மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி வழக்கு தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு நோட்டீஸ்


மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி வழக்கு தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு நோட்டீஸ்
x
தினத்தந்தி 12 July 2018 10:15 PM GMT (Updated: 12 July 2018 10:01 PM GMT)

மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி வழக்கு தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு நோட்டீஸ்

சென்னை, 

தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை அளவீடு செய்து, அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி தொடரப்பட்ட வழக்கிற்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், ‘மாற்றம் இந்தியா’ அமைப்பின் இயக்குனர் நாராயணன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழகம் மிகப்பெரிய அளவில் குடிநீர் தட்டுப்பாட்டை சந்தித்து வருகிறது. தண்ணீர் இல்லாததால் பயிர் செய்ய முடியாமல் விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

உணவு உற்பத்தி குறைந்துள்ளதால் உணவுபொருட்களின் விலை ஏறிவிட்டது. குடிநீருக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள், குளங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. அவற்றில் ஆக்கிரமிப்பாளர்கள் பல அடுக்கு மாடிகளை கட்டியுள்ளனர். ஏரிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் மக்களுக்கு நீர் ஆதாரம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகள், நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க, தமிழ்நாடு ஏரிகள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றல் சட்டத்தை தமிழக அரசு 2007-ம் ஆண்டு கொண்டுவந்தது.

இந்த சட்டத்தின் படி தமிழகம் முழுவதும் உள்ள ஏரிகளை அளவீடு செய்து அது சம்பந்தமான பதிவேடுகளை தயாரிக்க வேண்டும். வருவாய் ஆவணங்கள் அடிப்படையில் ஏரிகள், குளங்கள், குட்டைகள் கண்டறியப்பட்டு அவை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர முடியும்.

ஆனால் கடந்த 10 ஆண்டுகளாகியும் இந்த சட்டம் அமல்படுத்தப்படவில்லை. இதனால் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

எத்தனை ஏரிகள்?

கடந்த 2017-2018-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசின் கொள்கை விளக்கக்குறிப்பின் படி தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் 39 ஆயிரத்து 202 ஏரிகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இவற்றில் 14 ஆயிரத்து 98 நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த துறையின் கீழ் உள்ள 21 துணை மண்டலங்களில் உள்ள ஏரிகள் அளவீடு செய்யப்படவில்லை.

கீழ் பாலாறு மண்டலம், திருவள்ளூர் கொசஸ்தசலை ஆறு மண்டலம், உள்ளிட்டவற்றில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான ஏரிகளில் மட்டுமே அளவீடு செய்யப்பட்டுள்ளன.

அளவீடு செய்யப்பட்டுள்ள இடங்களில் கூட அரசு அரைமனதுடன் தான் நடவடிக்கை எடுத்துள்ளது. ஏரிகளின் பரப்பு, ஆக்கிரமிப்புகள் குறித்த சரியான தகவல்களைக் கூட அரசு தெரிவிக்க மறுக்கிறது. எனவே, தமிழகம் முழுவதும் உள்ள ஏரிகளை அளவீடு செய்து, அவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை நீதிபதிகள் சத்தியநாராயணன். இளந்திரையன் ஆகியோர் விசாரித்தனர். பின்னர், இந்த வழக்கிற்கு தமிழக அரசு ஆகஸ்டு 16-ந்தேதிக்குள் பதில் தருமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Next Story