பனிப்பாறை பிளவும், ஆபத்தும்..!


பனிப்பாறை பிளவும், ஆபத்தும்..!
x
தினத்தந்தி 12 Jun 2021 3:56 PM GMT (Updated: 12 Jun 2021 3:56 PM GMT)

உலகின் தென் துருவத்தில் உள்ள அண்டார்டிகா கண்டம், பனிப்பாறைகள் மற்றும் மலைகளை கொண்ட உறைநிலை குளிர் பிரதேசம். இங்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ஆய்வு கூடங்களை அமைத்து ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

உலகில் தற்போது நிலவி வரும் புவி வெப்பம் காரணமாக அண்டார்டிகாவில் பனிப்பாறைகளும், பனி மலைகளும் நாள்தோறும் உருகிவருகின்றன. இதன் காரணமாக கடல் மட்டம் உயரும் அபாயம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்களும், சமூக ஆர்வலர்களும் நீண்ட காலமாகவே உலக நாடுகளை எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் 1986-ம் ஆண்டு அண்டார்டிகாவில் இருந்து பிரிந்த ‘ரூன் பில்ஷர்’ பனிப்பிளவில் இருந்து ஒரு பிரம்மாண்டமான பனிப்பாறை உடைந்துள்ளது. இது சுமார் 4,320 சதுர கி.மீ. பரப்பளவும், 175 கி.மீ. நீளமும், 25 கி.மீ. அகலமும் கொண்டது.

ஏ-76 (A-76) என பெயரிடப்பட்ட இந்த பனிப்பாறை உடைப்பை ‘கோப்பர்நிகஸ் செண்டினல்-1’ என்ற செயற்கைக்கோள் எடுத்து அனுப்பிய புகைப்படங்களின் மூலம், உறுதிப்படுத்தி உள்ளனர். இப்படி பனிப்பாறைகள் உடைவது புதிதல்ல. இதற்கு முன்னரும் இதுபோன்ற பனிப்பாறை பிளவுகள் நிகழ்ந்திருக்கின்றன. இருப்பினும் பூமியில் தற்போது உள்ள பனிப்பாறைகளிலேயே இது தான் மிகப்பெரியது என்று கூறப்படுகிறது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரின் பரப்பளவு 1,213 சதுர கி.மீ ஆகும். இதன்படி ஏ-76 பனிப்பாறையானது பரப்பளவில் அமெரிக்காவின் நியூயார்க் நகரை விட 4 மடங்கு பெரியது. இந்திய தலைநகர் டெல்லியின் பரப்பளவு 1,484 சதுர கிமீ ஆகும். அதன்படி ஏ-76 பனிப்பாறையானது பரப்பளவில் டெல்லியை விட 3 மடங்கு பெரியது ஆகும். மும்பை நகரை விட 7 மடங்கு பெரியது.

இந்த பனிப்பாறை ஏற்கனவே வெடெல் கடலில் மிதக்கத் துவங்கி இருந்ததாகவும், இதன் காரணமாக கடல் நீர்மட்டம் உடனே உயர்வதற்கு வாய்ப்புகள் குறைவு என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் எதிர்காலத்தில் கடல் நீர்மட்டம் உயர வாய்ப்பிருக்கிறதாம். மேலும் இதற்கு முன்பாக உடைந்த பனிப்பாறைகளும் கடலில் ஆங்காங்கு மிதந்தபடியே கரைந்து கொண்டிருக்கின்றன. அதன் அச்சுறுத்தலும், கடல் நீர் மட்டத்தை உயர்த்தும் அபாயத்தை உருவாக்கியிருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் உடைந்து, பிரிந்த இந்த பனிப்பாறைகள் பூமியில் உள்ள கடல்களில் ஆங்காங்கே மிதந்து கரைந்து கொண்டிருக்கின்றன. உலக வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் சீர்கேடு போன்றவை அண்டார்டிகா பனிப்பிரதேசத்தையும், அங்கிருந்து பிரிந்து வந்த பனிப்பாறைகளையும் வேகமாக கரைத்துக் கொண்டிருக்கின்றன.

ஏற்கனவே உடைந்த பனிப்பாறை விவரங்கள்:

1. மே 14, 2021:
ஏ-76 என பெயரிடப்பட்டிருக்கும் இந்த பிரம்மாண்ட பனிப்பாறை, சமீபத்தில்தான் பிரிந்தது. இப்போது டெல் கடலில் மிதக்கிறது. இன்னும் சில காலத்தில் இது 2 அல்லது 3 துண்டுகளாக பிரிந்து சென்றுவிடும்.

2. பிப்ரவரி 2021:
புரூண்ட் பனிப்பாறை அல்லது ஏ-74 என அழைக்கிறார்கள். இது 1,270 கி.மீ பரப்பளவு கொண்டது.

3. 2019:
திவெயிட்டீஸ் கிளாசியர் எனப்படும் பனிப்பாறை 1,92,000 கி.மீ. பரப்பளவு கொண்டது. இது உருகினால், உலகளவில் கடல்மட்டம் 3 மீட்டர்கள் உயரும்.

4. 2017,
லார்சன் சி. இது 5 ஆயிரம் கி.மீ. நீளமானது. இது துண்டு துண்டாக உடைந்து கொண்டிருக்கிறது.

5. 2013,
பைன் தீவு பனிப்பாறை. 700 கி.மீ. நீளமானது. அபாயம் குறைந்தது.

6. 1986,
ரூன் பில்ஷர் பனிப்பிளவு. 10,700 கி.மீ. நீளமானது. இது கரைந்தாலும் ஆபத்துதான். கடல் நீர்மட்டம் 2 மீட்டர்கள் வரை உயரக்கூடும். இதிலிருந்துதான் ஏ-76 பனிப்பாறை உடைந்திருக்கிறது.

Next Story