பிளஸ்-2 படிப்பிற்கு பிறகு... அரசு நுழைவு தேர்வுகளும், வழிகாட்டுதலும்..!


பிளஸ்-2 படிப்பிற்கு பிறகு... அரசு நுழைவு தேர்வுகளும், வழிகாட்டுதலும்..!
x
தினத்தந்தி 19 Jun 2021 3:49 PM GMT (Updated: 19 Jun 2021 3:49 PM GMT)

‘‘பிளஸ்-2 தேர்விற்கு பிறகு என்ன படிக்கலாம்..? என்று தீவிரமாக யோசிக்கும் மாணவ-மாணவிகள், கல்வியை எங்கு பயில்வது என்பதில் கவனம் செலுத்துவதே இல்லை.

தனியார் கல்லூரிகள் பற்றி நிறைய விசாரிக்கும் மாணவர்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பது பற்றி துளியும் யோசிப்பதில்லை. குறிப்பாக மத்திய அரசு நடத்தும் நிறைய நுழைவு தேர்வுகளில் தமிழக மாணவ-மாணவிகள் அதிகம் பங்கேற்பதே இல்லை’’ என்று ஆரம்ப வரிகளிலேயே தனி கவனம் பெறுகிறார், ஸ்ரீராம்.

தஞ்சாவூரை சேர்ந்தவரான இவர், அரசு பள்ளி மாணவர்களுக்கு, பிளஸ்-2 படிப்பிற்கு பிறகான கல்வி வழிகாட்டுதலை பல வருடங்களாக வழங்கி வருகிறார். இவரது கல்வி சேவைக்கு தஞ்சை மாவட்ட கலெக்டரிடமிருந்து பாராட்டுகளும் கிடைத்திருக்கின்றன. அவரிடம் விரிவாக பேசுவோம்.

பிளஸ்-2 படிப்பிற்கு பிறகு என்னென்ன அரசு நுழைவு தேர்வுகளை எழுத முடியும்?

மருத்துவ படிப்பிற்கு ‘நீட்’ தேர்வு, என்ஜினீயரிங் படிப்புகளுக்கு ‘ஜே.இ.இ.’ தேர்வு, விவசாய சம்பந்தமான படிப்புகளுக்கு ‘ஐ.சி.ஏ.ஆர்.’ தேர்வு, கலை மற்றும் அறிவியலுக்கு ‘சி.யூ.செட்’ தேர்வு, வணிகவியல் படிப்பிற்கு ‘சி.ஏ.பவுண்டேஷன்’ தேர்வு, சட்டம் பயில ‘கிளாட்’ தேர்வு, ஆர்கிடெக்‌ஷர் படிக்க ‘நாட்டா’ மற்றும் ‘ஜே.இ.இ.மெயின்’ தேர்வு, பேஷன் டெக்னாலஜி படிக்க ‘நிப்ட்’ தேர்வு, ஓட்டல் மேனேஜ்மெண்ட் சார்ந்த படிப்புகளுக்கு ‘என்.சி.எச்.எம்.சி.டி.’ தேர்வு... இப்படி ஒவ்வொரு படிப்பிற்கும், மத்திய அரசின் சார்பில் வருடந்தோறும் நுழைவு தேர்வுகள் நடத்தப்பட்டு, மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. ஆனால் இதுபற்றிய விழிப்புணர்வு தமிழக மாணவர்களிடம் மிக குறைவாகவே இருப்பதால், மிக குறைந்த மாணவர்களே இந்த தேர்வுகளில் பங்கெடுக்கிறார்கள். வாய்ப்பு பெறுகிறார்கள். இந்தியாவின் நம்பர்-1 என்ஜினீயரிங் கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி.மெட்ராஸ் சென்னையில்தான் இருக்கிறது. இருப்பினும் இதில் தமிழக மாணவர்கள் மிக குறைவாகவே கல்வி பயில்கிறார்கள்.

இந்த தேர்வுகளுக்கு பிரத்யேகமாக படித்து தயாராக வேண்டுமா?

