திராவகம் ஊற்றி தீ வைக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி சாவு கதறி அழுத 3 வயது மகள்


திராவகம் ஊற்றி தீ வைக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி சாவு கதறி அழுத 3 வயது மகள்
x
தினத்தந்தி 24 Feb 2018 10:00 PM GMT (Updated: 24 Feb 2018 7:20 PM GMT)

வானுவம்பேட்டை ரத்த பரிசோதனை மையத்தில் திராவகம் ஊற்றி தீ வைக்கப்பட்டதில் படுகாயம் அடைந்த பெண் ஊழியர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

ஆலந்தூர்,

வானுவம்பேட்டை ரத்த பரிசோதனை மையத்தில் திராவகம் ஊற்றி தீ வைக்கப்பட்டதில் படுகாயம் அடைந்த பெண் ஊழியர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உடலை பார்த்து 3 வயது மகள் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

சென்னையை அடுத்த புழுதிவாக்கம் சிவபிரகாசம் நகரைச் சேர்ந்தவர் ஆனந்த் (வயது 38), ‘கால் டாக்சி’ டிரைவர். இவருடைய மனைவி யமுனா (33) வானுவம்பேட்டையில் உள்ள தனியார் ரத்த பரிசோதனை மையத்தில் பரிசோதனையாளராக பணியாற்றி வந்தார்.

கடந்த 18-ந் தேதி மாலை ரத்த பரிசோதனைக்கான அறிக்கை தயாரிப்பதில் யமுனாவுக்கும், அந்த பரிசோதனை மையத்தின் உரிமையாளரான சென்னை அண்ணா நகரை சேர்ந்த ராஜா (40) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த ராஜா அங்கிருந்த திராவகத்தை (ஆசிட்) எடுத்து யமுனா மீது ஊற்றி தீவைத்தார்.

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மடிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த யமுனா, நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து மடிப்பாக்கம் போலீசார் கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

யமுனாவுக்கு 3 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். கணவர் ஆனந்தின் வருமானம் குடும்ப செலவுக்கு போதுமானதாக இல்லாததால் குடும்ப கஷ்டத்தை போக்கவே அவர் ரத்த பரிசோதனை மையத்தில் வேலை செய்து வந்தார். யமுனாவின் உடலை பார்த்து அவரது 3 வயது மகள் கதறி அழுத காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

மனைவியின் உடலை பார்த்து கண்ணீர்விட்ட ஆனந்த், ‘குடும்ப பாரத்தை குறைக்க வேலைக்கு சென்ற எனது மனைவி இப்போது எங்களைவிட்டு சென்றுவிட்டாள். எனது மகள் அம்மா மீது அதிக பாசம் வைத்திருந்தாள். இனி அவளை நான் எப்படி சமாதானம் செய்து வளர்க்கப்போகிறேனோ’ என்று கூறியபடி கதறி அழுதார்.

ஆனந்துக்கும், அவருடைய மகளுக்கும் உறவினர்கள் ஆறுதல் கூறினர்.

Next Story