கொரோனா ஊரடங்கால் மூணாறில் சுற்றுலா தொழில், தேயிலை விவசாயம் கடும் பாதிப்பு


கொரோனா ஊரடங்கால் மூணாறில் சுற்றுலா தொழில், தேயிலை விவசாயம் கடும் பாதிப்பு
x
தினத்தந்தி 3 July 2021 10:38 PM GMT (Updated: 3 July 2021 10:38 PM GMT)

கொரோனா ஊரடங்கால் மூணாறில் சுற்றுலா தொழில், தேயிலை விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வேலை இழந்து தவிப்பு
இயற்கை எழில் கொஞ்சும் மூணாறு, சிறந்த சுற்றுலா தலம் ஆகும். இங்கு தினமும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என ஏராளமானோர் வந்து சென்றனர். ஆனால் கொரோனா பரவல் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக மூணாறில் சுற்றுலா தொழில் முடங்கி விட்டது.கடந்த 2018-ம் ஆண்டு மூணாறில், இயற்கை பேரழிவு ஏற்பட்டு சுற்றுலா தொழிலில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக மூணாறு பகுதியில் சுற்றுலா தொழிலை நம்பி உள்ள ஒரு லட்சம் பேர் தற்போது வேலை இழந்து தவிக்கின்றனர்.

தங்கும் விடுதிகள் மூடல்
இதேபோல் மூணாறில் 500-க் கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் உள்ளன. கடந்த 2 ஆண்டுகளாக சுற்றுலா பயணிகள் வருகை முற்றிலும் குறைந்து விட்டது. இதனால் மூணாறில் கடந்த ஒரு வருடமாக தங்கும் விடுதிகள் மூடப்பட்டுள்ளன.எனவே தங்கும் விடுதிகளை வாடகைக்கு எடுத்து நடத்தியவர்கள் திரும்பவும் உரிமையாளர்களிடம் ஒப்படைத்து விட்டனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து, மீண்டும் சுற்றுலா தொழில் மேம்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் மீண்டும் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் சுற்றுலா தொழில் அதலபாதாளத்துக்கு சென்று விட்டது. இதன் எதிரொலியாக கடந்த 2 மாதங்களில் தங்கும் விடுதிகள், ஏலக்காய் கடைகள், ஓட்டல்களில் பணிபுரிந்த 
ஏராளமானோர் வேறு தொழிலுக்கு சென்று விட்டனர்.

தேயிலை தோட்ட தொழிலாளர்கள்
மூணாறில் செயல்பட்ட பிரபல சைவ ஓட்டல் நஷ்டத்தால் மூடப்பட்டது. சில தங்கும் விடுதிகள் சிறு, சிறு கடைகளாக பிரிக்கப்பட்டு வாடகைக்கு விடப்படுகின்றன. மேலும் சில தங்கும் விடுதிகள், குடியிருப்புகளாக மாற்றப்பட்டுள்ளன.நாளுக்குநாள் நலிவடைந்து கொண்டிருக்கும் சுற்றுலா தொழிலை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது, அந்த தொழிலை நம்பியுள்ளவர்களின் குற்றச்சாட்டாக எதிரொலிக்கிறது.கொரோனாவை காரணம் காட்டி சுற்றுலா தொழில் முடக்கப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. தேயிலை எஸ்டேட் 
தொழிலாளர்கள், மூணாறு பகுதிக்கு வந்தால் கொரோனா பாதிப்புஅதிகரிக்கும் என்று பொய் பிரசாரத்தில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.அதேநேரத்தில் கொரோனா விதிகளை கடைபிடித்து 12 ஆயிரம் தொழிலாளர்கள் தேயிலை தோட்டங்களில் கடந்த 2 மாதங்களாக வேலை செய்து வருகின்றனர். ஆனால் இவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

நலிவடைந்த தொழிலை மீட்க...
மூணாறில், நலிவடைந்த சுற்றுலாத்தொழிலை மீட்டெடுக்க பல ஆண்டுகள் ஆகலாம் என்று கருதப்படுகிறது. எப்போதும் சுறுசுறுப்புடன் காணப்படும் மூணாறு நகரம், கடந்த 2 ஆண்டுகளாக வெறிச்சோடி கிடப்பது வேதனை அளிப்பதாக உள்ளது. மேலும் சுற்றுலா தொழில் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.கொரோனா காரணமாக தேயிலை ஏற்றுமதி 
குறைந்து விட்டது. இதனால் மூணாறு பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில், தேயிலை விவசாயம் பாதிக்கப்பட்டு தோட்ட நிர்வாகங்கள் நஷ்டத்தில் மூழ்கி உள்ளன.மேலும் தேயிலை தோட்ட நிர்வாகத்தின் தொழிலாளர்கள் பங்குத்தொகை பாதியாக சரிந்து விட்டது. ஒரு தொழிலாளிக்கு வருடந்தோறும் ரூ.400 பங்கு தொகை கிடைக்கும். தற்போது பங்கு தொகை ரூ.200 ஆக குறைந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story