பிரம்மா குமாரிகள் அமைப்பு சார்பில் அகில இந்திய கண்காட்சி பஸ் பேரணி எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்


பிரம்மா குமாரிகள் அமைப்பு சார்பில் அகில இந்திய கண்காட்சி பஸ் பேரணி எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 8 Jun 2018 10:00 PM GMT (Updated: 8 Jun 2018 9:29 PM GMT)

பிரம்மா குமாரிகள் அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அகில இந்திய கண்காட்சி பஸ் பேரணியை முதல்-அமைச்சர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

சென்னை,

இளைஞர்களை சமுதாய மாற்றத்தின் முகவர்களாக ஆக்கப்பூர்வ தன்மையின் அடிப்படையில் ஆக்குவது, தூய்மையின் லட்சியத்தை மக்களிடம் பேண செய்தல், இளைஞர்களை யோகா மற்றும் தியானத்தின் மூலம் அறநெறிகளை வாழ்வில் கடைப்பிடிக்க செய்தல் ஆகிய நோக்கங்களை அடிப்படையாக கொண்டு பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் இளைஞர் பிரிவின் சார்பில் “எனது பாரதம் பொன்னான பாரதம்” என்ற தலைப்பில் அகில இந்திய (நடமாடும்) கண்காட்சி பஸ் பேரணி நடத்தப்படுகிறது.

இந்த பஸ் பேரணியை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள அவருடைய முகாம் அலுவலகத்தில் நேற்று கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

இந்த பஸ் பேரணி கிட்டத்தட்ட 40 நாட்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களுக்கு சென்று ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இளைஞர்கள் கிட்டத்தட்ட மொத்தம் 4 லட்சம் பேர் இந்த கண்காட்சியை கண்டு களிப்பார்கள் என்று கூறியிருக்கின்றார்கள்.

அதிலே 3 லட்சத்து 80 ஆயிரம் இளைஞர்கள் பங்கு பெறுவார்கள் என்ற கருத்தையும் தெரிவித்திருக்கின்றார்கள். ஆகவே இளைஞர்களுக்கு நல்ல ஒழுக்கம் கற்பிக்கவேண்டும். அந்த ஒழுக்கம் எவ்வாறு கற்பிப்பது? என்பதை பற்றி விளக்கமாக, தெளிவாக பஸ்சில் உள்ள வரைபடத்தின் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாம் கடைப்பிடிக்கின்ற ஒழுக்கம் எவ்வாறு இருக்கவேண்டும்? அப்படி அந்த ஒழுக்கத்தை கடைபிடிக்கின்றபோது எப்படி மனம் தூய்மை அடையும்? அகதூய்மை, புறதூய்மை எப்படி அடையப்படும்? அதோடு நல்லொழுக்கம் எப்படி கிடைக்கும்? மன நிம்மதி எப்படி கிடைக்கும்?

ஒரு வளமான வாழ்க்கை எவ்வாறு அமைத்துக்கொள்ளப்படும்? என்ற ஒரு அற்புதமான செய்தியை இந்தப் பஸ்சில் வரைபடம் மூலமாக இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுகின்ற விதத்தில் இந்த பணியை தொடங்கியிருக்கின்றார்கள். அது வெற்றியடைய என்னுடைய வாழ்த்துகளை தெரிவிக்கின்றேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி, முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story