திருமணம் செய்த 10 நாட்களில் காதல் கணவரை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய இளம்பெண்


திருமணம் செய்த 10 நாட்களில் காதல் கணவரை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய இளம்பெண்
x
தினத்தந்தி 19 July 2018 10:49 PM GMT (Updated: 19 July 2018 10:49 PM GMT)

திருமணம் செய்த 10 நாட்களில் காதல் கணவரை இளம்பெண் ஒருவர் சரமாரியாக தாக்கினார்.

கோவை, 

காதல் கணவர் தனது கையில் வேறு பெண்ணின் பெயரை பச்சை குத்தி இருந்ததால் ஆத்திரம் அடைந்த இளம்பெண், அவரை நடுரோட்டில் வைத்து சரமாரியாக தாக்கினார்.

திருமணம் செய்த 10 நாட்களில் நடந்த இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

கோவையில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு நேற்று முன்தினம் மாலை புதுமண தம்பதியினரான 25 வயது வாலிபரும், 22 வயது இளம்பெண்ணும் வந்தனர். அப்போது அந்த இளம்பெண் தனது கணவரின் கையில் ஒரு பெண்ணின் பெயர் பச்சை குத்தப்பட்டு இருந்ததை பார்த்தார்.

உடனே கணவர் தனது கையை மறைத்தார். இதனால் சந்தேகம் அடைந்த அந்த பெண், கணவரின் சட்டையை பிடித்து, தரதரவென கோவிலுக்கு வெளியே இழுத்து வந்தார்.

சரமாரியாக தாக்கினார்

பின்னர் அவரிடம், கையில் பச்சை குத்தி இருக்கும் பெண் யார்? என்று கேட்டார். கணவர் மழுப்பியதால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் அவரை சரமாரியாக தாக்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர், அவரிடம் இருந்து தப்பி ஓடினார்.

இருந்தாலும் அந்த இளம்பெண் விரட்டிச்சென்று, சட்டையை பிடித்தும், முடியை பிடித்து இழுத்தும் விடாமல் தாக்கிக்கொண்டே இருந்தார். இப்படி எத்தனை பேரிடம் சொல்லி ஏமாற்றினாய்? என்று கூறி மீண்டும் தாக்கினார்.

இந்த சம்பவத்தை பார்த்து கோவிலுக்கு வந்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு விரைந்து வந்து, இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர்.

இருவரும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததும், 10 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் பொது இடத்தில் இதுபோன்று நடந்து கொள்ளக்கூடாது என்று இருவரையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:-

தாக்கப்பட்ட வாலிபருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. முதல் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதை தெரிந்துதான் அந்த இளம்பெண் அவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

காதல் திருமணம் செய்து கொண்ட 5 நாட்களுக்குள் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சாய்பாபா கோவிலுக்கு வந்த போது கணவர் கையில் வேறு ஒரு பெண்ணின் பெயர் பச்சை குத்தப்பட்டு இருப்பதை பார்த்ததும் ஆவேசம் அடைந்து அந்த பெண் சரமாரியாக தாக்கி உள்ளார். இது தொடர்பாக வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

இவ்வாறு போலீசார் கூறினர்.

பொது இடத்தில் இளம்பெண் தனது கணவரை தாக்கிய வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

Next Story