பரஸ்பர நிதி துறையில், நவம்பர் மாதத்தில் முதலீட்டாளர் கணக்குகளின் எண்ணிக்கை 2.6 லட்சம் உயர்வு


பரஸ்பர நிதி துறையில், நவம்பர் மாதத்தில் முதலீட்டாளர் கணக்குகளின் எண்ணிக்கை 2.6 லட்சம் உயர்வு
x
தினத்தந்தி 12 Dec 2019 10:24 AM GMT (Updated: 12 Dec 2019 10:24 AM GMT)

பரஸ்பர நிதி துறையில், நவம்பர் மாதத்தில் முதலீட்டாளர் கணக்குகளின் எண்ணிக்கை 2.6 லட்சம் உயர்ந்து இருக் கிறது.

நிர்வகிக்கும் சொத்து

பரஸ்பர நிதி நிறுவனங்கள் பல்வேறு திட்டங்கள் வாயிலாக முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டுகின்றன. இந்த நிதி, நிறுவனப் பங்குகள், நிதிச்சந்தைகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கடன்பத்திரங்கள் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இதுவே பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து என்று அழைக்கப்படுகிறது.

நவம்பர் மாதத்தில் பரஸ்பர நிதி நிறுவனங்களின் சொத்து மதிப்பு ரூ.27.05 லட்சம் கோடி என்ற புதிய சாதனை அளவை தொட்டு இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது இது 2.7 சதவீத வளர்ச்சியாகும்.

இந்நிலையில், கடந்த நவம்பர் மாதத்தில் பரஸ்பர நிதி துறையில் 2.6 லட்சம் புதிய கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனையடுத்து முதலீட்டாளர் கணக்குகளின் மொத்த எண்ணிக்கை 8.65 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்தியாவின் மொத்த மக்கள்தொகை சுமார் 130 கோடியாக உள்ளது. எனினும் இதில் 3 சதவீதத்திற்கும் குறைவான மக்கள்தான் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்துள்ளனர். அதோடு நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் பரஸ்பர நிதி துறை நிர்வகிக்கும் சொத்து மதிப்பு 11 சதவீத அளவிற்கே இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. எனினும் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீட்டாளர் கணக்குகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

நம் நாட்டில் தற்போது 44 பரஸ்பர நிதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்யும் நோக்கத்துடன் செபி அமைப்பின் அனுமதி வேண்டி விண்ணப்பித்து வருகின்றன. எனவே இனி வரும் மாதங்களில் முதலீட்டாளர் கணக்குகள் பன்மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய முதலீட்டாளர்கள்

பரஸ்பர நிதி நிறுவனங்கள் தேர்ச்சியும், அனுபவமும் வாய்ந்த நிபுணர்களின் துணையுடன் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்கின்றன. புதிய பங்கு வெளியீடுகளிலும் பங்கேற்கின்றன. புதிய முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் நேரடியாக இறங்குவதைக் காட்டிலும் பரஸ்பர நிதி நிறுவனங்கள் மூலம் முதலீடு செய்வது ஓரளவு பாதுகாப்பானது என்று கூறப்படுகிறது.

Next Story