+2 தேர்வில் தோல்வியடைந்த - தேர்வுக்கு வராத மாணவர்கள் ஜூன் 25-ல் தேர்வெழுதலாம் -செங்கோட்டையன்


+2 தேர்வில் தோல்வியடைந்த - தேர்வுக்கு வராத மாணவர்கள் ஜூன் 25-ல் தேர்வெழுதலாம் -செங்கோட்டையன்
x
தினத்தந்தி 16 May 2018 4:34 AM GMT (Updated: 16 May 2018 4:34 AM GMT)

பிளஸ் டூ தேர்வில் தோல்வியடைந்த மற்றும் தேர்வுக்கு வராத மாணவர்கள், ஜூன் 25ல் மீண்டும் தேர்வெழுதலாம் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். #PlusTwoResults #HSC #Sengottaiyan

சென்னை,

தமிழ்நாட்டில் பிளஸ்–2 தேர்வு மார்ச் 1–ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6–ந் தேதி முடிவடைந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 6 ஆயிரத்து 903 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதினார்கள். அனைத்து மாணவர்களும் தேர்வு எழுத தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2 ஆயிரத்து 942 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தனி தேர்வர்களுடன் சேர்த்து 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் தேர்வு எழுதினார்கள். 

இந்நிலையில் விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு பெற்று இன்று பிளஸ் டூ தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கேஏ செங்கோட்டையன் மாணவ மாணவிகளின் தேர்ச்சி விகிதம் பற்றிய தகவலை வெளியிட்டார். அதன்படி, பிளஸ் டூ பொதுத்தேர்வில் மொத்தம் 91.1 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகள் 94.1 சதவீதமும், மாணவர்கள் 87.7 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம் போல் இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மாவட்டங்களின் அடிப்படையில் விருதுநகர் மாவட்டம் 97 சதவீத தேர்ச்சி பெற்று தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. ஈரோடு மாவட்டம் 96.3 சதவீதம் பெற்று இரண்டாவது இடத்தையும், திருப்பூர் மாவட்டம் 96.1 சதவீதம் பெற்று மூன்றாவது இடத்தையும் அடைந்துள்ளது.

ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதத்தை பார்க்கையில், சென்ற ஆண்டை (92.1 சதவீதம்) விட 1 சதவீத தேர்ச்சி குறைந்துள்ளது.

இந்நிலையில் பிளஸ் டூ தேர்வில் தோல்வியடைந்த மற்றும் தேர்வுக்கு வராத மாணவ, மாணவியர்கள் ஜூன் 25-ம் தேதி மீண்டும் தேர்வெழுதலாம் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மேலும் தனியார் பள்ளிகள் சிறந்த மாணவர்களின் புகைப்படங்களை விளம்பரங்களாக வெளியிடக்கூடாது என்றும், அதையும் மீறி விளம்பரம் செய்யும் தனியார் பள்ளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Next Story