கட்டுக்கடங்காத காதல் தீ


கட்டுக்கடங்காத காதல் தீ
x
தினத்தந்தி 28 Feb 2021 1:07 PM GMT (Updated: 28 Feb 2021 1:07 PM GMT)

காதல் மனித வாழ்க்கையை துளிர்க்கவும் வைக்கிறது. துடிக்கவும் வைக்கிறது. எத்தனையோ காதலர்கள் ஒன்றிணைந்து வெற்றிகரமாக தங்கள் வாழ்க்கையை தொடங்கினாலும், தோல்வியடையும் ஒரு சில காதலர்களின் வாழ்க்கையில் சோகம் சூழ்ந்துவிடுகிறது.

காதலில் பிரிவு ஏற்படும்போது வன்முறையைத் தேடும் ஆண்களில் சிலர் காதலியை பழிவாங்க ஆசிட் வீசுவது, தீவைத்து கொழுத்துவது, குடும்பத்தினரை கொலை செய்வது போன்ற கோர செயல்களில் ஈடுபடுகிறார்கள். கட்டுக்கடங்காத காதல் தீயால் ஏற்படும் கோர சம்பவங்களையும், இழப்புகளையும் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றால் காதலர்களான ஆண்கள், காதலிகளான பெண்கள், அவர்கள் வாழும் இந்த சமூகம் போன்ற அனைத்திலுமே சிந்தனை மாற்றங்கள் உருவாகவேண்டும். அதை பற்றி விரிவாக அலசுவோம்!

காதலிக்கும் ஒவ்வொரு ஆணும் தனக்குள் `காதல்வசப்பட்டிருக்கும் நான் எதற்காக அவளை விரும்புகிறேன்?' என்ற கேள்வியை முதலில் தனக்குள் எழுப்பவேண்டும். ஒருவர், தான் பார்க்கும் பெண்களில் தனக்கு பொருத்தமானவளாக எந்த பெண்ணை கருதுகிறாரோ அந்த பெண் மீது அவருக்கு காதல் பூக்கிறது. அப்போது அவர் கீழ்கண்ட கேள்விகள் அனைத்திற்கும் விடைதேடுவது மிக முக்கியம்.

* அந்த பெண் தனக்கு பொருத்தமானவள் என்று கருதுகிறீர்களா?

* அவளது விருப்பு, வெறுப்புகள் என்ன என்பது தெரியுமா?

* அவளது வாழ்வியல் மற்றும் குடும்ப சூழல் பற்றி உங்களுக்கு தெரியுமா?

*அவளது குணாதிசயம் என்ன?

*அவளது அனைத்து விஷயங்களும் உங்களோடு பொருந்தும் என்று கருது கிறீர்களா?

... இத்தனை கேள்விகளுக்கும் விடை தெரிந்து, அவள் தனக்கு பொருத்தமானவள் என்று அறிந்த பின்புதான் காதலிக்கத் தொடங்கவேண்டும். ஆனால் பலரும் தனது வாழ்க்கையில் இருக்கும் வெற்றிடத்தை நிரப்புவதற்காகவும், தனக்கும் ஒரு ஜோடி வேண்டும் என்பதற்காகவும்தான் காதலிக்கிறார்கள். அதனால்தான் அவர்களது காதலின் அஸ்திவாரமே ஆட்டம் காண்கிறது. தனது உணர்வுகளையும், உற்சாகத்தையும், தனிமையையும், தவிப்பையும் பங்கிட ஒரு பெண் தேவை என்ற எண்ணத்தில் தொடங்கும் காதல், நாளடைவில் கசப்புகளால் நிரம்பிவழிகிறது. அவர்களுக்குள்தான் 
பிரச்சினைகள் எழுகிறது.

சிலர் காதல் தரும் கிளர்ச்சியை அனுபவிப்பதற்காக காதலித்துக் கொண்டிருக்கிறார்கள். `என் நண்பர்களுக்கெல்லாம் காதலி இருக்கிறாள். எனக்கு மட்டும் இல்லை' என்ற குறையை போக்கிக்கொள்ள காதலில் இறங்குகிறவர்களும் உண்டு. பொழுதுபோக்குக்காக காதலில் ஈடுபடுகிறவர்களும் இருக்கிறார்கள். அழகான பெண் ஒருவரை பார்த்துவிட்டால் அவரை எப்படியாவது அடையவேண்டும் என்பதற்காக காதலிப்பவர்களும் நம் மிடையே உண்டு. நண்பர்களி டையேயான போட்டியில் வெல்வதற்காக காதல்களம் காண்பவர்களும் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களின் காதல் கரையேறுவது இல்லை. பெண்கள் மீது ஏற்படும் அழகையும், ஈர்ப்பையும் அடிப்படையாகக்கொண்டு எழும் காதல் பெரும்பாலும் அற்ப ஆயுள் கொண்டதாகவோ, ஆபத்தில் முடிவதாகவோதான் இருக்கிறது.

