உணவு பொருட்களின் தரத்தை பரிசோதிக்க நடமாடும் ஆய்வகம் அமைச்சர் தொடங்கி வைத்தார்


உணவு பொருட்களின் தரத்தை பரிசோதிக்க நடமாடும் ஆய்வகம் அமைச்சர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 2 Feb 2018 8:33 PM GMT (Updated: 2 Feb 2018 8:33 PM GMT)

உணவு பொருட்களின் தரத்தை பரிசோதிக்க நடமாடும் ஆய்வகத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார்.

சென்னை,

சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் நேற்று உணவு பாதுகாப்புத்துறை சார்பில் நடமாடும் உணவு ஆய்வகம் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நடமாடும் உணவு ஆய்வகத்தை தொடங்கிவைத்தார். பள்ளிகளில் சத்தான உணவு வழங்குவது தொடர்பான விழிப்புணர்வு திட்ட குறுந்தகட்டை வெளியிட்டு, உணவு பாதுகாப்பு துறை அறிவுரைகள் அடங்கிய பலகையையும் அவர் திறந்துவைத்தார்.

விழாக்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் விடுதிகளில் தேவைக்கு அதிகமாக இருக்கும் உணவை வீணாக்காமல் எடுத்துச்செல்ல கோவையை சேர்ந்த ‘உணவை வீணாக்க வேண்டாம்’ (நோ புட் வேஸ்ட்) என்ற தொண்டு நிறுவனத்துக்கு 2 வாகனங்கள் வழங்கப்பட்டது. அதனை அமைச்சர் விஜயபாஸ்கர் ஒப்படைத்தார்.

நடமாடும் உணவு ஆய்வகத்தில் உணவின் தரத்தை ஆய்வு செய்வதற்கான கருவிகளுடன், நுகர்வோருக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு தேவையான வசதிகள் உள்ளன. இந்த வாகனத்தில் ஒரு உணவு பகுப்பாய்வாளர் இருப்பார்.

பாதுகாப்பான உணவு

உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம், உணவு வணிகர்களுக்கான அறிவுரைகள் அடங்கிய உணவு பாதுகாப்பு காட்சி பலகைகளை உருவாக்கியுள்ளது. இதனை உணவு வணிகர்கள், சில்லறை வியாபாரிகள், பழங்கள் மற்றும் காய்கறி வியாபாரிகள் உள்ளிட்டோர் தங்கள் வளாகத்தில் காட்சிக்கு வைக்க ஏதுவாக வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு பாதுகாப்பான, சத்தான உணவு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டம் விரைவில் சென்னை மாநகராட்சியின் 50 பள்ளிகளில் தொடங்கப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்புத்துறை கமிஷனர் பெ.அமுதா, தேசிய நலவாழ்வு குழும இயக்குனர் டாக்டர் தாரேஸ் அகமது, தமிழ்நாடு மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரிய தலைவர் ராஜாராமன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story