மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது


மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது
x
தினத்தந்தி 9 Jun 2018 9:48 PM GMT (Updated: 9 Jun 2018 9:48 PM GMT)

மேட்டூர் அணையின் நீர்மட்டம் மிகவும் குறைவாக உள்ளது.

மேட்டூர், 

மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி முதல் காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்த பாசனத்தின் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், அரியலூர், கடலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் உள்ள சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்றால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியாக இருக்க வேண்டும். அணைக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கன அடி இருக்க வேண்டும். அப்போது தான் டெல்டா பாசனத்திற்கு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட முடியும்.

இந்த ஆண்டும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் போதிய மழை பெய்யவில்லை. இதனால் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில் அணையின் நீர்மட்டம் மிகவும் குறைவாக உள்ளது.

இந்த நிலையில் 7-ந்தேதி அணையின் நீர்மட்டம் 39.15 கனஅடியாக இருந்தது. அணைக்கு 2 ஆயிரத்து 594 கனஅடி நீர்வரத்து வந்து கொண்டு இருந்தது. நேற்று முன்தினம் நாள் நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 39.42 அடி ஆகும்.

அணைக்கு நீர்வரத்து 2 ஆயிரத்து 190 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து குடிநீருக்காக 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் இந்த ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story