அவர்களுடன் பயணம் செய்தவர்கள் வெவ்வேறு நாடுகளை, இடங்களை அடைந்திருக்க கூடும். இதனால் தொற்று உலகமெங்கும் எளிதாக பரவி விடும்.

* அடை காக்கும் காலமானது, பாதிப்புக்குள்ளானவர்கள் தொடர்பில் இருந்தவர்களை தடம் அறிய உதவுகிறது. தொடர்புகள் தடம் அறிவதை மிகவும் கவனமுடன் செய்ய வேண்டும். ஒருவரை தவற விட்டுவிட்டால் கூட அவர் மூலம் பலருக்கு கொரோனா வைரஸ் பரவி விடும்.

* ஒருவருக்கு கொரோனா வைரஸ் பரவலாம். ஆனால் பல நாட்கள் அவர் நோய்வாய்ப்படாமல், படுக்கையில் விழாமல் இருப்பார். ஆரோக்கியமானவராக தோன்றுவார். ஆனால் இத்தகைய நபர்களை அவர்களுக்காக மட்டுமல்ல, மற்றவர்களுக்கு தொற்று பரவாமல் இருக்கவும் கண்காணிக்கப்பட வேண்டும்.

* கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபர்கள், இருமல், தும்மல், முனகல் மூலம் மற்றவர்களுக்கு பரப்பக்கூடும்.


* ஒரு நபர் நோய்வாய்ப்படுவதற்கு முன்பாகவே கொரோனா வைரசை பரப்பும் காலம் தொடங்கலாம். அவர்கள் குணம் அடைந்த பிறகுகூட அது தொடர வாய்ப்பு இருக்கிறது.

* நோய் வாய்ப்பட்ட சிலர் மிக அதிகளவில் மற்றவர்களுக்கு பரப்பி விடுவதும் நேர்கிறது. ஆனால் தற்போதைய ஆய்வுகளில், நல்ல ஆரோக்கியநிலையில் இருப்பவர்கள் கூட மற்றவர்களுக்கு கொரோனா வைரசை பரப்புவது நிரூபணமாகிறது. இவர்கள் ஆரோக்கியமானவர்களாக இருப்பார்கள். நோய் அறிகுறி தெரியாது. அவர்களால் மற்றவர்களுக்கு பரப்பி விட முடியும். குழந்தைகள் அதிக பாதிப்புக்கு ஆளாகிறார்கள். அவர்களுக்கு அறிகுறிகள் இல்லாமலோ, லேசான அறிகுறிகளோ இருக்கலாம். அவர்கள் தாத்தா, பாட்டிக்கு எளிதாக பரப்பி விடுவார்கள்.

* உலகின் ஏழை நாடுகளையும், ஏழை மக்களையும் கொரோனா வைரஸ் மூழ்கடித்து விடும்.

* கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டம் நடந்து கொண்டிருக்கிற நிலையில், பலர் கண்டறிந்து சிகிச்சை அளித்து நிவாரணம் தேடிக் கொள்ள முடியும் என்ற நிலையில்கூட கவனிக்கப்படாமலும், அறியாமலும்கூட இறந்து போய் விடுவார்கள்.இவ்வாறு அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.


Next Story