‘கற்கும் பாரதம்’ திட்டத்தின் கீழ் படிப்போருக்கு ஆகஸ்டு 20-ந்தேதி எழுத்துத்தேர்வு


‘கற்கும் பாரதம்’ திட்டத்தின் கீழ் படிப்போருக்கு ஆகஸ்டு 20-ந்தேதி எழுத்துத்தேர்வு
x
தினத்தந்தி 14 July 2017 9:30 PM GMT (Updated: 14 July 2017 7:12 PM GMT)

தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் கற்கும் பாரதத்தின் கீழ் படிக்கும் 76 ஆயிரத்து 487 பேர்களுக்கு ஆகஸ்டு 20-ந்தேதி எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது.

சென்னை,

தமிழகத்தில் எழுத்தறிவு பெண்களுக்கு 50 சதவீதத்திற்கு குறைவாக உள்ள மாவட்டங்களில் ‘கற்கும் பாரதம் திட்டம்’ அமல்படுத்தப்பட்டு வருகிறது. அரியலூர், தர்மபுரி, ஈரோடு, சேலம், விழுப்புரம், திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, பெரம்பலூர் ஆகிய 9 மாவட்டங்களில் எழுத படிக்க தெரியாத மக்களுக்கு கற்கும் பாரதம் என்ற திட்டத்தை தமிழக அரசு, மத்திய அரசின் திட்டமாக செயல்படுத்துகிறது.

இந்த திட்டத்தின் கீழ் அந்த 9 மாவட்டங்களில் ஏராளமானவர்களுக்கு எழுத்தறிவு கற்பிக்கப்படுகிறது. அவர்கள் ஓய்வு நேரத்தில் இருக்கும் போது அந்தந்த ஊரில் உள்ள படித்தவர்களை கொண்டு அவர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது. பாடம் நடத்த குறிப்பிட்ட ஒரு இடம் தேர்வு செய்யப்படவில்லை. எழுத்துக்கூட்டி படிக்க விரும்புபவர்கள் எந்த இடத்திற்கு வரச்சொல்கிறார்களோ அந்த இடத்திற்கு பாடம் கற்பிப்பவர்கள் சென்று வருகிறார்கள்.

அவ்வாறு படிப்பவர்களில் 76 ஆயிரத்து 487 பேர் வருகிற ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி தேர்வு எழுதுகிறார்கள். ஏற்கனவே கடந்த வருடம் 3-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 5-ம் வகுப்புக்கு சென்று உள்ளனர். அவர்களுக்கு தமிழ், கணினியியல், சூழ்நிலை இயல், பேரிடர் மேலாண்மை, தேர்தல் விழிப்புணர்வு, நிதிநிர்வாகம் உள்ளிட்ட பல தலைப்புகளில் பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு விலை இன்றி கொடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த தகவலை பள்ளிச்சாரா கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார். 

Next Story