அ.தி.மு.க.வின் வெற்றியை தடுக்க முடியாது அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி


அ.தி.மு.க.வின் வெற்றியை தடுக்க முடியாது அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 15 Jan 2018 11:00 PM GMT (Updated: 15 Jan 2018 8:59 PM GMT)

நடிகர் ரஜினிகாந்துடன் பா.ஜ.க. கூட்டணி அமைத்தாலும் தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றியைத் தடுக்க முடியாது என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

சென்னை, 

நடிகர் ரஜினிகாந்தும், பா.ஜ.க.வும் சேர்ந்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும் என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சென்னையில் திருவள்ளுவர் தினத்தையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகே வைக்கப்பட்ட உருவப்படத்திற்கு தமிழக அரசு சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அமைச்சர்கள் பலர் இதில் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அ.தி.மு.க. வெற்றி பெறும்

பின்னர் அங்கிருந்த நிருபர்களுக்கு மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் அளித்த பேட்டி வருமாறு:-

நடிகர் ரஜினிகாந்துடன் பா.ஜ.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தால் ஆட்சி மாற்றம் வரும் என்று குருமூர்த்தி கூறுவது அவரது கருத்து. ஆட்சி மாற்றத்தை நடத்த அவர் தேவதூதர் இல்லை. பா.ஜ.க.வுடன் நடிகர் ரஜினிகாந்த் சேர்ந்தாலும் அ.தி.மு.க. வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.

தமிழக மக்களின் கருத்து என்றுமே ஜெயலலிதாவின் அரசு தொடர வேண்டும் என்பதுதான். ஜெயலலிதாவின் அரசுக்குத்தான் மக்கள் ஆதரவு கிடைக்கும். அதை நாங்கள் வருகின்ற உள்ளாட்சி தேர்தல், 2019-ம் ஆண்டில் நடக்கும் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றில் நிரூபிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் பாண்டியராஜன்

பின்னர் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், “திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. யுனெஸ்கோ அமைப்பின் மூலம் திருக்குறளை உலகப் பொதுமறை என்று சொல்கிறோம். ஆனால் அதை தொன்மை வாய்ந்த கலாசார புதையல் என்று அறிவிப்பதற்கு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் முயற்சி எடுத்து வருகிறோம்” என்று குறிப்பிட்டார். 

Next Story