தாடியும்.. கொரோனாவும்..


தாடியும்.. கொரோனாவும்..
x
தினத்தந்தி 21 Jun 2021 5:23 PM GMT (Updated: 21 Jun 2021 5:23 PM GMT)

ஊரடங்கு காலத்தில் சலூன்கள் சில மாதங்கள் அடைக்கப்பட்டிருந்ததால் நிறைய பேர் தாடி வளர்க்க தொடங்கிவிட்டார்கள். வளர்த்த தாடியை எடுப்பதற்கு மனமில்லாமல் அதனையே பேஷனாக பின்பற்றவும் செய்கிறார்கள்.

ஆண்களுக்கு தாடி அழகு தரும் என்றாலும் அதனை முறையாக பராமரிக்காவிட்டால் முகம் சுகாதாரம் அற்றதாகி விடும்.தற்போதைய சூழ்நிலையில் தாடி வைத்திருப்பது ஏற்புடையதல்ல. எவ்வளவு நீளமாக தாடி வளர்க்கிறீர்களோ அந்த அளவுக்கு அழுக்குகள், கிருமிகள் தாடியில் சேர்ந்திருக்கும். முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருப்பதால் தாடி விஷயத்தில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டியது அவசியமானது. ஏனெனில், ‘அடர்த்தியான தாடி, மீசை வைத்திருந்தால் அவை முக கவசம் அணிவதற்கு இடையூறாக மாறக்கூடும். அது கொரோனா வைரஸ் தொற்று பரவ காரணமாகிவிடும்.

‘தாடி மற்றும் மீசையின் வெவ்வேறு தோற்ற பாணிகள் வைரஸை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உள்வாங்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்’ என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். பாதுகாப்புக்காக அணியும் முக கவசத்தை கொண்டு வாய், மூக்கு போன்ற பகுதிகளை மறைப்பதற்கு தாடி சவால் நிறைந்ததாக இருப்பதாக குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் நடத்திய ஆய்விலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

“முகத்தில் தாடி எதுவும் இல்லாமல் இருந்தாலோ அல்லது குறைவாக முடி இருந்தாலோ மூக்கு, வாய் போன்ற பகுதிகளை முக கவசம் கொண்டு பாதுகாப்பாக மூடிவிடலாம். ஆனால் தாடி அதிகமாக இருந்தால் முக கவசத்திற்கு இடைவெளியை உண்டாக்கி விடும். அதன் வழியாக வைரஸ் எளிதில் நுழைந்து தொற்று ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனால் தாடியை சேவிங் செய்துவிடுவதுதான் பாதுகாப்பானது. இல்லாவிட்டால் கண்டிப்பாக டிரிம் செய்ய வேண்டும்” என்று அமெரிக் காவின் நோய் கட்டுப்பாடு மற் றும் தடுப்பு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Next Story