பெண்ணின் அழகால் ஈர்க்கப்பட்டு அவளை காதலிக்க விரும்பும் ஆணின் மனதில் பாலியல் தேவைகள் இருந்துகொண்டிருக்கக்கூடும். அதற்கு பெண் இடம்கொடுத்துவிட்டால் அந்த ஆணின் தேவை முழுவதும் அதை சுற்றியே இருக்கும். அதை அனுபவித்து பழகியவனுக்கு, அதில் தடை ஏதாவது ஏற்பட்டால் அவனால் அதை தாங்கிக்கொள்ள இயலாது. அப்போது அவன் வன்முறை, மிரட்டல், கொலை முயற்சி போன்றவைகளில் ஈடுபடக்கூடும்.

சிலர் காதல் என்ற பெயரில் பெண்களை விடாமல் துரத்துவார்கள். அந்த பெண்ணுக்கு அதில் விருப்பம் இருக்காது. உடனே `நான் இத்தனை நாட்கள் உன் பின்னால் சுற்றியும் நீ என் காதலை அங்கீகரிக்கவில்லை. அதனால் உனக்கு நான் தக்கபாடம்புகட்டப் போகிறேன்' என்று கூறிக்கொண்டு பழிவாங்க முயற்சிப்பார்கள். இவர்கள் ஒருதலைக்காதலர்கள். இப்படிப்பட்ட ஆண்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். இத்தகைய ஆண்கள், தங்களிடம் சிரித்துப்பேசும் பெண்கள் அனைவரையுமே தங்களை காதலிப்பவர்கள் பட்டியலில் சேர்த்துவிடுவார்கள். இப்படிப்பட்ட தவறான புரிதல் கொண்டவர்களே `அவள் என்னை பார்த்தாள்.. சிரித்தாள்.. பேசினாள்.. பின்பு காதலை நிராகரித்துவிட்டாள்' என்று கூறிக்கொண்டு அவளுக்கு உயிரிழப்பைகூட ஏற்படுத்த முயற்சிப்பார்கள்.

ஒரு பெண், ஆணின் காதலை நிராகரிக்கிறாள் என்றால் அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கும். அந்த காரணங்களை ஆண் ஆராய்ந்து பார்க்கவேண்டும். அதே நேரத்தில் அந்த காரணத்தைக் கேட்டு பெண்ணை பின்தொடர்ந்து காயப்படுத்த முயற்சிக்கக்கூடாது. ஒருவரது காதலை நிராகரிக்க பெண்ணுக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கும். எல்லா காரணங்களையும் எல்லா நேரத்திலும், எல்லோரிடமும் அவளால் விளக்கிக்கொண்டிருக்க முடியாது. அதனால் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலோ, காதலை இடையில் முறிக்கும் சூழ்நிலை ஏற்பட்டாலோ அதில் இருந்து விலகிவிடவேண்டும். காதலித்துதான் ஆகவேண்டும் என்று எந்த பெண்ணையும் நிர்பந்திக்க யாருக்கும் உரிமையில்லை.

காதலித்துக் கொண்டிருக்கும் பெண்களும் சில கேள்விகளுக்கு கட்டாயம் விடை காணவேண்டும். நீங்கள் வாழ்க்கையில் எத்தனையோ இளைஞர்களை சந்தித்திருப்பீர்கள். அப்படி இருக்கும்போது `குறிப்பிட்ட அந்த இளைஞர் மீது மட்டும் உங்களுக்கு காதல் வர என்ன காரணம்?'- என்ற கேள்விக்கு முதலில் விடைகாணுங்கள். அதாவது கையில் இருக்கும் ஸ்மார்ட்போனை மாற்றுவதுபோல் மாற்றக்கூடியதல்ல காதல் என்பதை எப்போதும் நினைவில் வைத்திருங்கள். பொழுதுபோக்குக்காக காதலித்துக்கொண்டிருந்தால் அதனால் உருவாகும் ஆபத்தை நீங்கள் சந்திக்கவேண்டியதாகி விடும். 

அடிக்கடி உணர்ச்சிவசப்படும் ஒருவரை நீங்கள் காதலித்துக்கொண்டிருந் தால், ஒருவேளை நீங்கள் பிரிந்துபோகும் சூழ்நிலை ஏற்பட்டால் அவர் அப்போது எப்படி எதிர்வினையாற்றுவார் என்பதை நினைத்துப் பார்த்துக்கொள்ளுங்கள்.

`காதலிக்கும் அந்த நபர்தான் உங்கள் உயிர், உலகம். அவர் இல்லாவிட்டால் தன்னால் வாழவே முடியாது' என்ற நிலையில் ஒருபோதும் இருந்துகொண்டிருக்காதீர்கள். காதலுக்கு கண் இல்லை என்பார்கள். அதை நிரூபிக்கும் விதத்தில் பொறுப்பற்ற முறையில் கண்மூடித்தனமாக யாரையும் காதலித்து விடாதீர்கள். தெளிவான சிந்தனை கலந்த பார்வையோடு உங்கள் காதலரை ஆய்வுசெய்யுங்கள். காதலரை பற்றி முழுமையாக அறிந்துகொள்ளும் அதே நேரத்தில் உங்கள் இயல்பான சுபாவம் எப்படிப்பட்டது என்பதையும் அவருக்கு உணர்த்திவிடுங்கள். இயற்கையான உங்கள் 
குணாதிசயத்தைமறைத்துக்கொண்டு அவரது எதிர்பார்ப்புக்கு தக்கபடி உங்களை மாற்றி பழகிக்கொண்டிருப்பது குறுகிய கால காதல் பயணத்திற்கே கைகொடுக்கும். காதலுக்காக உங்கள் தனித்துவத்தை இழக்க ஒருபோதும் சம்மதித்துவிடக்கூடாது.

