மாணவர்களிடம் விண்ணப்ப கட்டணத்தை ரொக்கமாக ஏன் பெறக்கூடாது? அண்ணா பல்கலைக்கழகம் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு


மாணவர்களிடம் விண்ணப்ப கட்டணத்தை ரொக்கமாக ஏன் பெறக்கூடாது? அண்ணா பல்கலைக்கழகம் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 10 May 2018 10:45 PM GMT (Updated: 10 May 2018 8:50 PM GMT)

என்ஜினீயரிங் படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை விண்ணப்ப கட்டணத்தை ரொக்கமாக ஏன் பெறக்கூடாது? என்ற கேள்விக்கு பதில் அளிக்கும்படி அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

என்ஜினீயரிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு, ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து தி.மு.க. எம்.எல்.ஏ. எழிலரசன், வக்கீல் பொன்.பாண்டியன் உள்பட பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கிற்கு பதில் அளித்த அண்ணா பல்கலைக்கழகம், ‘ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்யவேண்டும் என்று கடந்த ஆண்டே அறிவித்து விட்டோம். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, கலந்தாய்வில் பங்கேற்பதால் எந்த பாதிப்பும் இல்லை. விண்ணப்பத்தை எளிதாக விண்ணப்பிக்கலாம்’ என்று கூறியிருந்தது.

இந்த வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த நீதிபதிகள் வி.பார்த்திபன், ஆதிகேசவலு ஆகியோர், ‘ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்து, கலந்தாய்வில் கலந்துகொள்ளும் இந்த புதிய முறையினால் கிராமப்புற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அதனால், மாற்று நடவடிக்கையாக விண்ணப்பத்தொகையை நேரடியாகவோ அல்லது கேட்பு காசோலையாகவோ செலுத்த அனுமதிக்கலாமா? என்பது குறித்தும், விண்ணப்பத்தை தமிழில் நிரப்ப அனுமதி வழங்குவது குறித்தும் அண்ணா பல்கலைக்கழகம் பரிசீலித்து இறுதி முடிவை தெரிவிக்கவேண்டும்’ என்று உத்தரவிட்டிருந்தனர்.

அப்போது, ‘தமிழகம் முழுவதும் 42 உதவி மையங்களில் தலா 30 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கிராமப்புற மாணவர்களுக்கு உதவி செய்கின்றனர். விண்ணப்ப கட்டணத்தை ‘கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங்’ மூலமாக மட்டுமே முடியும் என்றும், கேட்பு காசோலை மூலம் பணம் பெறுவதை தொழில்நுட்ப சிக்கல் உள்ளது’ என்று அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் கூறப்பட்டது.

இதற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். மாணவர்கள் கஷ்டப்படக்கூடாது என்பதால்தான் மாற்று கருத்துகளை நாங்கள் தெரிவித்தோம் என்று நீதிபதிகள் கூறினர்.

பின்னர், ‘விண்ணப்பதாரர்களிடம் இருந்து கட்டணத்தை ரொக்கமாக ஏன் பெறக்கூடாது?’ என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதற்கு இன்று (வெள்ளிக்கிழமை) அண்ணா பல்கலைக்கழகம் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Next Story