கடன் பாக்கிக்கும்-மின்தடைக்கும் சம்பந்தம் இல்லை அமைச்சர் தங்கமணி விளக்கம்


கடன் பாக்கிக்கும்-மின்தடைக்கும் சம்பந்தம் இல்லை அமைச்சர் தங்கமணி விளக்கம்
x
தினத்தந்தி 27 April 2017 5:47 AM GMT (Updated: 27 April 2017 5:46 AM GMT)

வடசென்னையில், காலை 4 மணி முதல் மின் விநியோகம் சீராக உள்ளதாகவும், மத்திய அரசுக்கு செலுத்தவேண்டிய தொகைக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

சென்னை,

நேற்றிரவு 8 மணி முதல், சென்னையின் முக்கியப் பகுதிகளில் திடீர் மின்வெட்டு ஏற்பட்டது. நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், தேனாம்பேட்டை, ஆயிரம் விளக்கு, எழும்பூர், ராயப்பேட்டை, அண்ணா சாலை, ஆழ்வார்பேட்டை, போட்ஸ் கிளப், புரசைவாக்கம், பெரம்பூர், தி.நகர், திருவல்லிக்கேணி, வில்லிவாக்கம் உள்பட பெரும்பாலான பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. நள்ளிரவில் நீண்ட நேரமாக மின்சாரம் தடைபட்டு இருந்ததால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

திருவள்ளூர் மாவட்டம் வல்லூரில் உள்ள அனல் மின் நிலையத்தில் 500 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 3 அலகுகள் மூலம் 1500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு மின்சார வாரியம் பாக்கியை செலுத்தாதால் மின் வினியோகத்தை வல்லூர் அனல் மின் நிலையம்  உற்பத்தியை நேற்று அதிரடியாக நிறுத்தி விட்டது. இதனால் தான் சென்னையின் பல பகுதிகள் இருளில் மூழ்கியதாக தகவல்கள் வெளியானது.

இது குறித்து மின்துறை அமைச்சர் தங்கமணியிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

வல்லூர் அனல்மின் நிலையத்துக்கு செலுத்த வேண்டிய கடன் பாக்கிக்கும் மின் தடைக்கும் சம்பந்தம் இல்லை. தமிழ்நாட்டில் நுகர்வோர் களின் தேவைக்கு அதிகமாகவே மின்உற்பத்தி உள்ளது. மணலியில் இருந்து வரும் மின்கேபிள் நேற்றிரவு துண்டிக்கப்பட்டிருந்த காரணத்தால் தான் வடசென்னையில் மினதடை ஏற்பட்டது.

உடனே நான் இரவில் வடசென்னை மின் நிலையத்துக்கு அதிகாரிகளுடன் சென்றேன். விடிய விடிய அங்கேயே இருந்து பழுதுகளை சரி செய்யும் வரை முகாமிட்டிருந்தேன்.
முதலில் அரசு தலைமை மருத்துவமனை, ஸ்டான்லி ஆஸ்பத்திரி உள்ளிட்ட ஆஸ்பத்திரிகளுக்கு மின் வினியோகம் சிலமணி நேரத்தில் விரைந்து கொடுக்கப்பட்டது.

அதன் பிறகு பொது மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு படிப்படியாக இரவு 3 மணியில் இருந்து மின்வினி யோகம் கொடுக்கப்பட்டது. வல்லூர் அனல் மின் நிலையத்தில் உற்பத்தி நிறுத்தப்பட்டாலும், தமிழ் நாட்டில் நுகர்வோர்களின் தேவைக்கு அதிகமாகவே மின் உற்பத்தி இருக்கிறது. ஆங்காங்கே ஏற்படும் கேபிள் பழுது, டிரான்ஸ்பார்மர் ரிப்பேர் காரணமாகவே மின்தடை ஏற்படுகிறது. அதையும் அவ்வப்போது ஊழியர்கள் சரி செய்து மின் வினியோகம் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இவ்வாறு தங்கமணி கூறினார்.


Next Story