காதலுக்கும்-காமத்திற்கும் உள்ள வேறுபாட்டை பெண்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். இளமை முறுக்கில் ஆண்கள் காதலில் அதிகாரத்தை நிலைநாட்ட முயற்சிப்பார்கள். கீழ்ப்படுத்தவும் முயற்சிப்பார்கள். அப்போதெல்லாம் பெண்கள் விட்டுக்கொடுப்பவர்களாகவும், ஆணுக்கு அனுசரித்துப்போகிறவர்களாகவும் மாறிவிடக்கூடாது. அது சரியான காதலுக்கு பொருத்தமானதல்ல. பெண்ணும், ஆணும் காதலிக்கும்போது ஒரு சில விஷயங்களில் `முடியவே முடியாது' என்று சொல்லவேண்டியிருக்கும். `நோ' சொல்லவேண்டிய அந்த விஷயங்களுக்கு `நோ' சொல்வதுதான் பெண்களுக்கு பெருமை. 

எத்தனை உதாரணங்களை சொன்னாலும் உங்கள் மனசாட்சி தவறு என்று சொல்வது, தவறான செயல்தான் என்பதை புரிந்துகொள்ளுங்கள். அன்பின் பெயரில் நடக்கும் அத்துமீறல் எந்த வடிவில் வந்தாலும் அதற்கு இடம்கொடுத்துவிடக்கூடாது.

`அவர் சிறிது காலம் என் பின்னாலே நடந்தார். நான் காதலிக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக சொன்னார். அதனால் நான் அவரை தற்போது காதலித்துக்கொண்டிருக்கிறேன்' என்று நீங்கள் சொன்னால், தவறான காதலரை தேர்ந்தெடுத்துவிட்டீர்கள் என்று அர்த்தம். எமோஷனல் பிளாக்மெயிலிங் செய்து கட்டாயமாக காதலிக்கவைப்பவர்களிடம் இருந்து அகன்றுவிடுங்கள். அவர்கள் உங்களிடம் ஒவ்வொரு முறையும் காரியம் சாதிக்கவும் தற்கொலை நாடகமாடுவார்கள்.

காதலிக்கும் மகளிடம் பெற்றோர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் தெரியுமா?

`காதல் ஒரு மோசமான செயல். அதற்கெல்லாம் உன்னை அனுமதிக்க முடியாது' என்று சில பெற்றோர்கள், மகளிடம் சொல்கிறார்கள். அப்படி சொல்லவேண்டியதில்லை. காதல் என்பது மனித உணர்வு. அது இயல்பானது. பயங்கொள்ளக்கூடியதல்ல. கட்டுப்படுத்த வேண்டியதும் இல்லை. மகளுடன் சுதந்திரமாக எல்லா விஷயங்களையும் விவாதித்தால்தான் அவளும் தனது மனதில் இருப்பதையும், தன்னைச் சுற்றி நடப்பதையும் விவாதிக்க முன்வருவாள். காதலுக்கு கட்டுப்பாடு விதிக்கும் பெற்றோரின் மகள்கள் பெற்றோருக்கு தெரியாமலே காதலிக்கிறார்கள். அது தப்பான காதலர்களுக்கு 
ஊக்கமாகிவிடுவதால், அத்தகைய பெண்கள் அதிகமாக பாதிக்கப்படவும் செய்கிறார்கள். மகள் பாதிக்கப்பட்ட பின்பே இத்தகைய பெற்றோருக்கு மகளின் காதலே தெரியவருகிறது.

`என் மகளுக்கு எதுவுமே தெரியாது. அவள் ஒரு அப்பாவி' என்று சில பெற்றோர் தவறாக தப்பட்டம் அடித்துக்கொள்கிறார்கள். காதல் தப்பானதல்ல. காதலிக்கும் பெண்களும் தப்பானவர்கள் இல்லை. 

காதலை சரியாக கையாளத்தெரியாத பெண்களே அதன் ஆபத்துகளில் சிக்குகிறார்கள். காதலை போன்று பெண்களின் வாழ்க்கையில் பல பிரச்சினைகள் வரும். அதை எல்லாம் கையாள பெண்களுக்கு போதுமான அனுபவம் தேவை. அதனால் பிரச்சினைகளே இல்லாத பெண்களாக யாருமே வாழ முடியாது என்பதை உங்கள் மகளுக்கு உணர்த்தி, பிரச்சினைகளை சரியாக கையாள வழிகாட்டுங்கள்.

Next Story