அரக்கோணம் யார்டில் விரிவாக்க பணிகள்; ரயில் சேவையில் மாற்றம் - பயணிகள் அவதி


அரக்கோணம் யார்டில் விரிவாக்க பணிகள்;  ரயில் சேவையில் மாற்றம் - பயணிகள் அவதி
x
தினத்தந்தி 6 May 2018 3:57 AM GMT (Updated: 6 May 2018 3:57 AM GMT)

அரக்கோணம் யார்டில் விரிவாக்க பணிகள் நடைபெறுவதால் ரயில் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. #SouthernRailway

சென்னை,

அரக்கோணம் யார்டில் விரிவாக்க பணிகள் நடைபெறுவதால் ரயில் சேவையில் சில மாற்றங்களை தெற்கு ரயில்வே செய்துள்ளது. இந்த மாற்றத்தால் 5 மணி நேரம் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

அரக்கோணம் யார்டில் பொறியியல் பணிகள் நடப்பதால், சென்னையிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்ற ரயில்கள் 5 மணி நேரம் தாமதாக சென்றடைந்தது. இதனால் ரயில்களின் இயக்கங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு நேற்று மதியம்1.45 செல்ல வேண்டிய கோவை எக்ஸ்பிரஸ் மாலை 6.30 மணிக்கு கோவைக்கு சென்றது. காலை 6.15 மணிக்கு கோவை செல்ல வேண்டிய சேரன் எக்ஸ்பிரஸ் 10.30 மணிக்கும், மதியம் 2.15-க்கு கோவை செல்ல வேண்டிய சதாப்தி எக்ஸ்பிரஸ் இரவு 7 மணிக்கும் கோவை சென்றடைந்தது.

அதுபோல் சென்னையிலிருந்து இரவு 9.05 மணிக்கு புறப்பட்டு காலை 5 மணிக்கு கோவை செல்ல வேண்டிய நீலகிரி எக்ஸ்பிரஸ் 10 மணிக்கு சென்றடைந்தது. சென்னை சென்ட்ரலுக்கு வரவேண்டிய பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சி,விழுப்புரம் மார்க்கமாக திருப்பிவிடப்பட்டது. இதனால் காலை 4.15 மணிக்கு சென்ட்ரலுக்கு வரவேண்டிய பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் 1 மணிநேரம் தாமதமாக வந்தடைந்தது. இதனால் பயணிகள் கடுமையான சிரமத்துக்குள்ளாகினர். மேலும் விரிவாக்கப் பணிகள் காரணமாக எக்ஸ்பிரஸ் ரயில்கள், பயணிகள் ரயில்கள், மின்சார ரயில்கள் ஆகியவை ஞாயிற்றுக்கிழமையான இன்று முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 7 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படவுள்ளன என்று தெற்கு ரயில்வே மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாகர்கோவில் மங்களூர் ஏரநாடு எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறவிருப்பதால் வரும் 31ம் தேதி வரை நாகர்கோவில் மங்களூர் ஏரநாடு எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் காலை 2 மணிக்கு பதிலாக 3.30 மணிக்கு புறப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.


Next Story