காய்கறி வேனில் பிணம் ஏற்றி வந்த கருணை இல்லம் மீது நடவடிக்கை எடுக்க தடை ஐகோர்ட்டு உத்தரவு


காய்கறி வேனில் பிணம் ஏற்றி வந்த கருணை இல்லம் மீது நடவடிக்கை எடுக்க தடை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 8 March 2018 11:15 PM GMT (Updated: 8 March 2018 8:11 PM GMT)

செயின்ட் ஜோசப் ஆதரவற்றோர் கருணை இல்லம் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு இடைக்கால தடைவிதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #HighCourt

சென்னை 

செயின்ட் ஜோசப் ஆதரவற்றோர் கருணை இல்லம் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு இடைக்கால தடைவிதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

காஞ்சீபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே உள்ள பாலேஸ்வரம் கிராமத்தில் செயின்ட் ஜோசப் ஆதரவற்றோர் கருணை இல்லம் 2011-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்துக்கு சொந்தமான வேனில் காய்கறி மூட்டையுடன் இரும்புலியூர் இல்லத்தில் இறந்த விஜயகுமார் என்பவரது பிணம் எடுத்து வரப்பட்டது.

அதே வேனில் பிணத்துடன் இரும்புலியூர் இல்லத்தில் தங்கி இருந்த செல்வராஜ், அன்னம்மாள் ஆகியோரும் அழைத்து வரப்பட்டனர். இந்த தகவல் பொதுமக்கள் மத்தியில் பரவியதால், பெரும் பரபரப்பு உண்டானது.

பாலேஸ்வரத்தில் உள்ள கருணை இல்லத்தில் முதியோர்கள் மர்மமாக இறப்பதாகவும், அவர்களது உடல் பதப்படுத்தப்பட்டு எலும்புகள் விற்கப்படுவதாகவும் பொது மக்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து வருவாய்த்துறை, காவல்துறை உள்பட 6 துறை அதிகாரிகள் கருணை இல்லத்தில் விசாரணை நடத்தினர். அங்கிருந்த சுமார் 300 முதியவர்களை அரசு காப்பகங்களுக்கு, அதிகாரிகள் மாற்றினார்கள்.

இந்த நிலையில், பிப்ரவரி மாதம் 22-ந்தேதி, காஞ்சீபுரம் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர், இந்த கருணை இல்லத்துக்கு விளக்கம் கேட்டு ஒரு நோட்டீசு அனுப்பியுள்ளார்.

அதில், ‘பொது சுகாதாரத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையிலும், அரசு துறைகளில் இருந்து முறையான அனுமதி பெறாமலும், கருணை இல்லம் செயல்படுவதால், இந்த கருணை இல்லத்தை ஏன் மூட உத்தரவிடக்கூடாது? என்பதற்கு 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று கூறபட்டிருந்தது.

இந்த நோட்டீசுக்கு கருணை இல்லம் பதில் அளித்தது. பின்னர், இந்த நோட்டீசை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில், அந்த கருணை இல்லத்தின் நிர்வாக இயக்குனர் வி.தாமஸ் மனு தாக்கல் செய்துள்ளார்.

எங்கள் கருணை இல்லத்துக்கு சட்டவிதிகளை பின்பற்றாமல், அதிகாரிகள் நோட்டீசு அனுப்பியுள்ளனர். நாங்கள் முறையாக அனுமதி பெற்று கருணை இல்லம் நடத்தி வருகிறோம். எனவே, அந்த நோட்டீசை ரத்து செய்யவேண்டும். எங்கள் கருணை இல்லாம் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு தடைவிதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், மனுதாரரின் கருணை இல்லம் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மனுவுக்கு பதில் அளிக்க காஞ்சீபுரம் கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்டோர் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 21-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.

Next Story