இல்லை. பிளஸ்-1, பிளஸ்-2 பாடத்திட்டத்தின் அடிப்படையில்தான், எல்லா தேர்வுகளும் நடத்தப்படும். துறை சார்ந்த படிப்புகளுக்கு ஏற்ப ஓரிரு பாடத்திட்டங்கள் மட்டுமே மாறுபடும். இயற்பியல், வேதியியல் பாடத்திட்டம் பொதுவானது. நீட் தேர்விற்கு இதனோடு விலங்கியல் படிக்கவேண்டும், ஜே.இ.இ.தேர்விற்கு கணிதத்தை சேர்த்துக் கொள்ளவேண்டும். இப்படி ஒவ்வொரு படிப்பிற்கும் ஒருசில மாறுதல்கள் இருக்குமே தவிர, மற்றபடி எல்லாமே, பிளஸ்-1, பிளஸ்-2 பாடத்திட்டங்கள்தான்.

இந்த தேர்வுகளில் வெற்றிபெற கூடுதல் திறமைகள் தேவைப்படுமா?

ஆர்கிடெக்‌ஷர், பேஷன் டெக்னாலஜி படிப்புகளில் சேர கற்பனை திறனும், ஓவிய திறனும் கூடுதலாக தேவைப்படும். சட்டம் தொடர்பான தேர்வுகளில், வழக்குகளை கையாளும் திறனை சோதிக்க ஏதுவான கேள்விகள் இடம்பெறும்.

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களும், நுழைவு தேர்வுகளும் ஏன் முக்கியத்துவம் பெறுகின்றன?

தனியார் கல்லூரிகள் சிறப்பான கல்வி வழங்கினாலும், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி, என்.ஐ.டி, எய்ம்ஸ், ஜிப்மர், நிப்ட் போன்றவைதான், இந்திய கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில் முக்கிய இடங்களை பிடிக்கின்றன. குறைந்த கல்வி கட்டணம், உலகத்தர பேராசிரியர்கள் மற்றும் கற்பித்தலுக்காகவே இவை தனி கவனம் பெறுகின்றன. இங்கு சேர்ந்து படிப்பதினால், மத்திய அரசின் நிறுவனங்களின் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றும் வாய்ப்பும் கிடைக்கும்.

தேசிய அளவிலான தேர்வு என்பதால், போட்டி அதிகமாக இருக்குமா?

நிச்சயமாக, ‘சீட்' பெற எல்லா மாநிலங்களில் இருந்தும் 70 முதல் 80 சதவிகிதம் வரையிலான மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். ஆனால் தமிழகத்தில் மிக சொற்ப எண்ணிக்கையிலேயே மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். கல்வி நிறுனங்கள் அமைந்திருக்கும் மாநிலங்களில், அந்தந்த மாநில மாணவர்களுக்கு சிறப்பு இடஒதுக்கீடு, பட்டியலின மாணவர்களுக்கு மதிப்பெண் தளர்வு போன்றவை வழங்கப்பட்டும், தமிழக மாணவர்கள் வாய்ப்புகளை முறையாக பயன்படுத்திக் கொள்வதில்லை. அதனால்தான், ஐ.ஐ.டி மெட்ராஸ், திருச்சி என்.ஐ.டி மற்றும் மத்திய சட்டக்கல்லூரி, திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் போன்றவற்றில் வெளிமாநில மாணவர்களை அதிகமாக பார்க்க முடிகிறது.

தேர்வுகளுக்கு எப்படி தயாராவது?

மாதிரி வினா-விடை புத்தகத்தை படிப்பதைவிட, பாடப்புத்தகங்களை முழுமையாக அலசி ஆராய்ந்து படியுங்கள். பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பாடத்திட்டத்தை தாண்டி வேறு எதுவும் கேள்வியாக கேட்கப்படுவதில்லை என்பதால், பாடத்திட்டத்தை புரிந்து படிக்க பழகுங்கள். அப்போதுதான் குழப்பமான கேள்விகளுக்கும், சரியான விடையளிக்கமுடியும். கணக்குகளை அதிகமாக போட்டுப்பார்க்க வேண்டும்.

இதுபோன்ற நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்வதினால் உண்டாகும் நன்மைகள் என்ன?

போட்டித்தேர்வுக்கான பாடத்திட்டமும், இந்த நுழைவுத்தேர்விற் கான பாடத்திட்டமும் ஒன்றுதான். இதுபோன்ற தேர்வுகளை எதிர்கொள்வதினால், எதிர்காலத்தில் அரசு வேலைவாய்ப்பு தேர்வுகளை மிக சுலபமாக எதிர்கொள்ள முடியும்.

Next Story