நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகம் வகுக்க அமித்ஷா நாளை சென்னை வருகை


நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகம் வகுக்க அமித்ஷா நாளை சென்னை வருகை
x
தினத்தந்தி 7 July 2018 11:15 PM GMT (Updated: 7 July 2018 10:58 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகம் வகுப்பதற்காக பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா நாளை சென்னை வருகிறார்.

சென்னை,

பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா, 2019-ம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளார். இதற்காக அவர், நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பா.ஜ.க. நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். 5 வாக்குச்சாவடிகளுக்கு ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டு உள்ளார். இவற்றை சக்தி கேந்திரம் மற்றும் மகா சக்தி கேந்திரங்களாக பிரித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள சக்தி கேந்திரம் மற்றும் மகா சக்தி கேந்திர பொறுப்பாளர்களையும் மாநில தேர்தல் கமிட்டி உறுப்பினர்களையும் சந்திப்பதற்காக அமித்ஷா நாளை (திங்கட்கிழமை) சென்னை வருகிறார்.

நாளை காலை 11 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் அமித்ஷாவை தமிழக பொறுப்பாளரும், பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளருமான முரளிதரராவ், தேசிய செயலாளர் குபேந்திர யாதவ் எம்.பி., மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. தலைவர்கள் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் (தமிழ்நாடு), சுவாமிநாதன் எம்.எல்.ஏ., (புதுச்சேரி) மற்றும் விஷால் ஜோலி (அந்தமான் நிகோபர் தீவு) உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்கின்றனர்.

அதன்பிறகு 11.30 மணிக்கு அமித்ஷா, தரமணியில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர். விருந்தினர் இல்லத்திற்கு சென்று சற்று ஓய்வு எடுக்கிறார். பின்னர், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தங்க கடற்கரையில் உள்ள அரங்கில் தமிழ்நாட்டில் 39 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் புதுச்சேரி, அந்தமான் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் முன்தயாரிப்புக்கான கூட்டம் பகல் 12 மணிக்கு தொடங்குகிறது. இதில் தமிழ்நாடு அரசியல் விவகார குழுவைச் சேர்ந்த 11 பேரிடம் 39 தொகுதிகள் நாடாளுமன்ற தேர்தல் வியூகம் குறித்து அமித்ஷா ஆலோசனை நடத்துகிறார். நாடாளுமன்ற தேர்தலில் செய்ய வேண்டிய வேலைகள் மற்றும் தமிழக அரசியல் சூழ்நிலைகள் குறித்த விவாத நிகழ்ச்சியும் நடக்கிறது. இந்த கூட்டம் பகல் 2 மணி வரை நடக்கிறது.

பின்னர் உணவு இடைவேளைக்கு பிறகு மாலை 3 மணியில் இருந்து 4 மணி வரை சங்க் பரிவார் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகம் வகுப்பது குறித்து விவாதிக்கிறார்.

தொடர்ந்து மாலை 4 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் தேர்தலை சந்திப்பது குறித்து 14 ஆயிரம் சக்தி கேந்திர பொறுப்பாளர்களிடமும், 3 ஆயிரம் மகாசக்தி கேந்திர பொறுப்பாளர்களிடமும் விவாதிக்கிறார். இந்த நிகழ்ச்சியின் போது கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது.

இரவு 7.30 மணியில் இருந்து 8.30 மணி வரை புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்தும், புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் வியூகம் வகுப்பது குறித்தும் அந்த மாநில பா.ஜ.க. நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து இரவு 8.30 மணியில் இருந்து 9.30 மணி வரை அந்தமான் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வியூகம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடக்கிறது. நிகழ்ச்சிகளின் தன்மைக்கு ஏற்ப நேரம் மாறுபட வாய்ப்பு உள்ளது. பின்னர் இரவு தரமணியில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர். விருந்தினர் இல்லத்தில் தங்கி ஓய்வு எடுத்து விட்டு மறுநாள் (10-ந்தேதி) காலை டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை பார்ப்பதற்காக கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் 12-ந்தேதி அமித்ஷா சென்னை வந்தார். அதற்கு பிறகு கடந்த ஆண்டு மே 10 மற்றும் 11-ந்தேதிகளில் சென்னைக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அமித்ஷாவின் பயணம் ரத்து செய்யப்பட்டது.

பின்னர் கடந்த ஆகஸ்டு 22, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் சென்னை, கோவைக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட பயணமும் ரத்தானது. எனவே 1½ ஆண்டுக்கு பிறகு தற்போது அமித்ஷா சென்னை வருவது குறிப்பிடத்தக்கது. 

Next Story