உள்ளாட்சி நிதி தணிக்கை துறைக்கு தனி இணையதளம் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு


உள்ளாட்சி நிதி தணிக்கை துறைக்கு தனி இணையதளம் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
x
தினத்தந்தி 9 July 2018 10:30 PM GMT (Updated: 9 July 2018 10:04 PM GMT)

உள்ளாட்சி நிதி தணிக்கை துறைக்கு தனி இணையதளம் உருவாக்கப்படும் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

சென்னை, 

உள்ளாட்சி நிதி தணிக்கை துறைக்கு தனி இணையதளம் உருவாக்கப்படும் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

நிதித்துறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

உள்ளாட்சி நிதி தணிக்கை துறை

* சென்னை நந்தனத்தில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை கட்டிடத்தில் ரூ.10.98 கோடி மதிப்பீட்டில் சுமார் 50 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் 2 கூடுதல் தளங்கள் கட்டப்படும். நிதித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் மீன்வளத்துறையை சார்ந்த கட்டிடங்கள் அமைந்துள்ள இவ்வாளகத்துக்கு ‘அம்மா வளாகம்’ என பெயரிடப்படும்.

* நெல்லை மாவட்ட கருவூலத்துக்கு சுமார் 21 ஆயிரத்து 400 சதுரஅடி பரப்பளவில் ரூ.3.52 கோடி மதிப்பீட்டில் சொந்த கட்டிடம் கட்டப் படும்.

* கருவூல கணக்குத்துறை பயன்பாட்டுக்காக ரூ.2.44 கோடி மதிப்பீட்டில் 38 புதிய ஜீப்புகள் வழங்கப்படுவதுடன், 38 புதிய டிரைவர் பணியிடங்களும் ஏற்படுத்தப்படும்.

* சார் கருவூலங்கள் இல்லாத வட்ட தலைமையிடங்களில் புதிய சார் கருவூலங்கள் அமைப்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க குழு அமைக்கப்படும்.

* உள்ளாட்சி நிதி தணிக்கை துறைக்கென தனி இணையதளம் உருவாக்கப்படும்.

ஓய்வூதியர் அடையாள அட்டை

* உள்ளாட்சி அமைப்புகளை சார்ந்த ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகால பயன்கள் உள்ளிட்டவற்றை மின்னணு முறையில் அனுமதித்தல் பயன்பாட்டுக்காக கணினி ‘சர்வர்’ வழங்கப்படும்.

* உள்ளாட்சி நிதி தணிக்கை துறை தணிக்கையாளர்களுக்கு ரூ.66 லட்சம் மதிப்பீட்டில் 165 புதிய மடிக்கணினிகள் வழங்கப்படும். 2-வது கட்டமாக ரூ.62½ லட்சம் மதிப்பீட்டில் 250 புதிய மடிக் கணினிகள் வழங்கப்படும்.

* உள்ளாட்சி நிதி தணிக்கை துறையில் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியர் அடையாள அட்டை வழங்கப்படும்.

* கூட்டுறவு சங்கங்களின் கணக்குகள் தணிக்கையின்போது கண்டறியப்பட்ட நிதி முறைகேடுகள், நிதி இழப்புகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் விவரம் ஆண்டறிக்கையாக தயாரிக்கப்படும்.

* பால் கூட்டுறவு சங்கங்களின் தணிக்கை பணிகளை கூட்டுறவு தணிக்கைத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருவது குறித்து ஆய்வு செய்து உரிய முடிவு எடுக்கப்படும்.

* அரசுத்துறை நிறுவன தணிக்கை துறையின் சார்நிலை அலுவலகங்களுக்காக ரூ.23.21 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக தலா 36 கணினிகள், அச்சுப்பொறிகள், ஸ்கேனர்கள் மற்றும் தடையற்ற மின்சாரம் தரும் கருவிகள் வழங்கப்படும்.

* அரசுத்துறை நிறுவன தணிக்கைத்துறையில் ஆய்வாளர் நிலையில் இயங்கிவரும் 10 மாவட்ட அலுவலகங்கள் உதவி இயக்குனர் நிலைக்கு தரம் உயர்த்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story