மிதக்கும் சந்தைகள்!


மிதக்கும் சந்தைகள்!
x
தினத்தந்தி 12 Jun 2021 11:20 AM GMT (Updated: 12 Jun 2021 11:20 AM GMT)

பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் கடைகளைத் தேடி நாம்தான் செல்ல வேண்டும் இல்லையா? ஆனால், உலகின் சில இடங்களில் கடைகள் நம்மைத் தேடி வருகின்றன! இவை தண்ணீரில் மிதக்கக்கூடிய படகுக் கடைகள். தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து, இந்தோனேஷியா, வியட்நாம் போன்ற நாடுகளில் மிதக்கும் சந்தைகள் அதிக அளவில் உள்ளன.

இதில் அதிக அளவில் மிதக்கும் சந்தைகளைக் கொண்ட நாடு தாய்லாந்து. புகழ்பெற்ற மிதக்கும் சந்தைகளில் ஒன்று பாங்காக்கில் இருக்கும் டாம்னோயன் சடுவாக். இங்கே படகுகளின் எண்ணிக்கையும் அதிகம். மக்களின் எண்ணிக்கையும் அதிகம். இந்தச் சந்தை அதிகாலையிலேயே ஆரம்பித்துவிடும். மதியத்துடன் முடிந்துவிடும். பாங்காக்கில் உள்ள அம்பவா மிதக்கும் சந்தை மாலையில் மட்டுமே இயங்கும். இப்படி இன்னும் சில சந்தைகள் தாய்லாந்தில் உள்ளன.

வியட்நாமின் மிகப் பெரிய மிதக்கும் சந்தை மெகோங் டெல்டா. தினமும் நூற்றுக்கணக்கான படகுகள் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கும். இதே போல காய் பி மிதக்கும் சந்தையும் புகழ்பெற்றது. இந்தியாவிலும் மிதக்கும் சந்தை எழில் கொஞ்சும் காஷ்மீர் நகரின் தால் ஏரியில் இயங்கி வருகிறது. ஏரியில் மிதக்கும் படகு வீடுகளை நோக்கி, படகுகளில் பொருட்களைக் கொண்டு வருகிறார்கள். ஏராளமான பொருட்கள் இங்கு கிடைக்கின்றன. ஜில்லென்ற குளிரையும் தூரத்தில் பனி போர்த்திய மலைகளையும் ரசித்தபடியே பொருட்களை வாங்கலாம்.

எதற்காக மிதக்கின்றன?

நீர்நிலைகளுக்கு அருகே வசிக்கும் விவசாயிகள் இன்றும் தங்களின் காய்கறி, பழங்கள், வேறு சில பொருட்களைப் படகுகளில் எடுத்துச் சென்றுதான் விற்கிறார்கள். சிறிய படகுகளில் அடுப்பை வைத்து சுடச்சுட உணவுகள், சூப், தேநீர்கூட விற்கிறார்கள். நூற்றுக்கணக்கான படகுகளில் பல வண்ணப் பொருட்களை, கரையில் நின்று பார்த்தால் பிரமாதமாக இருக்கும். இதற்காகவே வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

Next Story