ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளரின் பதவி பறிப்பு புதிய பொறுப்பாளர் நியமனம்


ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளரின் பதவி பறிப்பு புதிய பொறுப்பாளர் நியமனம்
x
தினத்தந்தி 9 Jun 2018 11:00 PM GMT (Updated: 9 Jun 2018 10:41 PM GMT)

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளரின் கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ளது. புதிய பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை, 

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக ஆர்.கே.நகர் கிழக்கு பகுதி பொறுப்பாளர் மருது கணேஷ் போட்டியிட்டார். பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த தேர்தலில் தி.மு.க. டெபாசிட்டை பறிகொடுத்து பரிதாபமாக தோற்றது. தோல்வி குறித்து ஆராய தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்ட குழு கொடுத்த அறிக்கையின்படி, ஆர்.கே.நகர் பகுதி தி.மு.க. கூண்டோடு கலைக்கப்படுவதாக தி.மு.க. அறிவித்தது. சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர் மீதும் நடவடிக்கை பாயும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆர்.கே.நகர் பகுதியில் புதிய நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தி.மு.க.வினரிடம் நேர்காணல் நடத்தி, பொறுப்பாளர்களை நியமித்தார். இந்தநிலையில், ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக களம் கண்ட மருது கணேசிடம் இருந்து கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை வடக்கு மாவட்டம், ஆர்.கே.நகர் கிழக்கு பகுதி தி.மு.க. பொறுப்பாளர் மருது கணேஷ் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக தண்டையார்பேட்டையை சேர்ந்த வெ.சுந்தர்ராஜன் நியமிக்கப்படுகிறார்.

ஆர்.கே.நகர் மேற்கு பகுதி செயலாளர் ஏ.டி.மணி அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக தண்டையார்பேட்டையை சேர்ந்த சா.ஜெபதாஸ் பாண்டியன் நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தந்த பகுதிகளின் பிற நிர்வாகிகள் புதியதாக நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் கிழக்கு பகுதி தி.மு.க.வில் நிலவிய கருத்து வேறுபாடுகளே மருது கணேசின் கட்சி பதவி பறிபோக காரணம் என்று கூறப்படுகிறது. 

Next Story