மதுரையில் இருந்து சென்னைக்கு பஸ்சில் கடத்தப்பட்ட 17 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் 2 பேர் கைது


மதுரையில் இருந்து சென்னைக்கு பஸ்சில் கடத்தப்பட்ட 17 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் 2 பேர் கைது
x
தினத்தந்தி 12 July 2018 8:20 PM GMT (Updated: 12 July 2018 8:20 PM GMT)

மதுரையில் இருந்து சென்னைக்கு பஸ்சில் கடத்தி வரப்பட்ட 17¾ கிலோ தங்க கட்டிகள் திருச்சி அருகே பறிமுதல் செய்யப்பட்டன.

திருச்சி, 

மதுரையில் இருந்து சென்னைக்கு பஸ்சில் கடத்தி வரப்பட்ட 17¾ கிலோ தங்க கட்டிகள் திருச்சி அருகே பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரையில் இருந்து சென்னைக்கு செல்லும் தனியார் சொகுசு பஸ்சில் தங்க கட்டிகள் கடத்தி செல்லப்படுவதாக கோவை மண்டல சுங்க இலாகா வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள் நேற்று முன்தினம் மாலை மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விராலிமலை அருகே உள்ள பூதக்குடி சுங்க சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு குறிப்பிட்ட தனியார் பஸ் வந்ததும் அதில் இருந்த பயணிகளிடம் சோதனை நடத்தினர். அந்த பஸ்சில் இருந்த புதுக்கோட்டையை சேர்ந்த காஜா மொய்தீன் (வயது 44), புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த ஷாஜகான் (42) ஆகியோர் வைத்திருந்த 4 பைகளை சோதனை செய்தனர்.

அதில் ஏராளமான தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. மேலும் அவர்கள் இருவரும் தங்களது இடுப்பு பகுதியில் சுற்றி வைத்திருந்த துணியால் ஆன பெல்ட்டில் தங்க கட்டிகள் மறைத்து வைத்து இருந்ததையும் அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.

இதையடுத்து அவர்களிடம் இருந்து 77 தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 17 கிலோ 830 கிராம் 300 மில்லி எடையுள்ள இந்த தங்க கட்டிகளின் மொத்த மதிப்பு ரூ.5 கோடியே 49 லட்சத்து 17 ஆயிரத்து 324 ஆகும். இதனை தொடர்ந்து காஜா மொய்தீனையும், ஷாஜகானையும் கைது செய்த வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்த தங்க கட்டிகளுடன் திருச்சி சுங்க இலாகா ஆணையர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், திருவாரூர் மாவட்டம் பரவாக்கோட்டையை சேர்ந்த மணி என்பவரிடம் இருந்து தங்க கட்டிகளை வாங்கி கொண்டு சென்னையில் உள்ள அயூப் அலி என்பவரிடம் ஒப்படைக்க இருந்ததாக இருவரும் வாக்குமூலம் அளித்து உள்ளனர். அயூப் அலி யார்? என்பது பற்றி வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து கைதான 2 பேரும் நேற்று திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story