6 மாதங்களில் இல்லாத முன்னேற்றம் அன்னிய நேரடி முதலீடு 654 கோடி டாலராக உயர்வு பாரத ரிசர்வ் வங்கி தகவல்


6 மாதங்களில் இல்லாத முன்னேற்றம் அன்னிய நேரடி முதலீடு 654 கோடி டாலராக உயர்வு பாரத ரிசர்வ் வங்கி தகவல்
x
தினத்தந்தி 10 Jan 2019 11:17 AM GMT (Updated: 10 Jan 2019 11:17 AM GMT)

சென்ற ஆண்டில் பொதுவாக சேவைகள், கம்ப்யூட்டர் சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர், கட்டுமானம், வர்த்தகம், மோட்டார் வாகனம், மருந்து, ரசாயனம் மற்றும் மின்சாரம் ஆகிய துறைகள் அதிக முதலீட்டை ஈர்த்துள்ளதாக தெரிகிறது...

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

மும்பை

6 மாதங்களில் இல்லாத முன்னேற்றமாக, 2018 அக்டோபரில் அன்னிய நேரடி முதலீடு 654 கோடி டாலராக உயர்ந்துள்ளது என பாரத ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மொரீஷியஸ்

இந்தியாவில் மொரீஷியஸ், சிங்கப்பூர், ஜப்பான், இங்கிலாந்து, நெதர்லாந்து, அமெரிக்கா, ஜெர்மனி, சைப்ரஸ், பிரான்ஸ், ஐக்கிய அரபு குடியரசு நாடுகள் அதிக முதலீடு செய்து வருகின்றன. 2019 மார்ச் மாதம் முடிய இந்தியாவின் முக்கிய அன்னிய நேரடி முதலீட்டு ஆதாரங்களுள் முதலிடத்தில் மொரீஷியஸ் நீடிக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அன்னிய நேரடி முதலீட்டால் வெளிநாட்டு தொழில்நுட்பங்களை இந்திய நிறுவனங்கள் பகிர்ந்து கொள்ள முடிகிறது. மேலும் வேலைவாய்ப்பு அதிகரித்து, பொருளாதார முன்னேற்றம் ஏற்படுகிறது. எனவே அதிக அளவில் அன்னிய முதலீட்டை ஈர்க்கும் நோக்கத்துடன் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ந் தேதி ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை அறிமுகம் செய்தார். அதனால் அன்னிய முதலீடு அதிகரிக்கத் தொடங்கியது.

கடந்த நிதி ஆண்டுகளில்...

2014-15-ஆம் நிதி ஆண்டில் அன்னிய முதலீடு 27 சதவீதம் உயர்ந்து 4,515 கோடி டாலராக அதிகரித்தது. 2015-16-ல் அது 23 சதவீதம் அதிகரித்து 5,556 கோடி டாலராக உயர்ந்தது. 2016-17-ஆம் நிதி ஆண்டில் 8.38 சதவீத வளர்ச்சி (6,022 கோடி டாலர்) ஏற்பட்டு இருந்தது. அது ஒரு புதிய சாதனை அளவாக இருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது, சென்ற நிதி ஆண்டில் (2017-18) அன்னிய முதலீடு சுமார் 3 சதவீதம் அதிகரித்து 6,196 கோடி டாலராக உயர்ந்தது.

கடந்த 2018-ஆம் ஆண்டில், ஏப்ரல் மாதத்தில் நம் நாட்டிற்கு அன்னிய நேரடி முதலீடாக 670 கோடி டாலர் வந்தது. அதற்குப் பின் அக்டோபர் மாதத்தில்தான் அதிக முதலீடு (654 கோடி டாலர்) வந்திருக்கிறது. சென்ற ஆண்டில் பொதுவாக சேவைகள், கம்ப்யூட்டர் சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர், கட்டுமானம், வர்த்தகம், மோட்டார் வாகனம், மருந்து, ரசாயனம் மற்றும் மின்சாரம் ஆகிய துறைகள் அதிக முதலீட்டை ஈர்த்துள்ளதாக தெரிகிறது.

அன்னிய பங்கு முதலீடு

இந்திய பங்கு மற்றும் கடன் சந்தைகளில் முதலீடு செய்ய அன்னிய நிதி நிறுவனங்களுக்கு 1992 நவம்பர் மாதத்தில் மத்திய அரசு அனுமதி அளித்தது. அப்போது முதல் ஏறக்குறைய 25 வருடங்களாக அந்த நிறுவனங்கள் பங்கு மற்றும் கடன் சந்தைகளில் முதலீடு செய்து வருகின்றன.

அன்னிய நிதி நிறுவனங்களின் பங்கு முதலீட்டுடன் ஒப்பிடும்போது அன்னிய நேரடி முதலீடு ஆக்கப்பூர்வமானது என்று கருதப்படுகிறது. வெளிநாட்டு பங்கு முதலீட்டாளர்கள் லாப நோக்கத்தில் மட்டுமே செயல்படுகின்றனர். எனவே அவர்களுடைய முதலீடு குறுகிய கால அடிப்படை கொண்டது. ஆனால் அன்னிய நேரடி முதலீடு நீண்ட கால அடிப்படையிலானது.

விலகிய முதலீடு

கடந்த 2018-ஆம் ஆண்டில் அன்னிய முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து ரூ.33,553 கோடி முதலீட்டை விலக்கி உள்ளனர். மேலும் கடன் சந்தையில் இருந்து ரூ.49,593 கோடி வெளியேறி இருக்கிறது. ஆக, இந்திய மூலதன சந்தையில் ஒட்டுமொத்த அளவில் ரூ.83,146 கோடி அன்னிய முதலீடு விலகி உள்ளது.

Next Story