மாணவிகளை குடைபிடிக்க வைத்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை? அதிகாரி நாளை விசாரணை


மாணவிகளை குடைபிடிக்க வைத்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை? அதிகாரி நாளை விசாரணை
x
தினத்தந்தி 5 Aug 2018 10:45 PM GMT (Updated: 5 Aug 2018 6:30 PM GMT)

மாணவிகளை குடைபிடிக்க வைத்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை? அதிகாரி நாளை விசாரணை

வேலூர்,

விளையாட்டு போட்டிகளின்போது நடுவராக பணியாற்றிய ஆசிரியர்கள் மாணவிகளை தங்களுக்கு குடைபிடிக்க வைத்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக முதன்மை கல்வி அதிகாரி நாளை விசாரணை நடத்துகிறார்.

வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் கடந்த 3–ந் தேதி நடந்தது. இந்த போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகள் மற்றும் 25 வயதுக்குட்பட்டவர்கள் கலந்துகொண்டனர். மதியம் 12 மணியளவில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது.

அப்போது நடந்த பெண்களுக்கான வாலிபால் போட்டியில் நடுவராக இருந்த ஒரு ஆசிரியை வெயிலில் இருந்து தப்பிக்க சுழற்சி முறையில் 2 மாணவிகளை குடைபிடிக்க வைத்தார். போட்டி முடியும் வரை ஆசிரியைக்கு 2 மாணவிகளும் சுழற்சி முறையில் குடைபிடித்தபடி நின்றனர். இந்த புகைப்படம் ‘வாட்ஸ்–அப்’, ‘பேஸ்புக்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவியது.

இதேபோன்று அரக்கோணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சில நாட்களுக்கு முன்பு வட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தன. அப்போது 2 ஆசிரியர்கள் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு ஒரு மாணவியை குடைபிடிக்க வைத்தனர். போட்டி முடியும்வரை அந்த மாணவியும் ஆசிரியர்களுக்கு குடைபிடித்தவாறு நின்றுகொண்டிருந்தார்.

இந்த புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் பரவியது. இதற்கு மாணவிகளின் பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த புகைப்படங்களை கண்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், இதுதொடர்பாக விசாரணை நடத்த வேலூர், அரக்கோணம் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட கல்வி அதிகாரிகள் விளையாட்டு போட்டிகள் நடந்த இடம் மற்றும் புகைப்படங்களில் இருந்த ஆசிரியர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

அதில், மாணவிகளை குடைபிடிக்க வைத்த ஆசிரியர்கள், அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரிந்து வருவது தெரியவந்தது. சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் நாளை (செவ்வாய்க்கிழமை) விசாரணை நடத்த உள்ளார். அதன்பின்னர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Next Story