கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய குட்டி செயற்கைக்கோள்


முழுமை பெற்ற செயற்கைக்கோளுடன்...; செயற்கைக்கோள் உருவாக்க பணியில் கல்லூரி மாணவர்கள்
x
முழுமை பெற்ற செயற்கைக்கோளுடன்...; செயற்கைக்கோள் உருவாக்க பணியில் கல்லூரி மாணவர்கள்
தினத்தந்தி 27 Feb 2021 3:42 PM GMT (Updated: 27 Feb 2021 3:42 PM GMT)

கோவையை சேர்ந்த கல்லூரி மாணவர்கள், குட்டி செயற்கைக்கோளை வடிவமைத்து அசத்தி உள்ளனர். ‘ஸ்ரீ சக்தி சாட்’ என பெயரிடப்பட்டிருக்கும் இந்த செயற்கைக் கோளை ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரியை சேர்ந்த 13 மாணவர்களும், 3 பேராசிரியர்களும் இணைந்து உருவாக்கி உள்ளனர்.

இணையம் தொடர்பான செயல்பாட்டிற்காக உருவாக்கப்பட்டிருக்கும் இது நாளை (ஞாயிற்றுக்கிழமை) விண்ணில் பாய இருக்கிறது. இதுதொடர்பாக செயற்கை கோள் வடிவமைப்பு குழுவின் தலைமை மாணவனான நிகில் ரியாஸ் பகிர்ந்து கொண்டதை பார்ப்போம்.‘‘இது 460 கிராம் மட்டுமே எடையுள்ள ஒரு பிக்கோ செயற்கைக்கோளாகும். இருப்பினும் 10 கிலோ வரை எடையுள்ள மற்ற நானோ செயற்கைக்கோளை போல சிறப்பாக செயல்படும் திறன் கொண்டது. இந்த செயற்கைக்கோள் பூமியிலிருந்து 500-575 கி.மீ தூரத்தில் சுற்றுவதால் இது ஒரு `லியோ' (LEO-Low Earth Orbit) செயற்கைக்கோளாக 
இருக்கும்.

விண்வெளியில் நடக்கும் அனைத்து விதமான இணையம் சார்ந்த செயல்பாடுகளிலும் இந்த செயற்கைக்கோளானது முக்கிய பங்காற்றும். செயற்கைக்கோள்களை இணைக்கவும், அதிலிருந்து இணையதள வசதிகளை பகிரவும், தகவல்களை பரிமாறவும் இது உதவியாக இருக்கும்.விண்வெளியில் இணைய விஷயங்களை ஐ.ஓ.டி விவரிப்பதற்கான செயல்முறை விளக்கமளிக்கும் தொழில்நுட்பமாகவும், செயற்கைக்கோள்களுக்கு இடையேயான தகவல் தொடர்பு தொழில் நுட்பமாகவும் செயல்படும். ரிமோட்/ ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் இன்றைய காலகட்டத்தில் முக்கியமான அமைப்புகளை கட்டுப்படுத்துவதற்கு இதை பயன்படுத்தலாம்.

உதாரணமாக தண்ணீர் கசிவு, எண்ணெய் அல்லது எரிவாயு கசிவு போன்றவற்றை கண்டறிவதற்கும், அதன் வால்வுகளை திறந்து மூடுவதற்கும் இந்த செயற்கைக்கோளைப் பயன்படுத்தலாம். அதுபோல காட்டுத்தீயை அணைப்பதற்கோ அடுக்குமாடிக்குடியிருப்பில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கோ இந்த செயற்கைக்கோளை பயன்படுத்தலாம். வங்கிகள் மற்றும் பிற பாதுகாப்பு பகுதிகளில் நிகழும் திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களை தடுக்கவும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதேபோல பசிபிக் பெருங்கடலில் தொலைந்துபோன கப்பல்களை கூட சுலபமாக கண்டுபிடிக்க முடியும். மேலும் இணைய வசதி இல்லாத பகுதிகளில்கூட, இந்த செயற்கைக்கோள் வழியாக இணைய வசதி பெற முடியும்’’ என்றனர்.

நிகில் ரியாஸ், தருண், அஷ்வின், சாய்நாத், பாவனா, ஹரிராஜ், டென்சில், அதிரா, விஸ்வா, ஜோஸ்வா... என நீளும் மாணவர் படை, இந்த செயற்கைக்கோள் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியிருக்கிறது. மேலும் செயற்கைக்கோள் கண்காணிப்பிற்கான தரைத்தள தொழில்நுட்பங்களை, செர்பியா நாட்டை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி குழு ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது.

Next Story